இந்த உலகம் இந்த பிரபஞ்சம் தோற்றுவிக்கப்பட்டது பற்றி நாம் பார்க்கும் முன்பு எமது ஆன்மாவை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
நாம் உடலாலும் உடலில் உள்ள கருவிகளாலும் பெறும் அனுபவங்களை ஏதோ ஒன்று உணர்கிறது, அனுபவிக்கிறது. அதுவே ஆன்மா என்கிறோம். ஆன்ம பொருளே அனுபவிப்பது. உடல் என்பது ஒரு ஊடகம் மட்டுமே.
ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒரு விந்தணு ஒரு கருமுட்டை என்று ஒன்றுசேர்ந்து ஒரு சிறு புள்ளியாக உருக்கொள்ளும் போதே அங்கு ஒரு ஆன்மாவும் சேர்த்து விடுகிறது அல்லது அதற்கு முன்பே அங்கொரு ஆன்மா இருக்கிறது என்று கொள்ளலாம். அந்த ஆன்மாவைச் சுற்றி பலநூறு- பல ஆயிரம் -பலகோடி என்று உயிர் கலங்கள் உயிரினங்கள் சேர்த்து குழந்தை என்பதாக மாறுகிறது. இங்கே ஒரு குழந்தையாக பிறக்கும் போதே அதில் பலகோடி உயிர்களுடன் சேர்ந்தே பிறக்கின்றன. இங்கே மனித உடல் என்பது ஒரு ஆன்மாவை கொண்டது அல்ல. அதில் பலகோடி ஆன்மாக்கள் உள்ளது. எமது உடலில் இருக்கும் அத்தனை கோடி ஆன்மாக்களுக்கும் தனித்தனியாக அனுபவிப்புக்கள் இருக்கும். ஆனால் இந்த ஒட்டுமொத்த உடலையும் தனது கருவியாக கொண்டு எந்த ஒரு ஆன்மா அனுபவத்தை பெறுகிறதோ அதையே எமது ஆன்மா என்று சுட்டுகிறோம்.
ஒரு சிறு புள்ளியாக கருவாகும் போதே ஆன்மா இருக்கிறது என்றால் அது அப்போதே பிறவிக்குரிய அனுபவத்தை பெறுகிறதா என்று தோன்றலாம். ஆனால் அது கருவில் இருக்கும் வரையில் அனுபவத்தை பெறுவதில்லை. தாயின் ஒரு உறுப்பாக ஒரு அங்கமாகவே இருக்கிறது. கருப்பையை விட்டு பூமிக்கு வந்து தன் சொந்த சுவாசத்தை பெறும்போதே, உயிர்க்காற்று உள்ளே சென்று தனியாக நின்று செயற்பட ஆரம்பிக்கும் போதே அந்த ஆன்மா அந்த பிறவிக்குரிய அனுபவத்தை பெற ஆரம்பிக்கிறது.
மனித பிறவியில் பிறக்கும் ஆன்மாக்கள் தமது அனுபவத்தை பெற ஆரம்பித்தல் உயிர்க் காற்றின் தூண்டுதலால் நடக்கிறது. அதுபோலவே ஒவ்வொரு பிறவிகளும் ஆன்ம அனுபவத்தை பெறுவதற்கு வேறு வேறு தூண்டுதல்கள் காரணமாக இருக்கலாம்.
இந்த உலகம் ,இந்த பிரபஞ்சம் என்பவை கருவாகி தோன்றிய பின்னர், அவை செயற்பட ஆரம்பிப்பதற்கும் வேறு ஒரு தூண்டுதல் காரணமாக இருக்கலாம்.
ஆனால் நிச்சயமாக ஒரு தூண்டுதல் காரணமாக இருக்க வேண்டும்.
#சர்வம்_சிவமயம்
#ஆன்மீகம்_அறிவோம் -45
No comments:
Post a Comment