Friday, August 4, 2023

இந்த ஆலயத்தை வழிபட்டால் காதல் கைகூடுமாம் -மோகவன கோட்டம்

 ஒரே இடத்தில் 11 தெய்வங்கள்

பண்டார வன்னியனுக்கு என்று தனியான சந்நிதி.. 

இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதி.. இலங்கையில் இவ்வாறான ஒரு கோயில் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்?

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் ஓர் எல்லைக் கிராமமான விசுவமடு கிராமத்தில், விசுவமடு குளத்தின் கிழக்குக் கரையில், வனப்பகுதியை எல்லையாகக் கொண்டு அமைந்துள்ளது இந்த கோயில் கோட்டம். இதற்கு மோகவன கோட்டம் என்று ஒரு பெயரும் உள்ளது.

கிராம மக்களால் வீரபத்திரர் கோயில் என்று அழைக்கப்பட்டாலும் சிவன் அம்மன் முருகன் நாகதம்பிரான் அனுமன் என்று கடவுள் மற்றும் தெய்வங்களாக பதினொரு பேர் ஒரே வளாகத்தில் இருந்து அருள்கின்றனர். 

இது மிகவும் பழைமை வாய்ந்த வரலாற்று தொன்மை மிக்க ஆலயம் என்று மக்கள் குறிப்பிடுகிறார்கள். பண்டார வன்னியன் குருவிச்சிநாச்சி காதல் கதையுடன் சம்பந்தம் உள்ள கோயில் என்று சிலர் கூறுகின்றனர். குருவிச்சிநாச்சி என்பவள் வன்னிப் பகுதியை ஆண்ட கடைசி மன்னன் பண்டார வன்னியனின் காதலி. தன் காதல் கைகூட பண்டார வன்னியன் வழிபட்ட தலம் என்றும், காதல் கைகூடியதால் பண்டார வன்னியன் கோயிலை புனர்நிர்மாணம் செய்வித்தான் என்றும் கர்ண பரம்பரை கதைகள் கூறுகின்றன. 

பண்டார வன்னியனுக்கு என்று தனியான சந்நிதி ஒன்றும் இங்கு அமைந்துள்ளது. பண்டார வன்னியன் தெய்வமாக போற்றப்பட்டு பூசை செய்யப்படும் ஒரே இடம் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

இந்த ஆலயத்திற்கு வந்து வீரபத்திரரை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பதும் நிறைவேறாத காதல் கைகூடும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. இந்த ஆலயத்தைப் பற்றி அறிந்து யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மலையகம் என்று பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிலர் வந்து வழிபட்டு செல்கின்றனர். காதலர்கள் இருவரும் சேர்ந்து இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டால் காதல் விரைவில் கைகூடும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. அதனால் தூர இடங்களில் இருந்தும் சில காதலர்கள் வந்து செல்கின்றனராம். 

இவை எல்லாவற்றையும் கடந்து இந்த ஆலயம் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் வன எல்லையில் அமைந்துள்ளது. உயர்ந்து வளர்ந்த மரங்கள். அமைதியான சூழல். குளிர்மையான காற்று. தெய்வங்களுக்கு என்று சேர்ந்தும் தனித்தும் என்று பல சந்நிதிகள் என்று ஒவ்வொன்றும் இரசித்து அனுபவிக்கும் வகையில் உள்ளது.

நிச்சயமாக எமக்கொரு சந்தர்ப்பம் கிடைத்தால்..

இல்லை இல்லை.. ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கி நாம் அனைவரும் செல்ல வேண்டிய இடம். ஒருமுறை சென்றால் மீண்டும் மீண்டும் செல்லத் தூண்டும் அதுதான் மோகவன கோட்டம்.

ஆம், இதற்கு மோகவன கோட்டம் என்று பெயர்.







No comments:

இறைவனின் மொழி எது?

மொழி என்றால் என்ன என்று புரியாமல் பலரும் பலவிதமான கற்பிதங்களில் சிக்கி விடுகின்றனர். இறைவன் அரபு மொழியில் பேசுவார் என்று சிலரும், இறைவன் லத்...