Friday, August 2, 2024

கடவுள் ஏன் பிறப்பு எடுக்க முடியாது?

பிறப்பு எடுத்தால் அது ஏன் கடவுள் இல்லை என்கிறோம்?

கடவுள் என்பது உண்மை என்றால், அது ஒருபோதும் மாறாதது. அதனால்தான் கடவுளை எப்போதும் மாறாதது என்று மெய்ப்பொருள் என்கிறார்கள்.

உண்மை எப்போதும் மாறாது இருக்கும். பொய் அல்லது மாயையே மாறி மாறி நிலைகளை எடுக்கும். 

சிலர் கேட்கிறார்கள் கடவுள் சர்வ வல்லமை உள்ளவர் என்றால் அவர் பிறப்பினை எடுக்க முடியாதா என்று?

முடியாது என்பது பதில். அது ஏனென்று பார்ப்போம்.

இந்த உலகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த உலகத்தில் உள்ள ஒரு மர பெட்டகத்தை கருத்தில் கொள்ளுங்கள். அந்த மரப் பெட்டகத்திற்குள் இந்த உலகத்தை வைக்க முடியுமா?

இதற்கு இரண்டு பதில்களைக் காணலாம். ஒன்று உலகத்தை உலகத்தில் உள்ள ஒரு பெட்டகத்திற்குள் வைக்க முடியாது. இல்லை உலகம் ஒரு மாய நிலை. அதை அதன் உண்மை நிலைக்கு ஒடுக்கினால் ஒரு பெட்டகத்திற்குள் வைக்க முடியும். விரும்பினால் சட்டை பையில் கூட வைக்க முடியும்.

அதாவது உலகம் உண்மையான பொருள் என்றால் அதனைவிட மிகச் சிறிய ஒரு பெட்டகத்திற்குள் வைக்க முடியாது. 

உலகம் அதனைவிட மிகச்சிறிய பெட்டகத்திற்குள் வைக்க முடியும் என்றால் உலகம் ஒரு உண்மையான பொருள் கிடையாது. அது ஒரு மாயப்பொருள்.

மாறும் வடிவங்களை எடுக்க கூடியது, சிறிதாக பெரிதாக தன்னுடைய இருப்பை மாற்றிக்கொள்ள கூடியது மாயப் பொருளே அன்றி மெய்ப்பொருள் அல்ல.

மெய்ப்பொருள் என்றால் அது எக்காலத்திலும் எக்காரணத்தினாலும் மாறாமல் நிலையாக இருக்க வேண்டும்.

ஆகவே கடவுள் என்பது உண்மை என்றால், கடவுள் என்பது மெய்ப்பொருள் என்றால், அந்த கடவுளுக்கு மிகப்பெரிய அறிவும் மிகப்பெரிய ஆற்றலும் உள்ளது என்றால், அந்த கடவுளின் பேரிருப்பின் உள்ளேயே இந்த பிரபஞ்சம் முதலான அனைத்தும் இருக்கிறது என்றால் கடவுள் ஒரு சிறிய உடலினுள் புகுந்து பிறப்பெடுக்க முடியாது.

இந்த உடல் என்பது மாயை அல்லது பொய் என்றால், கடவுள் பிறப்பினை எடுத்து பொய்மை நிலையில் தோன்ற முடியாது. ஒரு சிறு பொய்க்குள் பெரிய உண்மையை மறைக்க முடியாது. அப்படி ஒரு சிறிய மாயையில் மறைந்து நிற்கும் என்றால் அது மெய்ப்பொருளாக இருக்க முடியாது.

இந்த பிரபஞ்சமாக, உலகங்களாக, உடல்களாக என்று உயிர்களுக்கு உருவினைக் கொடுத்து நிற்பது இறைவனின் இருப்பு நிலையில் உள்ள மாயா சக்தியே அன்றி, அந்த உடல்களே இறைவன் கிடையாது.

இறைவன் என்பது உயிர்கள் மாயை என்று அனைத்தையும் தாங்கி நிற்கும் ஒரு பேரிருப்பு. அந்த பேரிருப்பின் உள்ளே உள்ள சிறு துகள்களாகவே ஆன்மாக்கள் மாயை என்று அனைத்தும் காணப்படும். 

இறைவனின் இருப்பில் புறக்கணிக்க தக்க அங்கமாக உள்ள மாயையில், அந்த மாயையின் அளவில் புறக்கணிக்க அளவில் உள்ள ஒரு மனித உடலில் இறைவன் தோன்றுவான் பிறப்பான் என்பது அறிவு தர்க்கம் என்று எதற்கும் ஒவ்வாதது.

அதனால் தான் கடவுள் மனிதனாக பிறக்க முடியாது, மனிதனாக பிறந்தால் அது ஒரு ஆன்மாவேயன்றி அது கடவுள் கிடையாது என்று உறுதியாக கூறுகின்றோம்.

ஆன்மாக்களை கடவுள் என்று நம்பி ஏமாந்தது போதும்..

உண்மையான ஒரே கடவுள் சிவம் மட்டுமே என்று மெய்யறிவு பெறுங்கள்.

#ஆன்மீகம்_அறிவோம் 

#சித்தாந்தம் 

#சிவம்_மட்டுமே_உண்மையான_ஒரே_கடவுள்



Wednesday, July 17, 2024

கடவுள் இருக்கிறாரா இல்லையா?

இந்த கேள்வியை பலகாலமாக பலர் பலவிதமாக கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இந்த கேள்விக்கான பதில் ஒன்றும் அவ்வளவு கடினமானது கிடையாது.

கடவுளுக்கான வரையறை எதுவென்று தெரிந்தால் இந்த கேள்விக்கான பதில் மிகவும் இலகுவானது. நாம் ஒன்றை தேடுவதாக இருந்தால் அது எப்படி இருக்கும் என்று தெரிந்தால் தானே அதனை கண்டறிய முடியும். அது எப்படியிருக்கும் என்றே தெரியாது என்றால் எப்படி தேட முடியும்?

எது ஒன்று எல்லாவற்றையும் கடந்து நிற்கிறதோ, அதனைக் கடந்த எதொன்றும் இல்லாமல் எதுவொன்று இருக்கிறதோ அதுவே கடவுள். 

அதனைக் கடந்து ஒன்று உள்ளது, அதற்கு ஒரு இருப்பிடம் இருக்கிறது என்றால் அது கடவுள் கிடையாது. இந்த கடவுள் தத்துவத்தை பேசும் ஒரே தத்துவ பிரிவு சித்தாந்த சைவம் மட்டுமே. அப்படியானால் சித்தாந்த சைவத்தில் மட்டுமே கடவுள் பற்றிய கோட்பாடு, கடவுள் பற்றிய வரையறை இருக்கிறது என்று உறுதியாக கூறலாம்.

இந்தியாவில் தோன்றிய சமணம், பௌத்தம், ஆசீவகம், உலகாயதம், போன்ற தத்துவ பிரிவுகளில் கடவுள் கிடையாது. கடவுள் பற்றிய எந்த வரையறையும் கிடையாது. 

கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற ஆபிரகாமிய மதங்கள் படைப்பாளன் என்ற நிலையில் ஒன்றை எல்லாவற்றுக்கும் மேலான ஒன்றாக கருதுகின்றனர். ஆனால் அது கடவுள் கிடையாது. ஏனென்றால் அந்த படைப்பாளன் ஏதோ ஒரு தளத்தில் இருந்து இயங்குகிறான், தனக்கு புறத்தேயான ஒரு இடத்தில் அல்லது தனக்கு புறத்தே தான் உருவாக்கிய ஒரு இடத்தில் படைப்பு முதலான செயல்களைச் செய்கிறான். அப்படியானால் அவர்கள் ஆண்டவராக/ வணக்கத்திற்கு உரியதாக நம்பும் அந்த ஒன்றைக் கடந்து ஏதோ ஒன்று இருக்கிறது. அப்படியானால் அவர்கள் சொல்லுவது எல்லாவற்றையும் கடந்த ஒன்றல்ல.அது அதனைக் கடந்த எதொன்றும் இல்லாத கடவுள் கிடையாது.

சைவத்தில் மட்டுமே கடவுள் பற்றிய புரிதல் அதுபற்றிய கோட்பாடு உள்ளது. அந்த கடவுள் நிச்சயமாக உள்ளது. சைவம் கூறும் கடவுள் நிலை பற்றிய சிந்தனை உலகில் உள்ள எந்த மதத்திற்கும் இல்லை. 

ஏனைய மதத்தினர் படைப்பாளனாக கூறுவது கடவுள் கிடையாது. அவர்கள் மதத்தில் அது கடவுள் என்று சொல்லப்படவும் இல்லை. அவர்கள் அல்லாஹ் என்பதையும் ஜெகுதா அல்லது கர்த்தர் என்பதையும் நாம் கடவுள் என்று கற்பிதம் செய்து மயங்குதல் கூடாது. 

பொத்தாம் பொதுவாக கடவுள் இருக்கிறதா இல்லையா என்று கேள்வி கேட்பது அடி முட்டாள் தனமான சிந்தனையின் வெளிப்பாடு.

சைவம் சிவம் என்று கூறுவது கடவுளா?  அந்த கடவுள் இருக்கிறதா? என்றே கேள்வி கேட்க முடியும்.

அதுபோலவே கிறிஸ்தவம் கூறும் கர்த்தா மற்றும் ஜீசஸ் கடவுளா? அந்த கர்த்தா மற்றும் ஜீசஸ் என்பவர்கள் இருக்கிறார்களா?

இஸ்லாம் கூறும் அல்லாஹ் கடவுளா? அந்த அல்லாஹ் இருக்கிறாரா? இவ்வாறு தானே கேள்வி கேட்க முடியும்.

சைவம் கூறும் கடவுள் நிச்சயமாக உள்ளது. எதுவொன்று எல்லாவற்றையும் கடந்து நிற்கிறதோ, அதனைக் கடந்த எதொன்றும் இல்லாமல் எதுவொன்று இருக்கிறதோ அதுவே சைவம் கூறும் கடவுள். அதைத்தான் சிவம் என்கிறோம்.

கடவுள் என்பது ஒரு நபரல்ல.. கடவுள் என்னும் பேரிருப்பின் உள்ளேயே அனைத்தும் இருக்கிறது. நீங்கள் எந்த ஒரு பொருளைப் பார்த்தாலும் அதன் தோற்ற மாயையை நீக்கிவிட்டால் அங்கே எஞ்சி இருப்பது கடவுளின் இருப்பு நிலையே.

நாம் கல்லை மரத்தை இயற்கையை என்று அனைத்தையும் கடவுளாக வணங்குவதற்கு காரணம் அவை கடவுள் என்பதற்காக அல்ல. அந்த பொருளின் பொருட் தோற்றத்தை மாயை நிலையை நீக்கிவிட்டால் அங்கேயும் இறைவனின் இருப்பே எஞ்சி நிற்பதால் தான்.

சைவம் கூறும் சிவம் மட்டுமே உண்மையான ஒரே கடவுள் என்று உறுதியாக கூறுங்கள். கடவுள் இருக்கிறாரா என்றால் நிச்சயமாக இருக்கிறார் என்று ஆணித்தரமாக கூறுங்கள். 

#ஆன்மீகம்_அறிவோம் 50



கடவுள் ஏன் பிறப்பு எடுக்க முடியாது?

பிறப்பு எடுத்தால் அது ஏன் கடவுள் இல்லை என்கிறோம்? கடவுள் என்பது உண்மை என்றால், அது ஒருபோதும் மாறாதது. அதனால்தான் கடவுளை எப்போதும் மாறாதது என...