Friday, August 2, 2024

கடவுள் ஏன் பிறப்பு எடுக்க முடியாது?

பிறப்பு எடுத்தால் அது ஏன் கடவுள் இல்லை என்கிறோம்?

கடவுள் என்பது உண்மை என்றால், அது ஒருபோதும் மாறாதது. அதனால்தான் கடவுளை எப்போதும் மாறாதது என்று மெய்ப்பொருள் என்கிறார்கள்.

உண்மை எப்போதும் மாறாது இருக்கும். பொய் அல்லது மாயையே மாறி மாறி நிலைகளை எடுக்கும். 

சிலர் கேட்கிறார்கள் கடவுள் சர்வ வல்லமை உள்ளவர் என்றால் அவர் பிறப்பினை எடுக்க முடியாதா என்று?

முடியாது என்பது பதில். அது ஏனென்று பார்ப்போம்.

இந்த உலகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த உலகத்தில் உள்ள ஒரு மர பெட்டகத்தை கருத்தில் கொள்ளுங்கள். அந்த மரப் பெட்டகத்திற்குள் இந்த உலகத்தை வைக்க முடியுமா?

இதற்கு இரண்டு பதில்களைக் காணலாம். ஒன்று உலகத்தை உலகத்தில் உள்ள ஒரு பெட்டகத்திற்குள் வைக்க முடியாது. இல்லை உலகம் ஒரு மாய நிலை. அதை அதன் உண்மை நிலைக்கு ஒடுக்கினால் ஒரு பெட்டகத்திற்குள் வைக்க முடியும். விரும்பினால் சட்டை பையில் கூட வைக்க முடியும்.

அதாவது உலகம் உண்மையான பொருள் என்றால் அதனைவிட மிகச் சிறிய ஒரு பெட்டகத்திற்குள் வைக்க முடியாது. 

உலகம் அதனைவிட மிகச்சிறிய பெட்டகத்திற்குள் வைக்க முடியும் என்றால் உலகம் ஒரு உண்மையான பொருள் கிடையாது. அது ஒரு மாயப்பொருள்.

மாறும் வடிவங்களை எடுக்க கூடியது, சிறிதாக பெரிதாக தன்னுடைய இருப்பை மாற்றிக்கொள்ள கூடியது மாயப் பொருளே அன்றி மெய்ப்பொருள் அல்ல.

மெய்ப்பொருள் என்றால் அது எக்காலத்திலும் எக்காரணத்தினாலும் மாறாமல் நிலையாக இருக்க வேண்டும்.

ஆகவே கடவுள் என்பது உண்மை என்றால், கடவுள் என்பது மெய்ப்பொருள் என்றால், அந்த கடவுளுக்கு மிகப்பெரிய அறிவும் மிகப்பெரிய ஆற்றலும் உள்ளது என்றால், அந்த கடவுளின் பேரிருப்பின் உள்ளேயே இந்த பிரபஞ்சம் முதலான அனைத்தும் இருக்கிறது என்றால் கடவுள் ஒரு சிறிய உடலினுள் புகுந்து பிறப்பெடுக்க முடியாது.

இந்த உடல் என்பது மாயை அல்லது பொய் என்றால், கடவுள் பிறப்பினை எடுத்து பொய்மை நிலையில் தோன்ற முடியாது. ஒரு சிறு பொய்க்குள் பெரிய உண்மையை மறைக்க முடியாது. அப்படி ஒரு சிறிய மாயையில் மறைந்து நிற்கும் என்றால் அது மெய்ப்பொருளாக இருக்க முடியாது.

இந்த பிரபஞ்சமாக, உலகங்களாக, உடல்களாக என்று உயிர்களுக்கு உருவினைக் கொடுத்து நிற்பது இறைவனின் இருப்பு நிலையில் உள்ள மாயா சக்தியே அன்றி, அந்த உடல்களே இறைவன் கிடையாது.

இறைவன் என்பது உயிர்கள் மாயை என்று அனைத்தையும் தாங்கி நிற்கும் ஒரு பேரிருப்பு. அந்த பேரிருப்பின் உள்ளே உள்ள சிறு துகள்களாகவே ஆன்மாக்கள் மாயை என்று அனைத்தும் காணப்படும். 

இறைவனின் இருப்பில் புறக்கணிக்க தக்க அங்கமாக உள்ள மாயையில், அந்த மாயையின் அளவில் புறக்கணிக்க அளவில் உள்ள ஒரு மனித உடலில் இறைவன் தோன்றுவான் பிறப்பான் என்பது அறிவு தர்க்கம் என்று எதற்கும் ஒவ்வாதது.

அதனால் தான் கடவுள் மனிதனாக பிறக்க முடியாது, மனிதனாக பிறந்தால் அது ஒரு ஆன்மாவேயன்றி அது கடவுள் கிடையாது என்று உறுதியாக கூறுகின்றோம்.

ஆன்மாக்களை கடவுள் என்று நம்பி ஏமாந்தது போதும்..

உண்மையான ஒரே கடவுள் சிவம் மட்டுமே என்று மெய்யறிவு பெறுங்கள்.

#ஆன்மீகம்_அறிவோம் 

#சித்தாந்தம் 

#சிவம்_மட்டுமே_உண்மையான_ஒரே_கடவுள்



Wednesday, July 17, 2024

கடவுள் இருக்கிறாரா இல்லையா?

இந்த கேள்வியை பலகாலமாக பலர் பலவிதமாக கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இந்த கேள்விக்கான பதில் ஒன்றும் அவ்வளவு கடினமானது கிடையாது.

கடவுளுக்கான வரையறை எதுவென்று தெரிந்தால் இந்த கேள்விக்கான பதில் மிகவும் இலகுவானது. நாம் ஒன்றை தேடுவதாக இருந்தால் அது எப்படி இருக்கும் என்று தெரிந்தால் தானே அதனை கண்டறிய முடியும். அது எப்படியிருக்கும் என்றே தெரியாது என்றால் எப்படி தேட முடியும்?

எது ஒன்று எல்லாவற்றையும் கடந்து நிற்கிறதோ, அதனைக் கடந்த எதொன்றும் இல்லாமல் எதுவொன்று இருக்கிறதோ அதுவே கடவுள். 

அதனைக் கடந்து ஒன்று உள்ளது, அதற்கு ஒரு இருப்பிடம் இருக்கிறது என்றால் அது கடவுள் கிடையாது. இந்த கடவுள் தத்துவத்தை பேசும் ஒரே தத்துவ பிரிவு சித்தாந்த சைவம் மட்டுமே. அப்படியானால் சித்தாந்த சைவத்தில் மட்டுமே கடவுள் பற்றிய கோட்பாடு, கடவுள் பற்றிய வரையறை இருக்கிறது என்று உறுதியாக கூறலாம்.

இந்தியாவில் தோன்றிய சமணம், பௌத்தம், ஆசீவகம், உலகாயதம், போன்ற தத்துவ பிரிவுகளில் கடவுள் கிடையாது. கடவுள் பற்றிய எந்த வரையறையும் கிடையாது. 

கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற ஆபிரகாமிய மதங்கள் படைப்பாளன் என்ற நிலையில் ஒன்றை எல்லாவற்றுக்கும் மேலான ஒன்றாக கருதுகின்றனர். ஆனால் அது கடவுள் கிடையாது. ஏனென்றால் அந்த படைப்பாளன் ஏதோ ஒரு தளத்தில் இருந்து இயங்குகிறான், தனக்கு புறத்தேயான ஒரு இடத்தில் அல்லது தனக்கு புறத்தே தான் உருவாக்கிய ஒரு இடத்தில் படைப்பு முதலான செயல்களைச் செய்கிறான். அப்படியானால் அவர்கள் ஆண்டவராக/ வணக்கத்திற்கு உரியதாக நம்பும் அந்த ஒன்றைக் கடந்து ஏதோ ஒன்று இருக்கிறது. அப்படியானால் அவர்கள் சொல்லுவது எல்லாவற்றையும் கடந்த ஒன்றல்ல.அது அதனைக் கடந்த எதொன்றும் இல்லாத கடவுள் கிடையாது.

சைவத்தில் மட்டுமே கடவுள் பற்றிய புரிதல் அதுபற்றிய கோட்பாடு உள்ளது. அந்த கடவுள் நிச்சயமாக உள்ளது. சைவம் கூறும் கடவுள் நிலை பற்றிய சிந்தனை உலகில் உள்ள எந்த மதத்திற்கும் இல்லை. 

ஏனைய மதத்தினர் படைப்பாளனாக கூறுவது கடவுள் கிடையாது. அவர்கள் மதத்தில் அது கடவுள் என்று சொல்லப்படவும் இல்லை. அவர்கள் அல்லாஹ் என்பதையும் ஜெகுதா அல்லது கர்த்தர் என்பதையும் நாம் கடவுள் என்று கற்பிதம் செய்து மயங்குதல் கூடாது. 

பொத்தாம் பொதுவாக கடவுள் இருக்கிறதா இல்லையா என்று கேள்வி கேட்பது அடி முட்டாள் தனமான சிந்தனையின் வெளிப்பாடு.

சைவம் சிவம் என்று கூறுவது கடவுளா?  அந்த கடவுள் இருக்கிறதா? என்றே கேள்வி கேட்க முடியும்.

அதுபோலவே கிறிஸ்தவம் கூறும் கர்த்தா மற்றும் ஜீசஸ் கடவுளா? அந்த கர்த்தா மற்றும் ஜீசஸ் என்பவர்கள் இருக்கிறார்களா?

இஸ்லாம் கூறும் அல்லாஹ் கடவுளா? அந்த அல்லாஹ் இருக்கிறாரா? இவ்வாறு தானே கேள்வி கேட்க முடியும்.

சைவம் கூறும் கடவுள் நிச்சயமாக உள்ளது. எதுவொன்று எல்லாவற்றையும் கடந்து நிற்கிறதோ, அதனைக் கடந்த எதொன்றும் இல்லாமல் எதுவொன்று இருக்கிறதோ அதுவே சைவம் கூறும் கடவுள். அதைத்தான் சிவம் என்கிறோம்.

கடவுள் என்பது ஒரு நபரல்ல.. கடவுள் என்னும் பேரிருப்பின் உள்ளேயே அனைத்தும் இருக்கிறது. நீங்கள் எந்த ஒரு பொருளைப் பார்த்தாலும் அதன் தோற்ற மாயையை நீக்கிவிட்டால் அங்கே எஞ்சி இருப்பது கடவுளின் இருப்பு நிலையே.

நாம் கல்லை மரத்தை இயற்கையை என்று அனைத்தையும் கடவுளாக வணங்குவதற்கு காரணம் அவை கடவுள் என்பதற்காக அல்ல. அந்த பொருளின் பொருட் தோற்றத்தை மாயை நிலையை நீக்கிவிட்டால் அங்கேயும் இறைவனின் இருப்பே எஞ்சி நிற்பதால் தான்.

சைவம் கூறும் சிவம் மட்டுமே உண்மையான ஒரே கடவுள் என்று உறுதியாக கூறுங்கள். கடவுள் இருக்கிறாரா என்றால் நிச்சயமாக இருக்கிறார் என்று ஆணித்தரமாக கூறுங்கள். 

#ஆன்மீகம்_அறிவோம் 50



Thursday, November 30, 2023

இறைவனின் மொழி எது?

மொழி என்றால் என்ன என்று புரியாமல் பலரும் பலவிதமான கற்பிதங்களில் சிக்கி விடுகின்றனர். இறைவன் அரபு மொழியில் பேசுவார் என்று சிலரும், இறைவன் லத்தீன் மொழியில் பேசுவார் இறைவன் நவமான பாசைகள் பேசுவார் என்று சிலரும் பலகாலமாக நம்பி வருகின்றனர். அது அவர்களின் நம்பிக்கை. ஏனென்றால் அவர்கள் கடவுள் என்பதை ஒரு நபராக கருதும் நம்பிக்கைகளை பின்பற்றுபவர்கள்.

சரி, எமது இந்து பாரம்பரிய நம்பிக்கை என்ன? இறைவன் என்ன மொழியில் பேசுவார்.

மொழி என்பது ஒரு தொடர்பாடல் கருவி. இரண்டு தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே தமிழில் தொடர்பாட முடியும். இரண்டு அரபு மொழி தெரிந்தவர்கள் மட்டுமே அரபு மொழியில் தொடர்பாட முடியும். இந்த உலகத்தில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் தமக்குள் தொடர்பாடல் செய்து கொண்டுதான் இருக்கின்றன.

நாம் வளர்க்கும் நாய் பூனை மாடு ஆடு முதலியவை கூட எம்முடன் ஏதோ ஒரு தொடர்பாடலை செய்து கொண்டுதான் உள்ளது. நாம் அவற்றுடன் என்ன பாசையில் பேசுகிறோம். தமிழ், ஆங்கிலம், சீனம் இவ்வாறான மொழிகளிலா பேசுகிறோம். இல்லை அல்லவா.. ஆனால் அவற்றுடன் நாம் தொடர்பாடலை செய்து கொண்டுதானே இருக்கிறோம்.

அதுபோலவே இறைவனும் எம்முடைய ஏதோ ஒரு வகையில் தொடர்பாடலை செய்துகொண்டு இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இறைவன் எந்த மொழிக்கு உரியவர்? தமிழ்தான் இறைவனுக்கு தெரிந்த மொழியா? அரபிதான் இறைவனுக்கு தெரிந்த மொழியா? அந்த மொழி தெரிந்தவர்களுடன் மட்டுமே இறைவன் தொடர்பு கொள்வாரா?

அல்லது இறைவனும் உலகில் உள்ள எல்லா மொழிகளும் தெரியும் அனைவருடனும் தொடர்பு கொள்வாரா? அப்படியானால் இறைவன் மனிதர்களுக்கு மட்டுமானவரா? 

அப்படியானால் இந்த உலகின் உள்ள மற்றைய ஜீவராசிகள் எல்லாம் சில மதங்கள் சொல்வது போல மனிதர்களுக்காக படைக்கப்பட்டவையா?

இல்லை இறைவன் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உரியவர் என்றால் மானிட பாசையை விட மற்றைய ஜீவராசிகளின் பாசையை அறிவாரா? அவற்றுடன் அவற்றின் பாசைகளில்தான் தொடர்பு கொள்வாரா?

இந்துக்களால் மட்டுமே இவ்வாறு சிந்தித்து கேள்விகளை கேட்க முடியும். ஏனைய மதங்கள் என்றால் இறை நிந்தனை என்று கூறி கல்லால் எறிந்து கொன்றுவிடும்.

ஏனைய மதங்களைப் போல இந்துக்கள் கடவுளை நபராக கருதுவதில்லை. இறை என்பதை நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் அமைப்பு (system ) முறையாகவே கருதுகின்றனர். இறைவன் என்ற அந்த இருப்பிற்கு உள்ளேயே இந்த உலகங்கள், உயிர்கள் அனைத்தும் இருப்பதாக கருதுகின்றனர்.

உலகத்தின் அழிவு நாளில் வந்து பாவ புண்ணிய கணக்குப் பார்க்கும் ஒருவராக, தன் புகழ் பாடினால் 50- 100 பெண்களை கொடுத்து மதுவை ஆறாக ஓடவிட்டு போதையில் காமத்தில் திளைத்திருக்க சொல்லும் ஒருவராக கடவுளை கருதுவதில்லை. தன் புகழ் பாடினால் அவன் செய்யும் தவறுகளுக்கான பாவத்தையும் தன் புகழ் பாடாதவன் மேல் சுமத்தி நரகத்தில் வீழ்த்தும் ஆணவக்கரானாக கடவுளை கருதுவதில்லை. 

கடவுள் என்பது ஒரு அமைப்பு முறை. அது யாருடனும் பேசும் தேவையோ, செயற்படும் தேவையோ இல்லாதது. அது மாயையை சாராதது. பேசுவதற்கு செயற்படுவதற்கு தேவையான மாய உடலும் மாய புலன்களும் அதற்கு கிடையாது. மாயை அற்ற தூய வடிவினை உடையவன் இறைவன் என்று நம்புபவர்கள் இந்துக்கள். அவன் ஞான வடிவினை உடையவன் மாயா உடலும் கரணங்களும் அற்றவன் என்று நம்புபவர்கள் இந்துக்கள்.

அதனால்தான் இறைவன் பேசுவதில்லை அனைத்தையும் கவனித்துக் கொண்டு இருக்கிறான், நானும் அவனுடன் எதுவும் பேசுவதில்லை அனைத்தையும் கவனித்துக் கொண்டு இருக்கிறான் என்று அந்நாளில் ஞானிகள் கூறியுள்ளார்கள்.

ஆம், இறைவன் பேசுவதில்லை. அது ஒரு மௌன நிலை. சப்தத்தால் மௌனத்தை உணர முடியாது. மௌன நிலையிலேயே மௌனத்தை உணர முடியும். அதனால்தான் மௌன நிலையில் இருந்து தியானிப்பதை இறைவனை உணரும் வழிமுறையாக இந்துக்கள் கொண்டுள்ளனர். 

இறைவனின் மொழி என்பது மௌனமே. அதை கேட்க முடியாது. உணர்ந்து கொள்ளவே முடியும். மனத்தை அடக்கி மௌன நிலையில் இருந்து இறைவனை தியானிப்பது ஒன்றே இறைவனின் மொழியை கிரகிப்பதற்கான ஒரே வழி.

சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்வது என்பது இறைவனுடன் உரையாடுவது கிடையாது. பல்வேறு மொழிகள் பேசும் மக்களுக்கு பொதுமைப்பாடான முறையில் பூசை வழிபாடுகளில் ஈடுபடும் முறையே சமஸ்தானத்தில் பூசை செய்வதும் அர்ச்சனை செய்வதும். 

இறைவனை நபராக கருதும், அவனுடன் உரையாடலாம் என்று நம்பும், உங்கள் அன்னிய மத சிந்தனைகளுடன் இந்துக்களின் வாழ்வியலைப் பொருத்திப் பார்க்காதீர்கள். உங்கள் தவறான சிந்தனைகளை திருப்திப்படுத்த இந்துக்களின் ஞானத்தால் முடியாது. நீங்கள் விரும்பினால் இந்துக்களின் ஆன்மீக ஞானத்தின் ஆழத்தை சற்று அறிந்து கொள்ளுங்கள்.

#சர்வம்_சிவமயம்



Tuesday, November 14, 2023

யார் இந்த சாளம்பன்? இலங்கை தமிழர்கள் என்பவர்கள் யார்?

இலங்கையில் பல ஊர்கள் சாளம்பன் என்ற பெயரைத் தாங்கி நிற்கிறது. 

சாளம்பன், மன்னார்
சாளம்பன், பூநகரி
சாளம்பன், ஒட்டுசுட்டான்
பெரிய சாளம்பன், ஒட்டுசுட்டான்
சாளம்பன் குளம், ஒட்டுசுட்டான்
சாளம்பன் தீவு, கச்சாய்
சாளம்பன் வில்லு, பூநகரி 
சாளம்பன், பாண்டியன்குளம்
சாளம்பன், பொறிக்கடவை(பரந்தன்)
சாளம்பன் குளம், வவுனியா
சாளம்பன், வவுனியா

இப்படி பல கிராமங்கள் இப்போதும் சாளம்பன் பெயரிலேயே இருக்கிறது. 

சாளம்பன் என்றால் யார்?

யார் இந்த சாளம்பன்? 

எதற்காக சாளம்பனின் பெயரை ஊர்கள் தோறும் வைத்திருக்கிறார்கள்.

சாளம்பன் என்பவன் காமரூப பேரரசை கைப்பற்றி ஆண்ட மிலேச்ச குல மன்னர்களில் ஒருவன்.

காமரூப பேரரசு என்பது இன்றைய இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களையும் வங்காளம் பூட்டான் போன்ற பகுதிகளையும் உள்ளடக்கிய ஒரு பழைய பேரரசு ஆகும்.

இந்த காமரூப பேரரசை மிலேசசர்கள் கைப்பற்றி ஆண்டுள்ளனர். பொ.ஆ 650-900 வரை மிலேச்ச குல அரசர்கள் ஆண்டதாக அவர்களது பதிவுகள் குறிக்கின்றது. அவ்வாறு ஆண்டவர்களை மிலேச்ச குல மன்னர்கள் என்றும் குறிப்பிடுகிறாரங்கள்.

இந்த மிலேச்ச குல மன்னர்களில் ஒருவனே இந்த சாளம்பன். சாளம்பனுக்கு முன்னர் அந்த ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னன் ஒருவனது பெயர் விஜயா(விஜயன்).

இன்று சாளம்பன் என்ற பெயர்களில் இருக்கும் ஊர்களில் உள்ள பழைமையான மக்கள் இந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த மக்களின் கலப்பு முகத்தோற்றத்தை உடையவர்களாகவே இருக்கிறார்கள்.

இந்த காமரூப பேரரசை ஆண்ட மிலேச்ச குல அரசர்கள் தம்மை நரகாசுரன் வம்சம் என்று அடையாளப்படுத்திக் கொண்டார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த காமரூப பேரரசு இன்றைய அசாம் மாநிலத்தை மையமாக கொண்டு அமைந்திருந்தது. இலங்கை வரலாறும் விஜயன் லாலா நாட்டில் இருந்து வந்தவன் என்று கூறுகிறது. லால நாடு என்பதும் இந்த அசாம் பகுதியில் உள்ள ஒரு நாட்டையே குறிக்கும்.

விஜயன் இலங்கைக்கு வந்து ஆட்சிசெய்த பகுதியாக இன்றைய மன்னார் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளையே குறிப்பிடப்படுகிறது. அந்த பகுதிகளிலேயே அதிகளவான ஊர்கள் சாளம்பன் என்ற பெயரில் உள்ளது.

விஜய வம்சம் என்று குறிப்பிடப்படும் மக்கள் பலர் இலங்கை தமிழர்கள் என்று சொல்லப்படும் மக்களே. அசாமிய பாண்டிய கலப்பு இனமாகவே இலங்கை தமிழர்கள் இருக்கிறார்கள். வேறு நாடுகளுக்கு சென்றால் இலங்கை தமிழர்கள் வங்காளிகளா என்ற கேள்வியை இன்றுவரை எதிர்நோக்கும் நிலையே காணப்படுகிறது. அதாவது வங்காளிகள் இலங்கை தமிழர்கள் இருவரும் ஒத்த தோற்றத்தை உடையவர்களாகவே உள்ளார்கள்.

(காமரூப அரசர்கள் நரகாசுரன் வம்சத்தினர் என்று அசாமியர்கள்தான் கூறுகின்றனர். காளிகா புராணத்திலும் நரகாசுரனை வதைத்த கதை வருகிறது. அதுவும் சக்தி வழிபாட்டின் வகைகளைப் பற்றி விவரிக்கும் புராணமாகும். நரகாசுரனை வதைத்தது காளிதேவியின் அம்சமாகும். இது பெண் தெய்வ வழிபாட்டு நிகழ்வாகவே இருக்கிறது.

வைணவ மயப்பட்ட நரகாசுரன் கதையில் கூட கிருஷ்ணன் வதைப்பதாக இல்லாமல் சத்தியபாமா என்ற பெண் அம்சமே வதைப்பதாக உள்ளது)






Sunday, November 12, 2023

யார் அந்த நரகாசுரன்? ஏன் இந்த தீபாவளி?

நர+கா+ சுரன் என்றால் மனிதர்களின் இருளில் உதித்தவன் என்று பொருள். நர என்றால் மனிதர் என்றும், கா என்றால் இருள் என்றும், சுரன் என்றால் உதித்தவன் என்றும் பொருள்.

இங்கே இருள் என்பது மனிதரின் இருள்மலமான ஆணவத்தை குறிக்கும். மனிதர்களின் ஆவணத்தில் இருந்து தோன்றியவன் இந்த நரகாசுரன். ஒவ்வொரு மனிதருக்கும் உள்ளே இந்த நரகாசுரன் என்ற தீயவன் இருக்கிறான். மனிதர்கள் அறிவு பெறும் போது அறியாமையால் உருவான நரகாசுரன் மறைந்து போகிறான்.

ஆணவம் என்பது அறியாமையால் தோன்றுவது. இங்கே அறிவு என்பது பள்ளிப் பாடமோ, பட்டப்படிப்போ கிடையாது. எது மனிதர்களது அஞ்ஞானத்தை- அறியாமையை போக்குகிறதோ, எது ஆணவத்தை நீக்குகிறதோ அதுதான் உண்மையில் அறிவு என்பது. பள்ளியில் பயில்வதும் கல்லூரியில் கற்பதும் அறிவு கிடையாது. அவை வெறும் தகவல் அறிதல்கள்.

இந்த தீபாவளி திருநாள் உருவான நரகாசுர வதம் செய்த கதையில் மாயவனான கண்ணனால் நரகாசுரனை வதம்செய்ய முடியாமல் சத்தியபாமாவே நரகாசுரனை வதம்செய்வார். அது ஏன்?

கண்ணன் என்ற மாயவன் மாயையின் உருவகம். மாயையே உயிர்களுக்கு ஆசைகளை உண்டுபண்ணி அறிவை மயக்குகிறது. மாயையிலேயே ஆணவம் உருவாக்குகிறது. எதனால் ஆணவம் உருவாகியதோ எதனில் ஆணவம் உருவாகியதோ அதனாலேயே ஆணவத்தை எப்படி அழிக்க முடியும்? அதனால்தான் மாயையின் துணையான சத்தியபாமா நரகாசுரனை அழிக்கிறார்.

மாயை ஆணவத்தை உருவாக்கினாலும் அந்த மாயை மெய்ப்பொருளில் நின்றே தோன்றுகிறது. மெய்ப்பொருளே மாயையாக உயிர்களுக்கு தோன்றுகிறது என்றும் கொள்ளலாம். அவ்வாறு மெய்பொருளில் நின்று தோன்றிய மாயைக்கு மெய்ப்பொருளே துணையாகவும் இருக்கிறது. அதனால்தான் மாயவனின் துணையை சத்திய பாமா என்கிறோம். சத்தியம் என்றால் உண்மை. மாயையின் துணையாக மாயையின் பின்னால் இருப்பது உண்மை. அதுதான் மெய்ப்பொருள்.

இங்கே நரகாசுரன் கதையில் மாயவனின் பின்னால் நின்று சத்தியபாமா நரகாசுரனை அழிக்கிறார். நாம் வாழ்வது மாயை சார்ந்த வாழ்வைத் தான். இந்த மாயையில் நின்றே நாம் உண்மையை உணர்ந்து கொள்ள முடியும். நாம் கடவுளை வழிபடுவதும் மாயையில் நின்றே. கடவுள் எமக்கு உண்மையை உணர்த்துவதும் மாயையின் மூலமே. கடவுள் எம் அறியாமையை நீக்குவதும் மாயையில் நின்றே.

எம் எல்லோருக்குள்ளும் இருக்கும் நரகாசுரன் என்ற அறியாமையால் உருவான அரக்கனை அழிப்பதற்கு மெய்ப்பொருளாம் இறைவனது துணை வேண்டும். இறைவனின் அருளை மாயையை சார்ந்து நின்று வழிபடுவதன் மூலமே அடையமுடியும். இந்த ஒப்பற்ற தத்துவத்தை விளக்கும் திருநாளே தீபாவளி திருநாள்.

எம்முள் இருக்கும் நரகாசுரன் கொல்லப்படும் போது அகஒளி பரவும். உண்மையை உணர்ந்து கொண்டாடுவோம்.

அனைவருக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.



Friday, August 4, 2023

பிரபஞ்சம் தோன்றுவதற்கு எது காரணம்?

படைப்பின் கடவுள் யார்?
பிரம்மா, மாயவன், சக்தி, சிவம்..

நாம் கண்ணால் பார்க்கக்கூடிய பிரபஞ்சம் உண்மையானது கிடையாது, அது உண்மை என்று உயிர்களுக்கு தோன்றுவதற்கு மாயையே காரணம். மாயை என்பது அறிவின் மயக்கம். அறிவின் மயக்கத்தினால் இந்த உலகம் உண்மையானதாக தோன்றுகிறது, அவ்வாறு அறிவை மயக்குவது ஆன்மாவுடன் சேர்ந்து நிற்கும் ஆணவமே ஆகும். அதனால்தான் உயிர்களுக்கு இந்த உலகம் தோன்றுவதற்கு மாயவனே முதற்காரணம் என்று கூறுகிறார்கள்.

மாயவன் என்றால் இருள் மலம் எனப்படும் ஆணவத்தின் குறியீடு. ஆணவத்தினால் தான் மாய நிலை உயிர்களுக்கு தோன்றுகிறது. அதனால்தான் மாய நிலையை உருவாக்குபவன் என்னும் பொருளில் மாயவன் என்கிறோம். அவன் உயிர்களுக்கு இருளாக இருப்பவன் என்னும் பொருளில் கிருஷ்ணன் என்கிறோம்.

உயிர்களுக்கு உலகங்கள் உண்மை என்று தோன்றுவதற்கு மூல காரணம் மாயவன் என்றால், இந்த உலகங்கள் இல்லையா? இல்லை ஏதாவது ஒன்று இருக்கிறது அதுதான் வேறு விதமாக தோன்றுகிறதா? அப்படியானால் அந்த ஏதாவது ஒன்று தோன்றுவதற்கு உண்மையாக யார் காரணம்? 

நாம் காணும் உலகங்கள்/ பிரபஞ்சம் என்பவை உண்மையான தோற்றம் இல்லை என்றாலும் அங்கு அவ்வாறு ஒன்று இருக்கிறது. இறைவனின் ஆற்றல் நிலையில் ஆன்மாக்கள் நின்று செயலாற்றும் நிலையே மாயையினால் பிரபஞ்ஞசமாக தோன்றுகிறது.

இறை சக்தியில் ஆன்மாக்களின் சேர்க்கையும் செயல்களுமே உடலாக உலகமாக பிரபஞ்சமாக என்று தோன்றுகின்றது. இங்கே பொருட்களாக நாம் காண்பவை அனைத்தும் ஆற்றலின் நிலைகளே. இது அறிவின் வெளிப்பாட்டால் ஆற்றல் நிலை என்றும், ஆணவம் உண்டாக்கும் மாயையால் பிரபஞ்சம் என்றும் உடல் என்றும் ஆன்மாக்களுக்கு தோன்றுகிறது. 

மனித உடலை அனுபவப் பொருளாக கொண்டு அனுபவிக்கும் ஒரு ஆன்மா எமக்குள் இருப்பது போல, இந்த பிரபஞ்சம் என்பதை அனுபவப் பொருளாக கொண்டு ஒரு ஆன்மா இருக்கிறது. அதுதான் பிரம்மா எனப்படுகிறது.

மனிதன் எப்படி அனைத்து செயல்களையும் தானே செய்வதாக எண்ணுகிறானோ, அதுபோலவே இந்த பிரபஞ்சம் முழுவதும் நடக்கும் அனைத்தும் தன்னால் செய்யப்படுவதாக பிரம்மா எண்ணிக்கொள்கிறான். ஆனால் பிரம்மன் என்பவனும் நியதியின் படி பிறப்பு இறப்பு என்னும் சுழற்சி நிலைக்கு உட்பட்ட ஒரு ஆன்மாவே ஆகும்.

இந்த பிரபஞ்சம் முழுவதும் நடக்கும் செயல்களை அனுபவிக்கும் ஆன்மா பிரம்மா எனப்படுகிறது.

இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு காரணமான அறிவை மயக்கும் மாயையை உண்டாக்கும் ஆணவ நிலை மாயவன் எனப்படுகிறது.

மாயையை நீக்கி பார்த்தால் தெரியும் இறைவனின் ஆற்றல் நிலை சக்தி எனப்படுகிறது. 

இந்த ஆற்றல் நிலைகளை கடந்து வெளிப்படா நிலையில் இருக்கும் ஆற்றல் மூல பேரிருப்பு சிவம் எனப்படுகிறது.

பெரும்பாலான இந்துக்கள் ஏன் பிரம்மனை வழிபடுவதைக் கைவிட்டார்கள் என்றால் இதுதான் காரணம். அவனது விருப்பம் தேவை எதுவும் ஆன்மாக்களுக்கு தேவைப்படவில்லை. அவனும் எம்மைப் போன்ற ஒரு ஆன்மாவே, இல்லை அப்படியும் சொல்ல முடியாது மனிதர்கள் கூட சுய விருப்புடன் செயலாற்ற முடியும். ஆனால் பிரம்மா என்பது வெறும் பிரபஞ்ச அனுபவத்தை அனுபவிக்கும் ஒரு நிலையே என்று கருதினார்கள். அதனால் ஏன் வழிபட வேண்டும் என்ற எண்ணம் தோன்றி பிரம்மனை கைவிட்டு விட்டார்கள்.

ஆனால் மாயவன் இல்லாவிட்டால் இந்த உலக வாழ்க்கை இல்லை என்று ஆகிவிடும். பொதுவாக நாம் அனைவரும் உலகியல் வாழ்க்கை மீது பற்றுதல் உடையவர்கள். இவை எல்லாம் பொய் என்று ஆகிவிட்டால் இந்த வாழ்வை வாழமுடியாது. நாம் உலகியல் வாழ்வை வாழ்வதற்கு இந்த மாயை ஆணவம் எல்லாம் அவசியம் ஆகிறது. அதனால்தான் உலகியல் இன்பங்களை அனுபவிக்க விரும்புபவர்கள் மாயவனை கிருஷ்ணனை வழிபடுகிறார்கள்.

மாயையில் தோன்றினாலும், உண்மை நிலையில் நின்று பார்த்தாலும் எல்லாம் சக்தியின் வடிவமாகவே உள்ளது. அதனால் உலகியல் வாழ்விலும் சரி, முக்தியை நோக்கிய பயணத்திலும் சரி சக்தியின் தேவை தவிர்க்க முடியாதது. சிவத்தை நோக்கி ஆன்மா பயணிக்க வேண்டும் என்றாலும் அதற்கும் சக்தி தேவை. அதனால் உலகவாழ்வை விரும்புபவர்கள் முக்தி நிலையை வேண்டுபவர்கள் இருவருமே சக்தியை வழிபடுகிறார்கள்.

முக்தி நிலையை வேண்டுபவர்களும், உலக வாழ்வில் இருந்து கொண்டே அமைதியை, ஞானத்தை வேண்டுபவர்களும் சிவத்தை நோக்கி நிற்கிறார்கள். சிவத்தை வழிபடுகிறார்கள்.

இப்போது சிந்தித்து பாருங்கள். இந்த பிரபஞ்சம் என்பது சிவ சக்தியில் இருந்து தோன்றினாலும் பிரம்மா எனப்படும் அந்த ஆன்மாவில் தோன்றிய ஆணவத் தூண்டலே காரணமாக இருக்கிறது. 

பிரம்மா என்ற அந்த ஆன்மா இருந்தால் தானே அதற்கு தூண்டல் உண்டாக முடியும். ஆகவே பிரபஞ்ச படைப்பின் காரணம் பிரம்மா என்றே கொள்ளவேண்டும். அதனால்தான் பிரம்மனை படைப்பின் கடவுளாக குறிப்பிடுகிறார்கள்.

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -48



இந்த ஆலயத்தை வழிபட்டால் காதல் கைகூடுமாம் -மோகவன கோட்டம்

 ஒரே இடத்தில் 11 தெய்வங்கள்

பண்டார வன்னியனுக்கு என்று தனியான சந்நிதி.. 

இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதி.. இலங்கையில் இவ்வாறான ஒரு கோயில் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்?

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் ஓர் எல்லைக் கிராமமான விசுவமடு கிராமத்தில், விசுவமடு குளத்தின் கிழக்குக் கரையில், வனப்பகுதியை எல்லையாகக் கொண்டு அமைந்துள்ளது இந்த கோயில் கோட்டம். இதற்கு மோகவன கோட்டம் என்று ஒரு பெயரும் உள்ளது.

கிராம மக்களால் வீரபத்திரர் கோயில் என்று அழைக்கப்பட்டாலும் சிவன் அம்மன் முருகன் நாகதம்பிரான் அனுமன் என்று கடவுள் மற்றும் தெய்வங்களாக பதினொரு பேர் ஒரே வளாகத்தில் இருந்து அருள்கின்றனர். 

இது மிகவும் பழைமை வாய்ந்த வரலாற்று தொன்மை மிக்க ஆலயம் என்று மக்கள் குறிப்பிடுகிறார்கள். பண்டார வன்னியன் குருவிச்சிநாச்சி காதல் கதையுடன் சம்பந்தம் உள்ள கோயில் என்று சிலர் கூறுகின்றனர். குருவிச்சிநாச்சி என்பவள் வன்னிப் பகுதியை ஆண்ட கடைசி மன்னன் பண்டார வன்னியனின் காதலி. தன் காதல் கைகூட பண்டார வன்னியன் வழிபட்ட தலம் என்றும், காதல் கைகூடியதால் பண்டார வன்னியன் கோயிலை புனர்நிர்மாணம் செய்வித்தான் என்றும் கர்ண பரம்பரை கதைகள் கூறுகின்றன. 

பண்டார வன்னியனுக்கு என்று தனியான சந்நிதி ஒன்றும் இங்கு அமைந்துள்ளது. பண்டார வன்னியன் தெய்வமாக போற்றப்பட்டு பூசை செய்யப்படும் ஒரே இடம் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

இந்த ஆலயத்திற்கு வந்து வீரபத்திரரை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பதும் நிறைவேறாத காதல் கைகூடும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. இந்த ஆலயத்தைப் பற்றி அறிந்து யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மலையகம் என்று பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிலர் வந்து வழிபட்டு செல்கின்றனர். காதலர்கள் இருவரும் சேர்ந்து இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டால் காதல் விரைவில் கைகூடும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. அதனால் தூர இடங்களில் இருந்தும் சில காதலர்கள் வந்து செல்கின்றனராம். 

இவை எல்லாவற்றையும் கடந்து இந்த ஆலயம் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் வன எல்லையில் அமைந்துள்ளது. உயர்ந்து வளர்ந்த மரங்கள். அமைதியான சூழல். குளிர்மையான காற்று. தெய்வங்களுக்கு என்று சேர்ந்தும் தனித்தும் என்று பல சந்நிதிகள் என்று ஒவ்வொன்றும் இரசித்து அனுபவிக்கும் வகையில் உள்ளது.

நிச்சயமாக எமக்கொரு சந்தர்ப்பம் கிடைத்தால்..

இல்லை இல்லை.. ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கி நாம் அனைவரும் செல்ல வேண்டிய இடம். ஒருமுறை சென்றால் மீண்டும் மீண்டும் செல்லத் தூண்டும் அதுதான் மோகவன கோட்டம்.

ஆம், இதற்கு மோகவன கோட்டம் என்று பெயர்.







கடவுள் ஏன் பிறப்பு எடுக்க முடியாது?

பிறப்பு எடுத்தால் அது ஏன் கடவுள் இல்லை என்கிறோம்? கடவுள் என்பது உண்மை என்றால், அது ஒருபோதும் மாறாதது. அதனால்தான் கடவுளை எப்போதும் மாறாதது என...