Friday, August 4, 2023

பிரபஞ்சம் தோன்றுவதற்கு எது காரணம்?

படைப்பின் கடவுள் யார்?
பிரம்மா, மாயவன், சக்தி, சிவம்..

நாம் கண்ணால் பார்க்கக்கூடிய பிரபஞ்சம் உண்மையானது கிடையாது, அது உண்மை என்று உயிர்களுக்கு தோன்றுவதற்கு மாயையே காரணம். மாயை என்பது அறிவின் மயக்கம். அறிவின் மயக்கத்தினால் இந்த உலகம் உண்மையானதாக தோன்றுகிறது, அவ்வாறு அறிவை மயக்குவது ஆன்மாவுடன் சேர்ந்து நிற்கும் ஆணவமே ஆகும். அதனால்தான் உயிர்களுக்கு இந்த உலகம் தோன்றுவதற்கு மாயவனே முதற்காரணம் என்று கூறுகிறார்கள்.

மாயவன் என்றால் இருள் மலம் எனப்படும் ஆணவத்தின் குறியீடு. ஆணவத்தினால் தான் மாய நிலை உயிர்களுக்கு தோன்றுகிறது. அதனால்தான் மாய நிலையை உருவாக்குபவன் என்னும் பொருளில் மாயவன் என்கிறோம். அவன் உயிர்களுக்கு இருளாக இருப்பவன் என்னும் பொருளில் கிருஷ்ணன் என்கிறோம்.

உயிர்களுக்கு உலகங்கள் உண்மை என்று தோன்றுவதற்கு மூல காரணம் மாயவன் என்றால், இந்த உலகங்கள் இல்லையா? இல்லை ஏதாவது ஒன்று இருக்கிறது அதுதான் வேறு விதமாக தோன்றுகிறதா? அப்படியானால் அந்த ஏதாவது ஒன்று தோன்றுவதற்கு உண்மையாக யார் காரணம்? 

நாம் காணும் உலகங்கள்/ பிரபஞ்சம் என்பவை உண்மையான தோற்றம் இல்லை என்றாலும் அங்கு அவ்வாறு ஒன்று இருக்கிறது. இறைவனின் ஆற்றல் நிலையில் ஆன்மாக்கள் நின்று செயலாற்றும் நிலையே மாயையினால் பிரபஞ்ஞசமாக தோன்றுகிறது.

இறை சக்தியில் ஆன்மாக்களின் சேர்க்கையும் செயல்களுமே உடலாக உலகமாக பிரபஞ்சமாக என்று தோன்றுகின்றது. இங்கே பொருட்களாக நாம் காண்பவை அனைத்தும் ஆற்றலின் நிலைகளே. இது அறிவின் வெளிப்பாட்டால் ஆற்றல் நிலை என்றும், ஆணவம் உண்டாக்கும் மாயையால் பிரபஞ்சம் என்றும் உடல் என்றும் ஆன்மாக்களுக்கு தோன்றுகிறது. 

மனித உடலை அனுபவப் பொருளாக கொண்டு அனுபவிக்கும் ஒரு ஆன்மா எமக்குள் இருப்பது போல, இந்த பிரபஞ்சம் என்பதை அனுபவப் பொருளாக கொண்டு ஒரு ஆன்மா இருக்கிறது. அதுதான் பிரம்மா எனப்படுகிறது.

மனிதன் எப்படி அனைத்து செயல்களையும் தானே செய்வதாக எண்ணுகிறானோ, அதுபோலவே இந்த பிரபஞ்சம் முழுவதும் நடக்கும் அனைத்தும் தன்னால் செய்யப்படுவதாக பிரம்மா எண்ணிக்கொள்கிறான். ஆனால் பிரம்மன் என்பவனும் நியதியின் படி பிறப்பு இறப்பு என்னும் சுழற்சி நிலைக்கு உட்பட்ட ஒரு ஆன்மாவே ஆகும்.

இந்த பிரபஞ்சம் முழுவதும் நடக்கும் செயல்களை அனுபவிக்கும் ஆன்மா பிரம்மா எனப்படுகிறது.

இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு காரணமான அறிவை மயக்கும் மாயையை உண்டாக்கும் ஆணவ நிலை மாயவன் எனப்படுகிறது.

மாயையை நீக்கி பார்த்தால் தெரியும் இறைவனின் ஆற்றல் நிலை சக்தி எனப்படுகிறது. 

இந்த ஆற்றல் நிலைகளை கடந்து வெளிப்படா நிலையில் இருக்கும் ஆற்றல் மூல பேரிருப்பு சிவம் எனப்படுகிறது.

பெரும்பாலான இந்துக்கள் ஏன் பிரம்மனை வழிபடுவதைக் கைவிட்டார்கள் என்றால் இதுதான் காரணம். அவனது விருப்பம் தேவை எதுவும் ஆன்மாக்களுக்கு தேவைப்படவில்லை. அவனும் எம்மைப் போன்ற ஒரு ஆன்மாவே, இல்லை அப்படியும் சொல்ல முடியாது மனிதர்கள் கூட சுய விருப்புடன் செயலாற்ற முடியும். ஆனால் பிரம்மா என்பது வெறும் பிரபஞ்ச அனுபவத்தை அனுபவிக்கும் ஒரு நிலையே என்று கருதினார்கள். அதனால் ஏன் வழிபட வேண்டும் என்ற எண்ணம் தோன்றி பிரம்மனை கைவிட்டு விட்டார்கள்.

ஆனால் மாயவன் இல்லாவிட்டால் இந்த உலக வாழ்க்கை இல்லை என்று ஆகிவிடும். பொதுவாக நாம் அனைவரும் உலகியல் வாழ்க்கை மீது பற்றுதல் உடையவர்கள். இவை எல்லாம் பொய் என்று ஆகிவிட்டால் இந்த வாழ்வை வாழமுடியாது. நாம் உலகியல் வாழ்வை வாழ்வதற்கு இந்த மாயை ஆணவம் எல்லாம் அவசியம் ஆகிறது. அதனால்தான் உலகியல் இன்பங்களை அனுபவிக்க விரும்புபவர்கள் மாயவனை கிருஷ்ணனை வழிபடுகிறார்கள்.

மாயையில் தோன்றினாலும், உண்மை நிலையில் நின்று பார்த்தாலும் எல்லாம் சக்தியின் வடிவமாகவே உள்ளது. அதனால் உலகியல் வாழ்விலும் சரி, முக்தியை நோக்கிய பயணத்திலும் சரி சக்தியின் தேவை தவிர்க்க முடியாதது. சிவத்தை நோக்கி ஆன்மா பயணிக்க வேண்டும் என்றாலும் அதற்கும் சக்தி தேவை. அதனால் உலகவாழ்வை விரும்புபவர்கள் முக்தி நிலையை வேண்டுபவர்கள் இருவருமே சக்தியை வழிபடுகிறார்கள்.

முக்தி நிலையை வேண்டுபவர்களும், உலக வாழ்வில் இருந்து கொண்டே அமைதியை, ஞானத்தை வேண்டுபவர்களும் சிவத்தை நோக்கி நிற்கிறார்கள். சிவத்தை வழிபடுகிறார்கள்.

இப்போது சிந்தித்து பாருங்கள். இந்த பிரபஞ்சம் என்பது சிவ சக்தியில் இருந்து தோன்றினாலும் பிரம்மா எனப்படும் அந்த ஆன்மாவில் தோன்றிய ஆணவத் தூண்டலே காரணமாக இருக்கிறது. 

பிரம்மா என்ற அந்த ஆன்மா இருந்தால் தானே அதற்கு தூண்டல் உண்டாக முடியும். ஆகவே பிரபஞ்ச படைப்பின் காரணம் பிரம்மா என்றே கொள்ளவேண்டும். அதனால்தான் பிரம்மனை படைப்பின் கடவுளாக குறிப்பிடுகிறார்கள்.

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -48



இந்த ஆலயத்தை வழிபட்டால் காதல் கைகூடுமாம் -மோகவன கோட்டம்

 ஒரே இடத்தில் 11 தெய்வங்கள்

பண்டார வன்னியனுக்கு என்று தனியான சந்நிதி.. 

இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதி.. இலங்கையில் இவ்வாறான ஒரு கோயில் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்?

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் ஓர் எல்லைக் கிராமமான விசுவமடு கிராமத்தில், விசுவமடு குளத்தின் கிழக்குக் கரையில், வனப்பகுதியை எல்லையாகக் கொண்டு அமைந்துள்ளது இந்த கோயில் கோட்டம். இதற்கு மோகவன கோட்டம் என்று ஒரு பெயரும் உள்ளது.

கிராம மக்களால் வீரபத்திரர் கோயில் என்று அழைக்கப்பட்டாலும் சிவன் அம்மன் முருகன் நாகதம்பிரான் அனுமன் என்று கடவுள் மற்றும் தெய்வங்களாக பதினொரு பேர் ஒரே வளாகத்தில் இருந்து அருள்கின்றனர். 

இது மிகவும் பழைமை வாய்ந்த வரலாற்று தொன்மை மிக்க ஆலயம் என்று மக்கள் குறிப்பிடுகிறார்கள். பண்டார வன்னியன் குருவிச்சிநாச்சி காதல் கதையுடன் சம்பந்தம் உள்ள கோயில் என்று சிலர் கூறுகின்றனர். குருவிச்சிநாச்சி என்பவள் வன்னிப் பகுதியை ஆண்ட கடைசி மன்னன் பண்டார வன்னியனின் காதலி. தன் காதல் கைகூட பண்டார வன்னியன் வழிபட்ட தலம் என்றும், காதல் கைகூடியதால் பண்டார வன்னியன் கோயிலை புனர்நிர்மாணம் செய்வித்தான் என்றும் கர்ண பரம்பரை கதைகள் கூறுகின்றன. 

பண்டார வன்னியனுக்கு என்று தனியான சந்நிதி ஒன்றும் இங்கு அமைந்துள்ளது. பண்டார வன்னியன் தெய்வமாக போற்றப்பட்டு பூசை செய்யப்படும் ஒரே இடம் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

இந்த ஆலயத்திற்கு வந்து வீரபத்திரரை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பதும் நிறைவேறாத காதல் கைகூடும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. இந்த ஆலயத்தைப் பற்றி அறிந்து யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மலையகம் என்று பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிலர் வந்து வழிபட்டு செல்கின்றனர். காதலர்கள் இருவரும் சேர்ந்து இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டால் காதல் விரைவில் கைகூடும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. அதனால் தூர இடங்களில் இருந்தும் சில காதலர்கள் வந்து செல்கின்றனராம். 

இவை எல்லாவற்றையும் கடந்து இந்த ஆலயம் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் வன எல்லையில் அமைந்துள்ளது. உயர்ந்து வளர்ந்த மரங்கள். அமைதியான சூழல். குளிர்மையான காற்று. தெய்வங்களுக்கு என்று சேர்ந்தும் தனித்தும் என்று பல சந்நிதிகள் என்று ஒவ்வொன்றும் இரசித்து அனுபவிக்கும் வகையில் உள்ளது.

நிச்சயமாக எமக்கொரு சந்தர்ப்பம் கிடைத்தால்..

இல்லை இல்லை.. ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கி நாம் அனைவரும் செல்ல வேண்டிய இடம். ஒருமுறை சென்றால் மீண்டும் மீண்டும் செல்லத் தூண்டும் அதுதான் மோகவன கோட்டம்.

ஆம், இதற்கு மோகவன கோட்டம் என்று பெயர்.







மரணத்தின் பின் ஆன்மா என்ன செய்யும்?

உடல்தான் உருவாகிறது வளர்கிறது அழிகிறது. ஆனால் ஆன்மாக்களுக்கு அழிவு என்பது கிடையாது. அப்படியானால் மரணத்தின் பின்னர் ஆன்மாக்கள் என்ன செய்யும்?

உங்களை எந்த ஒரு சத்தமும் கேட்காத ஒரு இருட்டு அறையில் கை கால்களை கட்டிப் போட்டு வைத்திருக்கிறார் என்று கற்பனை செய்யுங்கள். உங்களுக்கு பசி தூக்கம் எதுவும் வராமல் செய்யப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இப்போது என்ன செய்வீர்கள். உங்களால் என்ன செய்ய முடியும். 

ஆம், மரணத்தின் பின்னர் ஆன்மாக்கள் இவ்வாறுதான் இருக்கும். அதற்கு உடல் என்னும் கருவி இப்போது இல்லை. அதனால் எதனையும் பார்க்க முடியாது, கேட்க முடியாது, தொட முடியாது,சுவைக்கவோ மணக்கவோ முடியாது. அதனால் நடமாடவோ யாருடனும் போசவோ என்று எதுவும் முடியாது. இப்போது அந்த ஆன்மாக்களால் செய்யக்கூடியது அந்த ஆன்மாவின் ஞாபகத்தில் இருக்கும் விடயங்களை அசைபோடுவது மட்டும் தான்.

நல்ல செயல்களை செய்து மகிழ்ச்சியான நினைவுகளை வைத்திருக்கும் ஆன்மாக்கள் அந்த நினைவுகளால் மகிழ்ந்திருக்கும். தீய செயல்களை செய்து கோபம் விரக்தி வஞ்சகம் துக்கம் செயல்விருப்பம் என்பவற்றை நினைவுகளில் கொண்டிருக்கும் ஆன்மாக்கள் துன்பத்தில் வருந்தி உழலும். 

நாம் ஒரு கெட்ட கனவு காணுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த கனவு தரும் துயரம் எவ்வளவு கொடுமையானது என்று கற்பனை செய்து பாருங்கள். அந்த கனவில் இருந்து விழித்தால் மட்டுமே அந்த துயரத்தில் இருந்து நாம் விடுபட முடியும். இங்கே மரணத்தின் பின் துயரப்படும் ஆன்மாக்கள் உடனே விழித்து அந்த துயரத்தில் இருந்து விடுபட முடியாது. 

நாம் உடலோடு இருந்தாலும், உடல் இல்லாமல் இருந்தாலும் ஆன்மா தான் எல்லாவற்றையும் அனுபவிக்கிறது. மரணத்தின் பின்னர் தான் வாழ்ந்த வாழ்க்கை பற்றிய நினைவுகளை உடல் என்ற மாயையை நீங்கி நின்று பார்க்கிறது. அவ்வாறு ஆன்மாக்கள் தாங்கள் செய்த நற்செயல்களால் அனுபவிக்கும் நல்ல நினைவுகளால் ஆன மகிழ்ச்சியாக அனுபவமே சொர்க்கம் எனப்படுகிறது.

தீய செயல்களை செய்த ஆன்மாக்கள் தாம் செய்த தீய செயல்களின் விளைவாக அனுபவிக்கும் கொடுமையான நினைவுகளும், அது அனுபவிக்கும் துயரமுமே நரகம் எனப்படுகிறது. இவ்வாறு நரக அவஸ்தையை அனுபவிக்கும் ஆன்மா, அந்த கொடும் துயரத்தை அனுபவித்து அனுபவித்து களைப்படைந்த பின்னர் அதிலிருந்து விடுபட துடிக்கும். ஆனால் அது விடுபடுவதற்கான ஒரேயொரு வழி மீண்டும் ஒரு பிறப்பை எடுப்பதுதான். 

இறைவன் விரும்பு வெறுப்பு அற்றவன். அவன் ஆன்மாக்களின் விருப்பங்களை ஒருபோதும் தடை செய்வதில்லை. அதனால் நரக துன்பத்தை தாங்க முடியாமல் மீண்டும் பிறப்பு ஒன்றினை எடுக்க விரும்பும் ஆன்மாவை அதற்கு அனுமதிக்கிறான். ஆனால் அந்த ஆன்மாவில் எஞ்சி நிற்கும் கர்மபலனால் நற்பிறவி கிட்டாமல் மீண்டும் ஒரு இழிவான பிறவியே கிட்டுகிறது.

ஆனால் நற்செயல்களை செய்து சொர்க்க நிலையில் மகிழ்ச்சியை அனுபவிக்கும் ஆன்மாக்கள் நீண்ட ஓய்வின் பின்னர் முக்தி நிலையை நோக்கி இருந்ததைவிட ஓர் உயர்ந்த பிறப்பை எடுக்கிறது.

அவ்வாறு உயர் பிறப்புக்களை எடுத்து தமது கர்ம கணக்குகளை நீக்கும் ஆன்மாக்கள் பிறப்பு சுழற்சியில் இருந்து விடுபட்டு முக்தி நிலையை அடைகின்றன.

நாம் எமது வாழ்வில் எதனை சேமிக்க போகிறோம். பணம் புகழ் பதவி சொந்தங்கள் நண்பர்கள் இவற்றையா? அல்லது நம் வாழ்வின் அடுத்த நிலைக்கு எம்மை உயர்த்தும் நற்பலன்களையா? 

நரகத்தீ என்பது விறகு கொண்டு மூட்டும் நெருப்பல்ல, அது நினைவில் எழும் தீ.. விறகுத் தீயை நீரூற்றி அணைக்கலாம். நினைவுகளை எப்படி அணைப்பது?

தனிமையில் முழுஇருளில் நிசப்தத்தில் எந்த ஒரு அசைவும் இன்றி கண்கள் மூடி விழித்திருந்து பாருங்கள். உங்களால் மகிழ்ச்சியாக நின்மதியாக இருக்க முடிகிறதா என்று பாருங்கள். மரணத்தின் பின்னர் எது வரையறை என்று தெரியாத காலத்திற்கு நாம் அவ்வாறுதான் இருக்கப் போகிறோம் என்று உணர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் உடல் நீங்கும் போது எந்தப் புலனும் கிடையாது. எதையும் அறியவோ செய்யவோ முடியாது. ஓய்வின்றி வரும் இந்த நினைவுகள் மட்டுமே உங்களுடன் இருக்க போகிறது. உங்கள் நினைவுகளே சொர்க்கத்தை நரகத்தை உங்களுக்கு வழங்கப் போகிறது. மரணத்தின் பின்னும் மகிழ்ச்சியைத் தரக்கூடியது எதுவோ அதை மட்டுமே செய்வோம்.

#சர்வம்_சிவமயம்



கடவுள் ஏன் பிறப்பு எடுக்க முடியாது?

பிறப்பு எடுத்தால் அது ஏன் கடவுள் இல்லை என்கிறோம்? கடவுள் என்பது உண்மை என்றால், அது ஒருபோதும் மாறாதது. அதனால்தான் கடவுளை எப்போதும் மாறாதது என...