Friday, August 4, 2023

மரணத்தின் பின் ஆன்மா என்ன செய்யும்?

உடல்தான் உருவாகிறது வளர்கிறது அழிகிறது. ஆனால் ஆன்மாக்களுக்கு அழிவு என்பது கிடையாது. அப்படியானால் மரணத்தின் பின்னர் ஆன்மாக்கள் என்ன செய்யும்?

உங்களை எந்த ஒரு சத்தமும் கேட்காத ஒரு இருட்டு அறையில் கை கால்களை கட்டிப் போட்டு வைத்திருக்கிறார் என்று கற்பனை செய்யுங்கள். உங்களுக்கு பசி தூக்கம் எதுவும் வராமல் செய்யப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இப்போது என்ன செய்வீர்கள். உங்களால் என்ன செய்ய முடியும். 

ஆம், மரணத்தின் பின்னர் ஆன்மாக்கள் இவ்வாறுதான் இருக்கும். அதற்கு உடல் என்னும் கருவி இப்போது இல்லை. அதனால் எதனையும் பார்க்க முடியாது, கேட்க முடியாது, தொட முடியாது,சுவைக்கவோ மணக்கவோ முடியாது. அதனால் நடமாடவோ யாருடனும் போசவோ என்று எதுவும் முடியாது. இப்போது அந்த ஆன்மாக்களால் செய்யக்கூடியது அந்த ஆன்மாவின் ஞாபகத்தில் இருக்கும் விடயங்களை அசைபோடுவது மட்டும் தான்.

நல்ல செயல்களை செய்து மகிழ்ச்சியான நினைவுகளை வைத்திருக்கும் ஆன்மாக்கள் அந்த நினைவுகளால் மகிழ்ந்திருக்கும். தீய செயல்களை செய்து கோபம் விரக்தி வஞ்சகம் துக்கம் செயல்விருப்பம் என்பவற்றை நினைவுகளில் கொண்டிருக்கும் ஆன்மாக்கள் துன்பத்தில் வருந்தி உழலும். 

நாம் ஒரு கெட்ட கனவு காணுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த கனவு தரும் துயரம் எவ்வளவு கொடுமையானது என்று கற்பனை செய்து பாருங்கள். அந்த கனவில் இருந்து விழித்தால் மட்டுமே அந்த துயரத்தில் இருந்து நாம் விடுபட முடியும். இங்கே மரணத்தின் பின் துயரப்படும் ஆன்மாக்கள் உடனே விழித்து அந்த துயரத்தில் இருந்து விடுபட முடியாது. 

நாம் உடலோடு இருந்தாலும், உடல் இல்லாமல் இருந்தாலும் ஆன்மா தான் எல்லாவற்றையும் அனுபவிக்கிறது. மரணத்தின் பின்னர் தான் வாழ்ந்த வாழ்க்கை பற்றிய நினைவுகளை உடல் என்ற மாயையை நீங்கி நின்று பார்க்கிறது. அவ்வாறு ஆன்மாக்கள் தாங்கள் செய்த நற்செயல்களால் அனுபவிக்கும் நல்ல நினைவுகளால் ஆன மகிழ்ச்சியாக அனுபவமே சொர்க்கம் எனப்படுகிறது.

தீய செயல்களை செய்த ஆன்மாக்கள் தாம் செய்த தீய செயல்களின் விளைவாக அனுபவிக்கும் கொடுமையான நினைவுகளும், அது அனுபவிக்கும் துயரமுமே நரகம் எனப்படுகிறது. இவ்வாறு நரக அவஸ்தையை அனுபவிக்கும் ஆன்மா, அந்த கொடும் துயரத்தை அனுபவித்து அனுபவித்து களைப்படைந்த பின்னர் அதிலிருந்து விடுபட துடிக்கும். ஆனால் அது விடுபடுவதற்கான ஒரேயொரு வழி மீண்டும் ஒரு பிறப்பை எடுப்பதுதான். 

இறைவன் விரும்பு வெறுப்பு அற்றவன். அவன் ஆன்மாக்களின் விருப்பங்களை ஒருபோதும் தடை செய்வதில்லை. அதனால் நரக துன்பத்தை தாங்க முடியாமல் மீண்டும் பிறப்பு ஒன்றினை எடுக்க விரும்பும் ஆன்மாவை அதற்கு அனுமதிக்கிறான். ஆனால் அந்த ஆன்மாவில் எஞ்சி நிற்கும் கர்மபலனால் நற்பிறவி கிட்டாமல் மீண்டும் ஒரு இழிவான பிறவியே கிட்டுகிறது.

ஆனால் நற்செயல்களை செய்து சொர்க்க நிலையில் மகிழ்ச்சியை அனுபவிக்கும் ஆன்மாக்கள் நீண்ட ஓய்வின் பின்னர் முக்தி நிலையை நோக்கி இருந்ததைவிட ஓர் உயர்ந்த பிறப்பை எடுக்கிறது.

அவ்வாறு உயர் பிறப்புக்களை எடுத்து தமது கர்ம கணக்குகளை நீக்கும் ஆன்மாக்கள் பிறப்பு சுழற்சியில் இருந்து விடுபட்டு முக்தி நிலையை அடைகின்றன.

நாம் எமது வாழ்வில் எதனை சேமிக்க போகிறோம். பணம் புகழ் பதவி சொந்தங்கள் நண்பர்கள் இவற்றையா? அல்லது நம் வாழ்வின் அடுத்த நிலைக்கு எம்மை உயர்த்தும் நற்பலன்களையா? 

நரகத்தீ என்பது விறகு கொண்டு மூட்டும் நெருப்பல்ல, அது நினைவில் எழும் தீ.. விறகுத் தீயை நீரூற்றி அணைக்கலாம். நினைவுகளை எப்படி அணைப்பது?

தனிமையில் முழுஇருளில் நிசப்தத்தில் எந்த ஒரு அசைவும் இன்றி கண்கள் மூடி விழித்திருந்து பாருங்கள். உங்களால் மகிழ்ச்சியாக நின்மதியாக இருக்க முடிகிறதா என்று பாருங்கள். மரணத்தின் பின்னர் எது வரையறை என்று தெரியாத காலத்திற்கு நாம் அவ்வாறுதான் இருக்கப் போகிறோம் என்று உணர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் உடல் நீங்கும் போது எந்தப் புலனும் கிடையாது. எதையும் அறியவோ செய்யவோ முடியாது. ஓய்வின்றி வரும் இந்த நினைவுகள் மட்டுமே உங்களுடன் இருக்க போகிறது. உங்கள் நினைவுகளே சொர்க்கத்தை நரகத்தை உங்களுக்கு வழங்கப் போகிறது. மரணத்தின் பின்னும் மகிழ்ச்சியைத் தரக்கூடியது எதுவோ அதை மட்டுமே செய்வோம்.

#சர்வம்_சிவமயம்



No comments:

கடவுள் ஏன் பிறப்பு எடுக்க முடியாது?

பிறப்பு எடுத்தால் அது ஏன் கடவுள் இல்லை என்கிறோம்? கடவுள் என்பது உண்மை என்றால், அது ஒருபோதும் மாறாதது. அதனால்தான் கடவுளை எப்போதும் மாறாதது என...