Thursday, November 30, 2023

இறைவனின் மொழி எது?

மொழி என்றால் என்ன என்று புரியாமல் பலரும் பலவிதமான கற்பிதங்களில் சிக்கி விடுகின்றனர். இறைவன் அரபு மொழியில் பேசுவார் என்று சிலரும், இறைவன் லத்தீன் மொழியில் பேசுவார் இறைவன் நவமான பாசைகள் பேசுவார் என்று சிலரும் பலகாலமாக நம்பி வருகின்றனர். அது அவர்களின் நம்பிக்கை. ஏனென்றால் அவர்கள் கடவுள் என்பதை ஒரு நபராக கருதும் நம்பிக்கைகளை பின்பற்றுபவர்கள்.

சரி, எமது இந்து பாரம்பரிய நம்பிக்கை என்ன? இறைவன் என்ன மொழியில் பேசுவார்.

மொழி என்பது ஒரு தொடர்பாடல் கருவி. இரண்டு தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே தமிழில் தொடர்பாட முடியும். இரண்டு அரபு மொழி தெரிந்தவர்கள் மட்டுமே அரபு மொழியில் தொடர்பாட முடியும். இந்த உலகத்தில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் தமக்குள் தொடர்பாடல் செய்து கொண்டுதான் இருக்கின்றன.

நாம் வளர்க்கும் நாய் பூனை மாடு ஆடு முதலியவை கூட எம்முடன் ஏதோ ஒரு தொடர்பாடலை செய்து கொண்டுதான் உள்ளது. நாம் அவற்றுடன் என்ன பாசையில் பேசுகிறோம். தமிழ், ஆங்கிலம், சீனம் இவ்வாறான மொழிகளிலா பேசுகிறோம். இல்லை அல்லவா.. ஆனால் அவற்றுடன் நாம் தொடர்பாடலை செய்து கொண்டுதானே இருக்கிறோம்.

அதுபோலவே இறைவனும் எம்முடைய ஏதோ ஒரு வகையில் தொடர்பாடலை செய்துகொண்டு இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இறைவன் எந்த மொழிக்கு உரியவர்? தமிழ்தான் இறைவனுக்கு தெரிந்த மொழியா? அரபிதான் இறைவனுக்கு தெரிந்த மொழியா? அந்த மொழி தெரிந்தவர்களுடன் மட்டுமே இறைவன் தொடர்பு கொள்வாரா?

அல்லது இறைவனும் உலகில் உள்ள எல்லா மொழிகளும் தெரியும் அனைவருடனும் தொடர்பு கொள்வாரா? அப்படியானால் இறைவன் மனிதர்களுக்கு மட்டுமானவரா? 

அப்படியானால் இந்த உலகின் உள்ள மற்றைய ஜீவராசிகள் எல்லாம் சில மதங்கள் சொல்வது போல மனிதர்களுக்காக படைக்கப்பட்டவையா?

இல்லை இறைவன் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உரியவர் என்றால் மானிட பாசையை விட மற்றைய ஜீவராசிகளின் பாசையை அறிவாரா? அவற்றுடன் அவற்றின் பாசைகளில்தான் தொடர்பு கொள்வாரா?

இந்துக்களால் மட்டுமே இவ்வாறு சிந்தித்து கேள்விகளை கேட்க முடியும். ஏனைய மதங்கள் என்றால் இறை நிந்தனை என்று கூறி கல்லால் எறிந்து கொன்றுவிடும்.

ஏனைய மதங்களைப் போல இந்துக்கள் கடவுளை நபராக கருதுவதில்லை. இறை என்பதை நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் அமைப்பு (system ) முறையாகவே கருதுகின்றனர். இறைவன் என்ற அந்த இருப்பிற்கு உள்ளேயே இந்த உலகங்கள், உயிர்கள் அனைத்தும் இருப்பதாக கருதுகின்றனர்.

உலகத்தின் அழிவு நாளில் வந்து பாவ புண்ணிய கணக்குப் பார்க்கும் ஒருவராக, தன் புகழ் பாடினால் 50- 100 பெண்களை கொடுத்து மதுவை ஆறாக ஓடவிட்டு போதையில் காமத்தில் திளைத்திருக்க சொல்லும் ஒருவராக கடவுளை கருதுவதில்லை. தன் புகழ் பாடினால் அவன் செய்யும் தவறுகளுக்கான பாவத்தையும் தன் புகழ் பாடாதவன் மேல் சுமத்தி நரகத்தில் வீழ்த்தும் ஆணவக்கரானாக கடவுளை கருதுவதில்லை. 

கடவுள் என்பது ஒரு அமைப்பு முறை. அது யாருடனும் பேசும் தேவையோ, செயற்படும் தேவையோ இல்லாதது. அது மாயையை சாராதது. பேசுவதற்கு செயற்படுவதற்கு தேவையான மாய உடலும் மாய புலன்களும் அதற்கு கிடையாது. மாயை அற்ற தூய வடிவினை உடையவன் இறைவன் என்று நம்புபவர்கள் இந்துக்கள். அவன் ஞான வடிவினை உடையவன் மாயா உடலும் கரணங்களும் அற்றவன் என்று நம்புபவர்கள் இந்துக்கள்.

அதனால்தான் இறைவன் பேசுவதில்லை அனைத்தையும் கவனித்துக் கொண்டு இருக்கிறான், நானும் அவனுடன் எதுவும் பேசுவதில்லை அனைத்தையும் கவனித்துக் கொண்டு இருக்கிறான் என்று அந்நாளில் ஞானிகள் கூறியுள்ளார்கள்.

ஆம், இறைவன் பேசுவதில்லை. அது ஒரு மௌன நிலை. சப்தத்தால் மௌனத்தை உணர முடியாது. மௌன நிலையிலேயே மௌனத்தை உணர முடியும். அதனால்தான் மௌன நிலையில் இருந்து தியானிப்பதை இறைவனை உணரும் வழிமுறையாக இந்துக்கள் கொண்டுள்ளனர். 

இறைவனின் மொழி என்பது மௌனமே. அதை கேட்க முடியாது. உணர்ந்து கொள்ளவே முடியும். மனத்தை அடக்கி மௌன நிலையில் இருந்து இறைவனை தியானிப்பது ஒன்றே இறைவனின் மொழியை கிரகிப்பதற்கான ஒரே வழி.

சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்வது என்பது இறைவனுடன் உரையாடுவது கிடையாது. பல்வேறு மொழிகள் பேசும் மக்களுக்கு பொதுமைப்பாடான முறையில் பூசை வழிபாடுகளில் ஈடுபடும் முறையே சமஸ்தானத்தில் பூசை செய்வதும் அர்ச்சனை செய்வதும். 

இறைவனை நபராக கருதும், அவனுடன் உரையாடலாம் என்று நம்பும், உங்கள் அன்னிய மத சிந்தனைகளுடன் இந்துக்களின் வாழ்வியலைப் பொருத்திப் பார்க்காதீர்கள். உங்கள் தவறான சிந்தனைகளை திருப்திப்படுத்த இந்துக்களின் ஞானத்தால் முடியாது. நீங்கள் விரும்பினால் இந்துக்களின் ஆன்மீக ஞானத்தின் ஆழத்தை சற்று அறிந்து கொள்ளுங்கள்.

#சர்வம்_சிவமயம்



Tuesday, November 14, 2023

யார் இந்த சாளம்பன்? இலங்கை தமிழர்கள் என்பவர்கள் யார்?

இலங்கையில் பல ஊர்கள் சாளம்பன் என்ற பெயரைத் தாங்கி நிற்கிறது. 

சாளம்பன், மன்னார்
சாளம்பன், பூநகரி
சாளம்பன், ஒட்டுசுட்டான்
பெரிய சாளம்பன், ஒட்டுசுட்டான்
சாளம்பன் குளம், ஒட்டுசுட்டான்
சாளம்பன் தீவு, கச்சாய்
சாளம்பன் வில்லு, பூநகரி 
சாளம்பன், பாண்டியன்குளம்
சாளம்பன், பொறிக்கடவை(பரந்தன்)
சாளம்பன் குளம், வவுனியா
சாளம்பன், வவுனியா

இப்படி பல கிராமங்கள் இப்போதும் சாளம்பன் பெயரிலேயே இருக்கிறது. 

சாளம்பன் என்றால் யார்?

யார் இந்த சாளம்பன்? 

எதற்காக சாளம்பனின் பெயரை ஊர்கள் தோறும் வைத்திருக்கிறார்கள்.

சாளம்பன் என்பவன் காமரூப பேரரசை கைப்பற்றி ஆண்ட மிலேச்ச குல மன்னர்களில் ஒருவன்.

காமரூப பேரரசு என்பது இன்றைய இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களையும் வங்காளம் பூட்டான் போன்ற பகுதிகளையும் உள்ளடக்கிய ஒரு பழைய பேரரசு ஆகும்.

இந்த காமரூப பேரரசை மிலேசசர்கள் கைப்பற்றி ஆண்டுள்ளனர். பொ.ஆ 650-900 வரை மிலேச்ச குல அரசர்கள் ஆண்டதாக அவர்களது பதிவுகள் குறிக்கின்றது. அவ்வாறு ஆண்டவர்களை மிலேச்ச குல மன்னர்கள் என்றும் குறிப்பிடுகிறாரங்கள்.

இந்த மிலேச்ச குல மன்னர்களில் ஒருவனே இந்த சாளம்பன். சாளம்பனுக்கு முன்னர் அந்த ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னன் ஒருவனது பெயர் விஜயா(விஜயன்).

இன்று சாளம்பன் என்ற பெயர்களில் இருக்கும் ஊர்களில் உள்ள பழைமையான மக்கள் இந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த மக்களின் கலப்பு முகத்தோற்றத்தை உடையவர்களாகவே இருக்கிறார்கள்.

இந்த காமரூப பேரரசை ஆண்ட மிலேச்ச குல அரசர்கள் தம்மை நரகாசுரன் வம்சம் என்று அடையாளப்படுத்திக் கொண்டார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த காமரூப பேரரசு இன்றைய அசாம் மாநிலத்தை மையமாக கொண்டு அமைந்திருந்தது. இலங்கை வரலாறும் விஜயன் லாலா நாட்டில் இருந்து வந்தவன் என்று கூறுகிறது. லால நாடு என்பதும் இந்த அசாம் பகுதியில் உள்ள ஒரு நாட்டையே குறிக்கும்.

விஜயன் இலங்கைக்கு வந்து ஆட்சிசெய்த பகுதியாக இன்றைய மன்னார் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளையே குறிப்பிடப்படுகிறது. அந்த பகுதிகளிலேயே அதிகளவான ஊர்கள் சாளம்பன் என்ற பெயரில் உள்ளது.

விஜய வம்சம் என்று குறிப்பிடப்படும் மக்கள் பலர் இலங்கை தமிழர்கள் என்று சொல்லப்படும் மக்களே. அசாமிய பாண்டிய கலப்பு இனமாகவே இலங்கை தமிழர்கள் இருக்கிறார்கள். வேறு நாடுகளுக்கு சென்றால் இலங்கை தமிழர்கள் வங்காளிகளா என்ற கேள்வியை இன்றுவரை எதிர்நோக்கும் நிலையே காணப்படுகிறது. அதாவது வங்காளிகள் இலங்கை தமிழர்கள் இருவரும் ஒத்த தோற்றத்தை உடையவர்களாகவே உள்ளார்கள்.

(காமரூப அரசர்கள் நரகாசுரன் வம்சத்தினர் என்று அசாமியர்கள்தான் கூறுகின்றனர். காளிகா புராணத்திலும் நரகாசுரனை வதைத்த கதை வருகிறது. அதுவும் சக்தி வழிபாட்டின் வகைகளைப் பற்றி விவரிக்கும் புராணமாகும். நரகாசுரனை வதைத்தது காளிதேவியின் அம்சமாகும். இது பெண் தெய்வ வழிபாட்டு நிகழ்வாகவே இருக்கிறது.

வைணவ மயப்பட்ட நரகாசுரன் கதையில் கூட கிருஷ்ணன் வதைப்பதாக இல்லாமல் சத்தியபாமா என்ற பெண் அம்சமே வதைப்பதாக உள்ளது)






Sunday, November 12, 2023

யார் அந்த நரகாசுரன்? ஏன் இந்த தீபாவளி?

நர+கா+ சுரன் என்றால் மனிதர்களின் இருளில் உதித்தவன் என்று பொருள். நர என்றால் மனிதர் என்றும், கா என்றால் இருள் என்றும், சுரன் என்றால் உதித்தவன் என்றும் பொருள்.

இங்கே இருள் என்பது மனிதரின் இருள்மலமான ஆணவத்தை குறிக்கும். மனிதர்களின் ஆவணத்தில் இருந்து தோன்றியவன் இந்த நரகாசுரன். ஒவ்வொரு மனிதருக்கும் உள்ளே இந்த நரகாசுரன் என்ற தீயவன் இருக்கிறான். மனிதர்கள் அறிவு பெறும் போது அறியாமையால் உருவான நரகாசுரன் மறைந்து போகிறான்.

ஆணவம் என்பது அறியாமையால் தோன்றுவது. இங்கே அறிவு என்பது பள்ளிப் பாடமோ, பட்டப்படிப்போ கிடையாது. எது மனிதர்களது அஞ்ஞானத்தை- அறியாமையை போக்குகிறதோ, எது ஆணவத்தை நீக்குகிறதோ அதுதான் உண்மையில் அறிவு என்பது. பள்ளியில் பயில்வதும் கல்லூரியில் கற்பதும் அறிவு கிடையாது. அவை வெறும் தகவல் அறிதல்கள்.

இந்த தீபாவளி திருநாள் உருவான நரகாசுர வதம் செய்த கதையில் மாயவனான கண்ணனால் நரகாசுரனை வதம்செய்ய முடியாமல் சத்தியபாமாவே நரகாசுரனை வதம்செய்வார். அது ஏன்?

கண்ணன் என்ற மாயவன் மாயையின் உருவகம். மாயையே உயிர்களுக்கு ஆசைகளை உண்டுபண்ணி அறிவை மயக்குகிறது. மாயையிலேயே ஆணவம் உருவாக்குகிறது. எதனால் ஆணவம் உருவாகியதோ எதனில் ஆணவம் உருவாகியதோ அதனாலேயே ஆணவத்தை எப்படி அழிக்க முடியும்? அதனால்தான் மாயையின் துணையான சத்தியபாமா நரகாசுரனை அழிக்கிறார்.

மாயை ஆணவத்தை உருவாக்கினாலும் அந்த மாயை மெய்ப்பொருளில் நின்றே தோன்றுகிறது. மெய்ப்பொருளே மாயையாக உயிர்களுக்கு தோன்றுகிறது என்றும் கொள்ளலாம். அவ்வாறு மெய்பொருளில் நின்று தோன்றிய மாயைக்கு மெய்ப்பொருளே துணையாகவும் இருக்கிறது. அதனால்தான் மாயவனின் துணையை சத்திய பாமா என்கிறோம். சத்தியம் என்றால் உண்மை. மாயையின் துணையாக மாயையின் பின்னால் இருப்பது உண்மை. அதுதான் மெய்ப்பொருள்.

இங்கே நரகாசுரன் கதையில் மாயவனின் பின்னால் நின்று சத்தியபாமா நரகாசுரனை அழிக்கிறார். நாம் வாழ்வது மாயை சார்ந்த வாழ்வைத் தான். இந்த மாயையில் நின்றே நாம் உண்மையை உணர்ந்து கொள்ள முடியும். நாம் கடவுளை வழிபடுவதும் மாயையில் நின்றே. கடவுள் எமக்கு உண்மையை உணர்த்துவதும் மாயையின் மூலமே. கடவுள் எம் அறியாமையை நீக்குவதும் மாயையில் நின்றே.

எம் எல்லோருக்குள்ளும் இருக்கும் நரகாசுரன் என்ற அறியாமையால் உருவான அரக்கனை அழிப்பதற்கு மெய்ப்பொருளாம் இறைவனது துணை வேண்டும். இறைவனின் அருளை மாயையை சார்ந்து நின்று வழிபடுவதன் மூலமே அடையமுடியும். இந்த ஒப்பற்ற தத்துவத்தை விளக்கும் திருநாளே தீபாவளி திருநாள்.

எம்முள் இருக்கும் நரகாசுரன் கொல்லப்படும் போது அகஒளி பரவும். உண்மையை உணர்ந்து கொண்டாடுவோம்.

அனைவருக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.



Friday, August 4, 2023

பிரபஞ்சம் தோன்றுவதற்கு எது காரணம்?

படைப்பின் கடவுள் யார்?
பிரம்மா, மாயவன், சக்தி, சிவம்..

நாம் கண்ணால் பார்க்கக்கூடிய பிரபஞ்சம் உண்மையானது கிடையாது, அது உண்மை என்று உயிர்களுக்கு தோன்றுவதற்கு மாயையே காரணம். மாயை என்பது அறிவின் மயக்கம். அறிவின் மயக்கத்தினால் இந்த உலகம் உண்மையானதாக தோன்றுகிறது, அவ்வாறு அறிவை மயக்குவது ஆன்மாவுடன் சேர்ந்து நிற்கும் ஆணவமே ஆகும். அதனால்தான் உயிர்களுக்கு இந்த உலகம் தோன்றுவதற்கு மாயவனே முதற்காரணம் என்று கூறுகிறார்கள்.

மாயவன் என்றால் இருள் மலம் எனப்படும் ஆணவத்தின் குறியீடு. ஆணவத்தினால் தான் மாய நிலை உயிர்களுக்கு தோன்றுகிறது. அதனால்தான் மாய நிலையை உருவாக்குபவன் என்னும் பொருளில் மாயவன் என்கிறோம். அவன் உயிர்களுக்கு இருளாக இருப்பவன் என்னும் பொருளில் கிருஷ்ணன் என்கிறோம்.

உயிர்களுக்கு உலகங்கள் உண்மை என்று தோன்றுவதற்கு மூல காரணம் மாயவன் என்றால், இந்த உலகங்கள் இல்லையா? இல்லை ஏதாவது ஒன்று இருக்கிறது அதுதான் வேறு விதமாக தோன்றுகிறதா? அப்படியானால் அந்த ஏதாவது ஒன்று தோன்றுவதற்கு உண்மையாக யார் காரணம்? 

நாம் காணும் உலகங்கள்/ பிரபஞ்சம் என்பவை உண்மையான தோற்றம் இல்லை என்றாலும் அங்கு அவ்வாறு ஒன்று இருக்கிறது. இறைவனின் ஆற்றல் நிலையில் ஆன்மாக்கள் நின்று செயலாற்றும் நிலையே மாயையினால் பிரபஞ்ஞசமாக தோன்றுகிறது.

இறை சக்தியில் ஆன்மாக்களின் சேர்க்கையும் செயல்களுமே உடலாக உலகமாக பிரபஞ்சமாக என்று தோன்றுகின்றது. இங்கே பொருட்களாக நாம் காண்பவை அனைத்தும் ஆற்றலின் நிலைகளே. இது அறிவின் வெளிப்பாட்டால் ஆற்றல் நிலை என்றும், ஆணவம் உண்டாக்கும் மாயையால் பிரபஞ்சம் என்றும் உடல் என்றும் ஆன்மாக்களுக்கு தோன்றுகிறது. 

மனித உடலை அனுபவப் பொருளாக கொண்டு அனுபவிக்கும் ஒரு ஆன்மா எமக்குள் இருப்பது போல, இந்த பிரபஞ்சம் என்பதை அனுபவப் பொருளாக கொண்டு ஒரு ஆன்மா இருக்கிறது. அதுதான் பிரம்மா எனப்படுகிறது.

மனிதன் எப்படி அனைத்து செயல்களையும் தானே செய்வதாக எண்ணுகிறானோ, அதுபோலவே இந்த பிரபஞ்சம் முழுவதும் நடக்கும் அனைத்தும் தன்னால் செய்யப்படுவதாக பிரம்மா எண்ணிக்கொள்கிறான். ஆனால் பிரம்மன் என்பவனும் நியதியின் படி பிறப்பு இறப்பு என்னும் சுழற்சி நிலைக்கு உட்பட்ட ஒரு ஆன்மாவே ஆகும்.

இந்த பிரபஞ்சம் முழுவதும் நடக்கும் செயல்களை அனுபவிக்கும் ஆன்மா பிரம்மா எனப்படுகிறது.

இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு காரணமான அறிவை மயக்கும் மாயையை உண்டாக்கும் ஆணவ நிலை மாயவன் எனப்படுகிறது.

மாயையை நீக்கி பார்த்தால் தெரியும் இறைவனின் ஆற்றல் நிலை சக்தி எனப்படுகிறது. 

இந்த ஆற்றல் நிலைகளை கடந்து வெளிப்படா நிலையில் இருக்கும் ஆற்றல் மூல பேரிருப்பு சிவம் எனப்படுகிறது.

பெரும்பாலான இந்துக்கள் ஏன் பிரம்மனை வழிபடுவதைக் கைவிட்டார்கள் என்றால் இதுதான் காரணம். அவனது விருப்பம் தேவை எதுவும் ஆன்மாக்களுக்கு தேவைப்படவில்லை. அவனும் எம்மைப் போன்ற ஒரு ஆன்மாவே, இல்லை அப்படியும் சொல்ல முடியாது மனிதர்கள் கூட சுய விருப்புடன் செயலாற்ற முடியும். ஆனால் பிரம்மா என்பது வெறும் பிரபஞ்ச அனுபவத்தை அனுபவிக்கும் ஒரு நிலையே என்று கருதினார்கள். அதனால் ஏன் வழிபட வேண்டும் என்ற எண்ணம் தோன்றி பிரம்மனை கைவிட்டு விட்டார்கள்.

ஆனால் மாயவன் இல்லாவிட்டால் இந்த உலக வாழ்க்கை இல்லை என்று ஆகிவிடும். பொதுவாக நாம் அனைவரும் உலகியல் வாழ்க்கை மீது பற்றுதல் உடையவர்கள். இவை எல்லாம் பொய் என்று ஆகிவிட்டால் இந்த வாழ்வை வாழமுடியாது. நாம் உலகியல் வாழ்வை வாழ்வதற்கு இந்த மாயை ஆணவம் எல்லாம் அவசியம் ஆகிறது. அதனால்தான் உலகியல் இன்பங்களை அனுபவிக்க விரும்புபவர்கள் மாயவனை கிருஷ்ணனை வழிபடுகிறார்கள்.

மாயையில் தோன்றினாலும், உண்மை நிலையில் நின்று பார்த்தாலும் எல்லாம் சக்தியின் வடிவமாகவே உள்ளது. அதனால் உலகியல் வாழ்விலும் சரி, முக்தியை நோக்கிய பயணத்திலும் சரி சக்தியின் தேவை தவிர்க்க முடியாதது. சிவத்தை நோக்கி ஆன்மா பயணிக்க வேண்டும் என்றாலும் அதற்கும் சக்தி தேவை. அதனால் உலகவாழ்வை விரும்புபவர்கள் முக்தி நிலையை வேண்டுபவர்கள் இருவருமே சக்தியை வழிபடுகிறார்கள்.

முக்தி நிலையை வேண்டுபவர்களும், உலக வாழ்வில் இருந்து கொண்டே அமைதியை, ஞானத்தை வேண்டுபவர்களும் சிவத்தை நோக்கி நிற்கிறார்கள். சிவத்தை வழிபடுகிறார்கள்.

இப்போது சிந்தித்து பாருங்கள். இந்த பிரபஞ்சம் என்பது சிவ சக்தியில் இருந்து தோன்றினாலும் பிரம்மா எனப்படும் அந்த ஆன்மாவில் தோன்றிய ஆணவத் தூண்டலே காரணமாக இருக்கிறது. 

பிரம்மா என்ற அந்த ஆன்மா இருந்தால் தானே அதற்கு தூண்டல் உண்டாக முடியும். ஆகவே பிரபஞ்ச படைப்பின் காரணம் பிரம்மா என்றே கொள்ளவேண்டும். அதனால்தான் பிரம்மனை படைப்பின் கடவுளாக குறிப்பிடுகிறார்கள்.

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -48



இந்த ஆலயத்தை வழிபட்டால் காதல் கைகூடுமாம் -மோகவன கோட்டம்

 ஒரே இடத்தில் 11 தெய்வங்கள்

பண்டார வன்னியனுக்கு என்று தனியான சந்நிதி.. 

இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதி.. இலங்கையில் இவ்வாறான ஒரு கோயில் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்?

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் ஓர் எல்லைக் கிராமமான விசுவமடு கிராமத்தில், விசுவமடு குளத்தின் கிழக்குக் கரையில், வனப்பகுதியை எல்லையாகக் கொண்டு அமைந்துள்ளது இந்த கோயில் கோட்டம். இதற்கு மோகவன கோட்டம் என்று ஒரு பெயரும் உள்ளது.

கிராம மக்களால் வீரபத்திரர் கோயில் என்று அழைக்கப்பட்டாலும் சிவன் அம்மன் முருகன் நாகதம்பிரான் அனுமன் என்று கடவுள் மற்றும் தெய்வங்களாக பதினொரு பேர் ஒரே வளாகத்தில் இருந்து அருள்கின்றனர். 

இது மிகவும் பழைமை வாய்ந்த வரலாற்று தொன்மை மிக்க ஆலயம் என்று மக்கள் குறிப்பிடுகிறார்கள். பண்டார வன்னியன் குருவிச்சிநாச்சி காதல் கதையுடன் சம்பந்தம் உள்ள கோயில் என்று சிலர் கூறுகின்றனர். குருவிச்சிநாச்சி என்பவள் வன்னிப் பகுதியை ஆண்ட கடைசி மன்னன் பண்டார வன்னியனின் காதலி. தன் காதல் கைகூட பண்டார வன்னியன் வழிபட்ட தலம் என்றும், காதல் கைகூடியதால் பண்டார வன்னியன் கோயிலை புனர்நிர்மாணம் செய்வித்தான் என்றும் கர்ண பரம்பரை கதைகள் கூறுகின்றன. 

பண்டார வன்னியனுக்கு என்று தனியான சந்நிதி ஒன்றும் இங்கு அமைந்துள்ளது. பண்டார வன்னியன் தெய்வமாக போற்றப்பட்டு பூசை செய்யப்படும் ஒரே இடம் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

இந்த ஆலயத்திற்கு வந்து வீரபத்திரரை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பதும் நிறைவேறாத காதல் கைகூடும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. இந்த ஆலயத்தைப் பற்றி அறிந்து யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மலையகம் என்று பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிலர் வந்து வழிபட்டு செல்கின்றனர். காதலர்கள் இருவரும் சேர்ந்து இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டால் காதல் விரைவில் கைகூடும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. அதனால் தூர இடங்களில் இருந்தும் சில காதலர்கள் வந்து செல்கின்றனராம். 

இவை எல்லாவற்றையும் கடந்து இந்த ஆலயம் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் வன எல்லையில் அமைந்துள்ளது. உயர்ந்து வளர்ந்த மரங்கள். அமைதியான சூழல். குளிர்மையான காற்று. தெய்வங்களுக்கு என்று சேர்ந்தும் தனித்தும் என்று பல சந்நிதிகள் என்று ஒவ்வொன்றும் இரசித்து அனுபவிக்கும் வகையில் உள்ளது.

நிச்சயமாக எமக்கொரு சந்தர்ப்பம் கிடைத்தால்..

இல்லை இல்லை.. ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கி நாம் அனைவரும் செல்ல வேண்டிய இடம். ஒருமுறை சென்றால் மீண்டும் மீண்டும் செல்லத் தூண்டும் அதுதான் மோகவன கோட்டம்.

ஆம், இதற்கு மோகவன கோட்டம் என்று பெயர்.







மரணத்தின் பின் ஆன்மா என்ன செய்யும்?

உடல்தான் உருவாகிறது வளர்கிறது அழிகிறது. ஆனால் ஆன்மாக்களுக்கு அழிவு என்பது கிடையாது. அப்படியானால் மரணத்தின் பின்னர் ஆன்மாக்கள் என்ன செய்யும்?

உங்களை எந்த ஒரு சத்தமும் கேட்காத ஒரு இருட்டு அறையில் கை கால்களை கட்டிப் போட்டு வைத்திருக்கிறார் என்று கற்பனை செய்யுங்கள். உங்களுக்கு பசி தூக்கம் எதுவும் வராமல் செய்யப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இப்போது என்ன செய்வீர்கள். உங்களால் என்ன செய்ய முடியும். 

ஆம், மரணத்தின் பின்னர் ஆன்மாக்கள் இவ்வாறுதான் இருக்கும். அதற்கு உடல் என்னும் கருவி இப்போது இல்லை. அதனால் எதனையும் பார்க்க முடியாது, கேட்க முடியாது, தொட முடியாது,சுவைக்கவோ மணக்கவோ முடியாது. அதனால் நடமாடவோ யாருடனும் போசவோ என்று எதுவும் முடியாது. இப்போது அந்த ஆன்மாக்களால் செய்யக்கூடியது அந்த ஆன்மாவின் ஞாபகத்தில் இருக்கும் விடயங்களை அசைபோடுவது மட்டும் தான்.

நல்ல செயல்களை செய்து மகிழ்ச்சியான நினைவுகளை வைத்திருக்கும் ஆன்மாக்கள் அந்த நினைவுகளால் மகிழ்ந்திருக்கும். தீய செயல்களை செய்து கோபம் விரக்தி வஞ்சகம் துக்கம் செயல்விருப்பம் என்பவற்றை நினைவுகளில் கொண்டிருக்கும் ஆன்மாக்கள் துன்பத்தில் வருந்தி உழலும். 

நாம் ஒரு கெட்ட கனவு காணுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த கனவு தரும் துயரம் எவ்வளவு கொடுமையானது என்று கற்பனை செய்து பாருங்கள். அந்த கனவில் இருந்து விழித்தால் மட்டுமே அந்த துயரத்தில் இருந்து நாம் விடுபட முடியும். இங்கே மரணத்தின் பின் துயரப்படும் ஆன்மாக்கள் உடனே விழித்து அந்த துயரத்தில் இருந்து விடுபட முடியாது. 

நாம் உடலோடு இருந்தாலும், உடல் இல்லாமல் இருந்தாலும் ஆன்மா தான் எல்லாவற்றையும் அனுபவிக்கிறது. மரணத்தின் பின்னர் தான் வாழ்ந்த வாழ்க்கை பற்றிய நினைவுகளை உடல் என்ற மாயையை நீங்கி நின்று பார்க்கிறது. அவ்வாறு ஆன்மாக்கள் தாங்கள் செய்த நற்செயல்களால் அனுபவிக்கும் நல்ல நினைவுகளால் ஆன மகிழ்ச்சியாக அனுபவமே சொர்க்கம் எனப்படுகிறது.

தீய செயல்களை செய்த ஆன்மாக்கள் தாம் செய்த தீய செயல்களின் விளைவாக அனுபவிக்கும் கொடுமையான நினைவுகளும், அது அனுபவிக்கும் துயரமுமே நரகம் எனப்படுகிறது. இவ்வாறு நரக அவஸ்தையை அனுபவிக்கும் ஆன்மா, அந்த கொடும் துயரத்தை அனுபவித்து அனுபவித்து களைப்படைந்த பின்னர் அதிலிருந்து விடுபட துடிக்கும். ஆனால் அது விடுபடுவதற்கான ஒரேயொரு வழி மீண்டும் ஒரு பிறப்பை எடுப்பதுதான். 

இறைவன் விரும்பு வெறுப்பு அற்றவன். அவன் ஆன்மாக்களின் விருப்பங்களை ஒருபோதும் தடை செய்வதில்லை. அதனால் நரக துன்பத்தை தாங்க முடியாமல் மீண்டும் பிறப்பு ஒன்றினை எடுக்க விரும்பும் ஆன்மாவை அதற்கு அனுமதிக்கிறான். ஆனால் அந்த ஆன்மாவில் எஞ்சி நிற்கும் கர்மபலனால் நற்பிறவி கிட்டாமல் மீண்டும் ஒரு இழிவான பிறவியே கிட்டுகிறது.

ஆனால் நற்செயல்களை செய்து சொர்க்க நிலையில் மகிழ்ச்சியை அனுபவிக்கும் ஆன்மாக்கள் நீண்ட ஓய்வின் பின்னர் முக்தி நிலையை நோக்கி இருந்ததைவிட ஓர் உயர்ந்த பிறப்பை எடுக்கிறது.

அவ்வாறு உயர் பிறப்புக்களை எடுத்து தமது கர்ம கணக்குகளை நீக்கும் ஆன்மாக்கள் பிறப்பு சுழற்சியில் இருந்து விடுபட்டு முக்தி நிலையை அடைகின்றன.

நாம் எமது வாழ்வில் எதனை சேமிக்க போகிறோம். பணம் புகழ் பதவி சொந்தங்கள் நண்பர்கள் இவற்றையா? அல்லது நம் வாழ்வின் அடுத்த நிலைக்கு எம்மை உயர்த்தும் நற்பலன்களையா? 

நரகத்தீ என்பது விறகு கொண்டு மூட்டும் நெருப்பல்ல, அது நினைவில் எழும் தீ.. விறகுத் தீயை நீரூற்றி அணைக்கலாம். நினைவுகளை எப்படி அணைப்பது?

தனிமையில் முழுஇருளில் நிசப்தத்தில் எந்த ஒரு அசைவும் இன்றி கண்கள் மூடி விழித்திருந்து பாருங்கள். உங்களால் மகிழ்ச்சியாக நின்மதியாக இருக்க முடிகிறதா என்று பாருங்கள். மரணத்தின் பின்னர் எது வரையறை என்று தெரியாத காலத்திற்கு நாம் அவ்வாறுதான் இருக்கப் போகிறோம் என்று உணர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் உடல் நீங்கும் போது எந்தப் புலனும் கிடையாது. எதையும் அறியவோ செய்யவோ முடியாது. ஓய்வின்றி வரும் இந்த நினைவுகள் மட்டுமே உங்களுடன் இருக்க போகிறது. உங்கள் நினைவுகளே சொர்க்கத்தை நரகத்தை உங்களுக்கு வழங்கப் போகிறது. மரணத்தின் பின்னும் மகிழ்ச்சியைத் தரக்கூடியது எதுவோ அதை மட்டுமே செய்வோம்.

#சர்வம்_சிவமயம்



Thursday, July 20, 2023

பிரபஞ்சம் எதனால் ஆனது?

பிரபஞ்சத்தின் தோற்றம் இறைவனின் தோற்றமா?

இந்த பிரபஞ்சமே உண்மை என்பது உலகாயதம்..
இந்த பிரபஞ்சம் உண்மை என்பது வைணவம்..
இந்த பிரபஞ்சமே மாயை என்பது ஸ்மார்த்தம்...
இந்த பிரபஞ்சம் மாயையால் தோன்றுவது என்பது சித்தாந்தம்..

இந்த பிரபஞ்சமே உண்மை என்று கூறுபவர்கள் இந்த ஜடப்பொருளும் அதன் ஆக்கமும் பற்றி எந்த ஒரு ஆராய்ச்சிக்கும் போவதில்லை. அது அவ்வாறே இருக்கிறது என்று கொள்கிறார்கள். இதை எப்படி இல்லை என்று சொல்லலாம் என்று நினைக்கிறார்கள். இன்றைய அறிவியல் என்பது கூட இந்த பிரபஞ்சமும் ஜடப்பொருளும் உண்மை என்ற அளவிலேயே தனது தேடல்களை தொடர்கிறது. அது தவறில்லை. அது அவர்களின் அறிவு வரம்புக்குள் சரியாக இருக்கலாம். 

ஆனால் பிரபஞ்சமே மாயை என்பதும், இந்த பிரபஞ்சம் மாயையால் உருவானது என்பதும் சற்று ஆழமான பார்வை. ஒன்றுமில்லை என்று சொல்லக்கூடிய அளவில் உள்ள ஒன்று ஒரு பெரிய உருவமாக தோன்றுகிறது என்ற உண்மையே இந்த பிரபஞ்சம் மாயையால் உருவானது என்பதன் அடிப்படை. இங்கே நாங்கள் ஜடப்பொருள் என்று சொல்பவை அனைத்தும் ஆற்றலின்  தொடுகை உணர்வுள்ள ஒரு தோற்றநிலை மட்டுமே. இந்த ஆழமான உண்மையின் அடிப்படையில் நின்றே இந்த பிரபஞ்சம் முழுவதும் மாயையால் தோன்றுகிறது  என்று கூறுகிறார்கள். 

உண்மையில் மாயை என்பது ஜடப்பொருளோ ஜடப்பொருளின் மூலமோ கிடையாது. மாயை என்பது ஆற்றலை ஜடப்பொருளாக காட்டிநிற்கும் நிலையாகும். நாம் ஜட பொருட்கள் என்று சொல்பவை அனைத்தும் ஆற்றலின் தொடு உணர்வுள்ள காட்சி நிலைகள்.

இந்த மாயநிலை என்பது ஆற்றலின் ஒரு நிலையே. நாம் பஞ்ச பூதங்கள் என்று சொல்பவை அனைத்தும் ஆற்றலின் வேறு வேறு நிலைகளே அன்றி வேறு வேறு பொருட்கள் கிடையாது.

ஆற்றல் இந்த மாயா நிலையில் காக்கப்படும் வரையிலேயே அது ஜடபப்பொருளாகவோ , அல்லது பஞ்சபூதங்களாகவோ இருக்கும். இவ்வாறு ஆற்றலை பஞ்சபூதங்களாக காட்டும் மாயா நிலை காக்கபடுவதை செய்வதை மாயவன் என்கிறோம். மாயவன் என்றால் இந்த மாயா நிலையை காத்து நிற்பவன் என்று கொள்ளலாம். 

இந்த பிரகிருதி எனும் படைப்பின் எல்லைக்குள் மட்டுமே இந்த மாயை என்னும் நிலை இருக்கிறது. படைப்பின் எல்லைக்கு வெளியே இந்த மாயை தோன்றாது. 

ஆன்மாக்களின் அறிவை மறைத்து மயக்கத்தை உண்டாக்குவது இருள் மலம் எனப்படும் ஆணவமே, இது ஆன்மாகளுடன் அனாதி முதல் சேர்ந்தே இருக்கிறது. இந்த அறிவின் மயக்கமே ஆற்றலை ஜடமாகவும், பஞ்ச பூதமாகவும், இந்த பிரபஞ்சமாகவும் காட்டி நிற்கின்றது. 

இந்த ஆணவம் விலகி முழுமையான அறிவு தோன்றும் போது இவை எல்லாம் ஆற்றலின் நிலைகளேயன்றி உண்மையான பொருள் இல்லை என்று உணரமுடியும். எமக்கு இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு மூல காரணமாக இருப்பது இந்த ஆணவமே. 

இந்த பிரபஞ்சம் என்பது இறைவன் உயிர்கள் ஆணவம் என்னும் மூன்றும் சேர்ந்தே தோன்றி நிற்கிறது. மூன்றில் எது ஒன்று இல்லை என்றாலும் இந்த பிரபஞ்சம் என்பது தோன்றாது.

இங்கே பிரபஞ்சம் தோன்றுவதற்கு ஆணவம் என்னும் இருளே முதற் காரணம். யாருக்கு இந்த பிரபஞ்சம் தோன்றுகிறது என்றால் உயிர்களுக்கே அது தோன்றுகிறது. ஆணவத்திற்கோ, கடவுளுக்கோ இந்த பிரபஞ்சம் தோன்றாது. எது இந்த பிரபஞ்சமாக தோன்றி நிற்கிறது என்றால், இறைவனின் வெளிப்படு ஆற்றலே உயிர்களுக்கு பிரபஞ்சமாக தோன்றி நிற்கிறது. 

இப்போது சித்தாந்தம் கூறும் முப்பொருள் உண்மைக்கு மறுபடி வாருங்கள். இறைவன் ஆன்மா ஆணவம் என்னும் மூன்று மட்டுமே அனாதியில் இருந்தது. இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு எது காரணம் என்றால் ஆன்மாக்களுக்கு தோன்றிய விருப்பமே காரணமாகும். ஆகவே ஆன்மாவே பிரபஞ்சத்தை தோற்றுவிக்கிறது. அதற்கு அவற்றின் ஆணவ மயக்கமே காரணமாக இருக்கிறது. இறைவனின் ஆற்றல் ஆன்மாக்களுக்கு பிரபஞ்சமாக தோன்றி நிற்கிறது.

இங்கே பிரபஞ்சம் தோன்றுவதற்கு காரணமான ஆன்மாவே பிரம்மன் எனப்படுகிறான். இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு காரணமான ஆணவம் என்னும் இருள் நிலையே கிருஷ்ணன் எனப்படுகிறான். இந்த அறிவை மயக்கும் இருளே இந்த பிரபஞ்சம் என்னும் மாய நிலையை தோற்றுவிப்பதால், அது அழியாமல் காப்பதால் அவன் மாயவன் எனப்படுகிறான்.

ஆணவமே விருப்பத்தை உண்டாக்கியது. அதனால்தான் மாயவனின் தொப்புள் கொடியில் இருந்து பிரம்மன் தோன்றி நிற்பதாக குறியீடு செய்யப்படுகிறது. அதாவது ஆணவத்தின் விருப்ப தூண்டுதலுக்கு ஆளான ஆன்மாவே படைப்பை/செயலை மேற்கொள்கிறது. ஆணவம் இல்லாவிட்டால் உயிர்களுக்கு விருப்பம் தோன்றாது. விருப்பம் இல்லாவிட்டால் எந்த செயல்களும் கிடையாது. அதனால்தான் பிரபஞ்சம் தோன்றுவதற்கு மூல காரணம் மாயவன் என்கிறோம். 

இங்கே பிரபஞ்சமாக தோன்றி நிற்பது இறைவனின் ஆற்றலே. இந்த பிரபஞ்ச மாயையை நீக்கி பார்த்தால் இறைவன் தோன்றுவாரா என்று ஒரு கேள்வி எழலாம். பிரபஞ்சமாக தோன்றி நிற்பது இறைவனின் ஆற்றலே அன்றி இறைவனல்ல. அதனால் மாயையை நீக்கி பார்த்தால்  இறைவனின் ஆற்றலே எமக்குத் தோன்றும். இறைவன் தோன்றமாட்டான்.

மாயவனைக் கடந்தால் தெரிவது சிவமல்ல சக்தியே.. சிவம் வெளிப்படாதது.. அது தோன்றாதது. சித்தத்தில் நின்று உணர்ந்து கொள்ள மட்டுமே முடியும்.

இந்த பிரபஞ்சம் மாயையால் தோன்றுகிறது என்பதை உணர்ந்தவர்கள் இறைவன் என்பதை அந்த மாயையை நீக்கி தெரியும் ஆற்றலில் இருந்து உணர்ந்து கொள்கிறார்கள். 

இந்த பிரபஞ்சம் என்பது உண்மையானது என்பவர்கள் ஆணவமே கடவுள் மாயையே கடவுள் என்று நம்புகிறார்கள். உலகாயதர்கள், பரமார்த்தவாதிகள், இன்றைய வைணவ பிரிவுகள் சில இவ்வாறு நம்புகின்றன.

இவற்றை எல்லாம் ஆன்மாவே உணர்ந்து கொள்வதால் ஆன்மாவையே கடவுள் என்று சிலர் நம்புகிறார்கள். பிரம்மவாதிகள், சமண பிரிவுகள் பல இவ்வாறு நம்புகின்றன.

மாயையை நீக்கி பார்த்தால் தெரிவது சக்தியே என்றும் அதனால் சக்தியே கடவுள் என்று சிலர் நம்புகிறார்கள். சாக்தம் என்பது அவ்வாறான ஒரு நம்பிக்கையே. 

இவற்றை எல்லாம் கடத்த பின்பும் ஒன்று இருக்கிறது அதுதான் கடவுள் என்பவர்கள் சித்தாந்த வாதிகள்.

அப்படியானால் கிருஷ்ணன் பிரம்மன் சக்தி என்பது எல்லாம் கடவுள் இல்லையா என்று சிலருக்கு தோன்றலாம். அவை அனைத்தும் கடவுள்தான். கடந்தும் உள்ளேயும் இருப்பதுதான் கடவுள் என்கிறோம். சக்தி பிரம்மன் கிருஷ்ணன் என்னும் தத்துவங்கள் அனைத்தும் கடந்தும் உள்ளேயும் இருப்பவைதான். அதனால் அவை அனைத்தும் கடவுள்தான்.

ஆனால் அவை அனைத்தையும் கடந்தும் ஒன்று உள்ளது. அதைத்தான் சிவம் என்று சொல்வர்.

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -47



இறைவனின் மொழி எது?

மொழி என்றால் என்ன என்று புரியாமல் பலரும் பலவிதமான கற்பிதங்களில் சிக்கி விடுகின்றனர். இறைவன் அரபு மொழியில் பேசுவார் என்று சிலரும், இறைவன் லத்...