நர+கா+ சுரன் என்றால் மனிதர்களின் இருளில் உதித்தவன் என்று பொருள். நர என்றால் மனிதர் என்றும், கா என்றால் இருள் என்றும், சுரன் என்றால் உதித்தவன் என்றும் பொருள்.
இங்கே இருள் என்பது மனிதரின் இருள்மலமான ஆணவத்தை குறிக்கும். மனிதர்களின் ஆவணத்தில் இருந்து தோன்றியவன் இந்த நரகாசுரன். ஒவ்வொரு மனிதருக்கும் உள்ளே இந்த நரகாசுரன் என்ற தீயவன் இருக்கிறான். மனிதர்கள் அறிவு பெறும் போது அறியாமையால் உருவான நரகாசுரன் மறைந்து போகிறான்.
ஆணவம் என்பது அறியாமையால் தோன்றுவது. இங்கே அறிவு என்பது பள்ளிப் பாடமோ, பட்டப்படிப்போ கிடையாது. எது மனிதர்களது அஞ்ஞானத்தை- அறியாமையை போக்குகிறதோ, எது ஆணவத்தை நீக்குகிறதோ அதுதான் உண்மையில் அறிவு என்பது. பள்ளியில் பயில்வதும் கல்லூரியில் கற்பதும் அறிவு கிடையாது. அவை வெறும் தகவல் அறிதல்கள்.
இந்த தீபாவளி திருநாள் உருவான நரகாசுர வதம் செய்த கதையில் மாயவனான கண்ணனால் நரகாசுரனை வதம்செய்ய முடியாமல் சத்தியபாமாவே நரகாசுரனை வதம்செய்வார். அது ஏன்?
கண்ணன் என்ற மாயவன் மாயையின் உருவகம். மாயையே உயிர்களுக்கு ஆசைகளை உண்டுபண்ணி அறிவை மயக்குகிறது. மாயையிலேயே ஆணவம் உருவாக்குகிறது. எதனால் ஆணவம் உருவாகியதோ எதனில் ஆணவம் உருவாகியதோ அதனாலேயே ஆணவத்தை எப்படி அழிக்க முடியும்? அதனால்தான் மாயையின் துணையான சத்தியபாமா நரகாசுரனை அழிக்கிறார்.
மாயை ஆணவத்தை உருவாக்கினாலும் அந்த மாயை மெய்ப்பொருளில் நின்றே தோன்றுகிறது. மெய்ப்பொருளே மாயையாக உயிர்களுக்கு தோன்றுகிறது என்றும் கொள்ளலாம். அவ்வாறு மெய்பொருளில் நின்று தோன்றிய மாயைக்கு மெய்ப்பொருளே துணையாகவும் இருக்கிறது. அதனால்தான் மாயவனின் துணையை சத்திய பாமா என்கிறோம். சத்தியம் என்றால் உண்மை. மாயையின் துணையாக மாயையின் பின்னால் இருப்பது உண்மை. அதுதான் மெய்ப்பொருள்.
இங்கே நரகாசுரன் கதையில் மாயவனின் பின்னால் நின்று சத்தியபாமா நரகாசுரனை அழிக்கிறார். நாம் வாழ்வது மாயை சார்ந்த வாழ்வைத் தான். இந்த மாயையில் நின்றே நாம் உண்மையை உணர்ந்து கொள்ள முடியும். நாம் கடவுளை வழிபடுவதும் மாயையில் நின்றே. கடவுள் எமக்கு உண்மையை உணர்த்துவதும் மாயையின் மூலமே. கடவுள் எம் அறியாமையை நீக்குவதும் மாயையில் நின்றே.
எம் எல்லோருக்குள்ளும் இருக்கும் நரகாசுரன் என்ற அறியாமையால் உருவான அரக்கனை அழிப்பதற்கு மெய்ப்பொருளாம் இறைவனது துணை வேண்டும். இறைவனின் அருளை மாயையை சார்ந்து நின்று வழிபடுவதன் மூலமே அடையமுடியும். இந்த ஒப்பற்ற தத்துவத்தை விளக்கும் திருநாளே தீபாவளி திருநாள்.
எம்முள் இருக்கும் நரகாசுரன் கொல்லப்படும் போது அகஒளி பரவும். உண்மையை உணர்ந்து கொண்டாடுவோம்.
அனைவருக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment