ஆன்மீகம் எழுப்பும் முதன்மையானதும் ஆன்மீகத்தின் அடிப்படையானதுமான கேள்வி "நான் யார்?" என்பது..
ஒரு மனிதன் நான் என்று சுட்டுவது எது என்பதை அறிவதே நான் யார் என்ற கேள்வியின் நோக்கமாகும்..
அதற்கான பதிலாக நான் என்பது ஆன்மாவே என்றும் உடல் என்பது நானல்ல அது எனது உடமை என்றும் பதில் பெறப்பட்டது.
இங்கே நாம் காணும் அனைத்தும் உயிர்கள் தான். உயிரற்ற ஒன்றை எங்கேயும் காட்டமுடியாது. மனித பார்வையில் அவற்றின் உயிர்த்தன்மையும், இயக்கமும் புலப்படாத நிலையில் இருக்கலாமே அன்றி, உயிர்த்தன்மை அற்ற இயக்கமற்ற ஏதேனும் ஒன்றை காட்ட இயலாது.
நாம் காணும் பூமி என்பது பூமியின் உடல்தான். உண்மையான பூமி என்பது அதன் ஆன்மாவையே குறிக்கும். நாம் சூரியன், சந்திரன் என்று காண்பவையும் அதன் உடல்களேயன்றி அதன் ஆன்மாவை அல்ல. இவ்வாறு நாம் காணும் அனைத்தின் உள்ளேயும் ஆன்மா என்ற ஒன்று உள்ளது.
நாம் பூமியில் உள்ளோம், பூமி சூரிய குடும்பத்தில் உள்ளது, சூரிய குடும்பம் அண்டத்தில் உள்ளது, அண்டம் அண்டசராசரம் எனும் பேரண்டத்தில் உள்ளது, அந்த பேரண்டம் பரத்தில் உள்ளது. அந்தப் பரம்..?
நிற்க..
இந்த அண்ட சராசரங்கள் பரத்தில் நின்று தோன்றியது, இங்கே தோன்றும் மாயையாக இருப்பவை அங்கே தோன்றா மாயையாய், மாயா மூலமாய், சுத்த மாயை என்னும் நிலையில் இருக்கும்.
அசுத்த மாயை அல்லது பிரகிருதி மாயை எனப்படுவது எமது கண்களுக்கு நேரடியாக அல்லது கருவிகள் வழியாக புலப்படுவது. சுத்த மாயை என்பது இந்த மாயைகள் தோன்ற மூலமான மூலப்பொருள். இந்த பேரண்டத்தில் உள்ள அனைத்தும் தோன்றுவதற்கு மூலகாரணமான மூலப் பரம்பொருள். இது கண்களுக்கு புலப்படாதது.
இங்கே பரம் என்பது அண்டம் போல தோன்றும் பொருள் அல்ல. ஆனால் பேரண்டம் முழுவதும் தோன்றுவதற்கான சுத்தமாயை என்னும் மூலப் பொருள்களை கொண்ட நிலை. இங்கே பரம் என்பது சுத்த மாயையிலான உடலைக் கொண்டிருந்தாலும் அதற்கு ஒரு ஆன்மாவும் உண்டு. அதுதான் பரமாத்மா எனப்படுகிறது.
இப்போது உடல் நானா? ஆன்மா நானா? என்ற கேள்வியை இங்கே பொருத்திப் பார்க்கலாம். இங்கே பரத்தின் ஆன்மா பரமான்மா, பரத்தின் உடல் பரம்பொருள். ஏனென்றால் உடல் என்பது ஆன்மாவின் உடமைபொருள்.
இந்த பரமாத்மா, பரம்பொருள் இரண்டும் சேர்த்து குறிக்கும் பெயரே பிரம்மம் என்பது. ஆன்மாவும் உடலும் சேர்த்து தான் மனிதன் என்பது போன்றது பிரம்மம்.
பரம்பொருள் கடவுளா?
பரமாத்மா கடவுளா?
என்ற வேறுபாடே சமய பிரிவுகளாக இங்கு இருக்கிறது.
பரம்பொருள் என்பது மாயா மூலம்..
பரம்பொருள், பரமாத்மா எனும் இரண்டே இருக்கிறது. அவற்றை கடந்த ஒன்று கிடையாது. அவை தானாகவே ஒன்று ஒன்றுடன் சேர்ந்து தோன்றி மறைந்தது நிலைத்து நிற்கும் என்பது பௌத்த சமயத்தின் வாதம். சாங்கிய வாதம்.
பரம்பொருள் பரமாத்மா இரண்டும் எங்கே நிலைத்து நிற்கிறதோ, எங்கே தோன்றி ஒடுங்கிகிறதோ, அவை தோன்றுவதற்கும் ஒடுங்குவதற்கும் எது காரணமோ, அதுதான் கடவுள் என்பது சித்தாந்தம்.
பரம்பொருள் தான் கடவுள், பராமாத்மாதான் கடவுள் அல்லது பரம்பொருள் பரமாத்மா எனும் இரண்டும் சேர்ந்த பிரம்மம் தான் கடவுள் என்பவர்கள் சாங்கிய நம்பிக்கையை பின்பற்றுபவர்கள் எனலாம்.
அவர்கள் அனைவரும் பிரசன்ன பௌத்தர்கள், பிரசன்ன சமணர்கள் என்று கொள்ளலாம்.
இங்கே ஒட்டுமொத்த இந்துக்கள் என்று சொல்பவர்களும் இந்த சைவம்- சாங்கியம் என்னும் இரண்டு வாதத்திற்குள்ளும் அடங்கி விடுவார்கள்.
பி.கு:- சைவர்கள் என்று கூறுபவர்களிலும் சிவம் என்பது பிரம்மமே என்பவர்களும், பரமாத்மா தான் சிவன் என்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அது சித்தாந்த கருத்தல்ல..
#சர்வம்_சிவமயம்
#ஆன்மீகம்_அறிவோம்-41
No comments:
Post a Comment