பிரம்மா, மாயவன், சக்தி, சிவம்..
நாம் கண்ணால் பார்க்கக்கூடிய பிரபஞ்சம் உண்மையானது கிடையாது, அது உண்மை என்று உயிர்களுக்கு தோன்றுவதற்கு மாயையே காரணம். மாயை என்பது அறிவின் மயக்கம். அறிவின் மயக்கத்தினால் இந்த உலகம் உண்மையானதாக தோன்றுகிறது, அவ்வாறு அறிவை மயக்குவது ஆன்மாவுடன் சேர்ந்து நிற்கும் ஆணவமே ஆகும். அதனால்தான் உயிர்களுக்கு இந்த உலகம் தோன்றுவதற்கு மாயவனே முதற்காரணம் என்று கூறுகிறார்கள்.
மாயவன் என்றால் இருள் மலம் எனப்படும் ஆணவத்தின் குறியீடு. ஆணவத்தினால் தான் மாய நிலை உயிர்களுக்கு தோன்றுகிறது. அதனால்தான் மாய நிலையை உருவாக்குபவன் என்னும் பொருளில் மாயவன் என்கிறோம். அவன் உயிர்களுக்கு இருளாக இருப்பவன் என்னும் பொருளில் கிருஷ்ணன் என்கிறோம்.
உயிர்களுக்கு உலகங்கள் உண்மை என்று தோன்றுவதற்கு மூல காரணம் மாயவன் என்றால், இந்த உலகங்கள் இல்லையா? இல்லை ஏதாவது ஒன்று இருக்கிறது அதுதான் வேறு விதமாக தோன்றுகிறதா? அப்படியானால் அந்த ஏதாவது ஒன்று தோன்றுவதற்கு உண்மையாக யார் காரணம்?
நாம் காணும் உலகங்கள்/ பிரபஞ்சம் என்பவை உண்மையான தோற்றம் இல்லை என்றாலும் அங்கு அவ்வாறு ஒன்று இருக்கிறது. இறைவனின் ஆற்றல் நிலையில் ஆன்மாக்கள் நின்று செயலாற்றும் நிலையே மாயையினால் பிரபஞ்ஞசமாக தோன்றுகிறது.
இறை சக்தியில் ஆன்மாக்களின் சேர்க்கையும் செயல்களுமே உடலாக உலகமாக பிரபஞ்சமாக என்று தோன்றுகின்றது. இங்கே பொருட்களாக நாம் காண்பவை அனைத்தும் ஆற்றலின் நிலைகளே. இது அறிவின் வெளிப்பாட்டால் ஆற்றல் நிலை என்றும், ஆணவம் உண்டாக்கும் மாயையால் பிரபஞ்சம் என்றும் உடல் என்றும் ஆன்மாக்களுக்கு தோன்றுகிறது.
மனித உடலை அனுபவப் பொருளாக கொண்டு அனுபவிக்கும் ஒரு ஆன்மா எமக்குள் இருப்பது போல, இந்த பிரபஞ்சம் என்பதை அனுபவப் பொருளாக கொண்டு ஒரு ஆன்மா இருக்கிறது. அதுதான் பிரம்மா எனப்படுகிறது.
மனிதன் எப்படி அனைத்து செயல்களையும் தானே செய்வதாக எண்ணுகிறானோ, அதுபோலவே இந்த பிரபஞ்சம் முழுவதும் நடக்கும் அனைத்தும் தன்னால் செய்யப்படுவதாக பிரம்மா எண்ணிக்கொள்கிறான். ஆனால் பிரம்மன் என்பவனும் நியதியின் படி பிறப்பு இறப்பு என்னும் சுழற்சி நிலைக்கு உட்பட்ட ஒரு ஆன்மாவே ஆகும்.
இந்த பிரபஞ்சம் முழுவதும் நடக்கும் செயல்களை அனுபவிக்கும் ஆன்மா பிரம்மா எனப்படுகிறது.
இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு காரணமான அறிவை மயக்கும் மாயையை உண்டாக்கும் ஆணவ நிலை மாயவன் எனப்படுகிறது.
மாயையை நீக்கி பார்த்தால் தெரியும் இறைவனின் ஆற்றல் நிலை சக்தி எனப்படுகிறது.
இந்த ஆற்றல் நிலைகளை கடந்து வெளிப்படா நிலையில் இருக்கும் ஆற்றல் மூல பேரிருப்பு சிவம் எனப்படுகிறது.
பெரும்பாலான இந்துக்கள் ஏன் பிரம்மனை வழிபடுவதைக் கைவிட்டார்கள் என்றால் இதுதான் காரணம். அவனது விருப்பம் தேவை எதுவும் ஆன்மாக்களுக்கு தேவைப்படவில்லை. அவனும் எம்மைப் போன்ற ஒரு ஆன்மாவே, இல்லை அப்படியும் சொல்ல முடியாது மனிதர்கள் கூட சுய விருப்புடன் செயலாற்ற முடியும். ஆனால் பிரம்மா என்பது வெறும் பிரபஞ்ச அனுபவத்தை அனுபவிக்கும் ஒரு நிலையே என்று கருதினார்கள். அதனால் ஏன் வழிபட வேண்டும் என்ற எண்ணம் தோன்றி பிரம்மனை கைவிட்டு விட்டார்கள்.
ஆனால் மாயவன் இல்லாவிட்டால் இந்த உலக வாழ்க்கை இல்லை என்று ஆகிவிடும். பொதுவாக நாம் அனைவரும் உலகியல் வாழ்க்கை மீது பற்றுதல் உடையவர்கள். இவை எல்லாம் பொய் என்று ஆகிவிட்டால் இந்த வாழ்வை வாழமுடியாது. நாம் உலகியல் வாழ்வை வாழ்வதற்கு இந்த மாயை ஆணவம் எல்லாம் அவசியம் ஆகிறது. அதனால்தான் உலகியல் இன்பங்களை அனுபவிக்க விரும்புபவர்கள் மாயவனை கிருஷ்ணனை வழிபடுகிறார்கள்.
மாயையில் தோன்றினாலும், உண்மை நிலையில் நின்று பார்த்தாலும் எல்லாம் சக்தியின் வடிவமாகவே உள்ளது. அதனால் உலகியல் வாழ்விலும் சரி, முக்தியை நோக்கிய பயணத்திலும் சரி சக்தியின் தேவை தவிர்க்க முடியாதது. சிவத்தை நோக்கி ஆன்மா பயணிக்க வேண்டும் என்றாலும் அதற்கும் சக்தி தேவை. அதனால் உலகவாழ்வை விரும்புபவர்கள் முக்தி நிலையை வேண்டுபவர்கள் இருவருமே சக்தியை வழிபடுகிறார்கள்.
முக்தி நிலையை வேண்டுபவர்களும், உலக வாழ்வில் இருந்து கொண்டே அமைதியை, ஞானத்தை வேண்டுபவர்களும் சிவத்தை நோக்கி நிற்கிறார்கள். சிவத்தை வழிபடுகிறார்கள்.
இப்போது சிந்தித்து பாருங்கள். இந்த பிரபஞ்சம் என்பது சிவ சக்தியில் இருந்து தோன்றினாலும் பிரம்மா எனப்படும் அந்த ஆன்மாவில் தோன்றிய ஆணவத் தூண்டலே காரணமாக இருக்கிறது.
பிரம்மா என்ற அந்த ஆன்மா இருந்தால் தானே அதற்கு தூண்டல் உண்டாக முடியும். ஆகவே பிரபஞ்ச படைப்பின் காரணம் பிரம்மா என்றே கொள்ளவேண்டும். அதனால்தான் பிரம்மனை படைப்பின் கடவுளாக குறிப்பிடுகிறார்கள்.
#சர்வம்_சிவமயம்
#ஆன்மீகம்_அறிவோம் -48
No comments:
Post a Comment