Tuesday, July 4, 2023

மாயை

நாம் ஆன்மீகத்தை பற்றி, உலகத்தை பற்றி எம்மை பற்றி எல்லாம் அறிந்து கொள்ள வேண்டும் என்றால் முதலில் மாயை என்றால் என்ன என்று அறிந்து கொள்ள வேண்டும்.

இந்து சமய தத்துவங்களில் மாயை என்பது பொதுவானது என்றாலும் ஒவ்வொரு சமய பிரிவுகளிலும் பொருள் கொள்ளும் வகையில் வேறுபாடு உள்ளது. 

மாயை என்றால் ஒன்று இன்னொன்றாக தோன்றுதல் என்று பொருள். 

ஒன்றே பலவாறாக தோன்றுதல், ஒன்று தன் உண்மையான அளவில் இருந்து வேறுபட்டு தோன்றுதல், ஒன்று தன் உண்மை உருவை மறைத்து வேறு ஒன்றாக தோன்றுதல் எல்லாம் மாயை எனப்படும்.

மாயை என்பதை அறிவின் மயக்கத்தால் உண்டாகும் தோற்றம் என்பர். அறிவு என்றால் ஒரு பொருளைப் பற்றிய உறுதியான முடிவாகும். எமது வீடுகளில் கத்தி, கோடாரி, மண்வெட்டி என்று பல பொருட்கள் உண்டு. ஆனால் அவை அனைத்தும் இரும்பு என்னும் உலோகத்தாலும் மரத்தாலும் ஆனவை. ஆனால் எமக்கு அவை இரும்பு, மரம் என்று தோன்றாமல் கத்தி, கோடாரி, மண்வெட்டி என்றே தோன்றுகிறது. அதுதான் மாயையால் உண்டாகும் தோற்றம். அதாவது அறிவின் மயக்கத்தால் அவை இரும்பாக, மரமாக தோன்றாமல் கத்தி கோடாரி என்று தோன்றுகின்றது. அப்படியானால் அவை கத்தி கோடாரி என்று தோன்றாமல் இரும்பு, மரம் என்று தோன்றுவது தான் அறிவு என்று சிலருக்கு தோன்றலாம். ஆனால் உண்மையில் அறிவு என்பது அதுவல்ல. இரும்பு என்பதும், மரம் என்பதும் ஒரு மாயத் தோற்றம் என்றும், அதன் உள்ளே இருக்கும் மூலப் பொருள் எதுவென்று அறிவதுமே அறிவு.

அது எப்படி இரும்பு மாயை ஆகும் என்று சிலருக்கு தோன்றலாம். நம் எல்லோருக்கும் ஓரளவு அறிவியல் அடிப்படை தெரிந்திருக்கும். அந்த அடிப்படையிலேயே பார்ப்போம். நாம் பார்க்கும் அனைத்து பொருட்களும் அணுக்களால் ஆனவை என்றும், அந்த அணுக்கள் அனைத்திற்கும் புரோட்டான்கள் நியூட்ரான்கள், இலத்திரன்கள் என்பவை ஆக்கக் கூறுகள் என்றும் அறிந்திருக்கிறோம்.

நாம் இரும்பு, பொன், வெள்ளி என்று பார்க்கும் பொருட்கள் முதல் சுவாசிக்கும் ஆக்ஸிஜன் வரை அனைத்தும் அணுக்களால் ஆனவை என்று தெரியும். அந்த அணுக்கள் அனைத்தும் புரோட்டான், நியூட்ரான், இலத்திரன் என்பவற்றால் ஆக்கப்பட்டவை என்றும் தெரியும். எப்படி கத்தி கோடாரி மண்வெட்டி என்பவை மரத்தாலும் இரும்பாலும் ஆக்கப்பட்ட பொருட்களோ அதுபோல, இரும்பு, பொன் வெள்ளி, ஆக்ஸிஜன் எனும் அனைத்தும் புரோட்டான் நியூட்ரான் இலத்திரன் என்பவற்றால் ஆக்கப்பட்டவை தான்.

கத்தியில் இருக்கும் இரும்பின் அளவும் மரத்தின் அளவும் அதன் வடிவமும் எப்படி மண்வெட்டியில் இல்லையோ அதுபோல் பொன்னில் உள்ள நியூட்ரான் புரோட்டான் இலத்திரன் அளவு வெள்ளியில் இருப்பில் இல்லை. இங்கே ஆக்கக் கூறுகள் ஒன்றான போதும் அதன் அளவில் ஏற்படும் மாறுதல்களால் வேறு வேறாக தோன்றுகிறது. 

அறிவியலின் அடிப்படையில் பார்த்தால் இந்த உலகம் முழுவதும் உள்ள அனைத்தும் புரோட்டான் நியூட்ரான் இலத்திரன் என்பவற்றால் ஆக்கப்பட்டவை தான். இந்த மூன்றாலும் ஆக்கப்பட்ட அனைத்தும் வேறு வேறாக தோன்றுவது மாயை தானே.

உண்மையில் நியூட்ரான் புரோட்டான் இலத்திரன் இவைதான் அனைத்து பொருட்களுக்கும் மூலமாக? அதுதான் ஆக்கக் கூறா என்றால் அதுவும் கிடையாது. இந்த புரோட்டான் நியூட்ரான் இலத்திரன் என்று சொல்லப்படுபவற்றுக்கும் ஒரு ஆக்கக் கூறுகள் உண்டு. அந்த ஆக்கக் கூறை கண்டறிந்து பார்த்தால் அதற்கும் ஒரு ஆக்கக் கூறுகள் உண்டு. இவ்வாறு நாம் முடிவிலியாக பகுத்துக் கொண்டே போகலாம். அந்த முடிவிலியான முடிவில் தோன்றும் ஆக்கக் கூறுதான் உண்மையான பொருள். அதன் தோற்ந்தான் உண்மையான தோற்றம். அந்த நிலையையே சுத்த மாயை என்பார்கள். மூலப் பொருள் மாயை நீங்கித் தோன்றும் நிலை அது.

இந்த பரத்தில் இருக்கும், பிரபஞ்சம் அனைத்தும் தோன்றுவதற்கு காரணமான மூலப் பொருள் இந்த சுத்த மாயைதான். அதனால்தான் மூலப் பொருள் மாயவன் என்று கொண்டாடப் படுகிறது. இந்த மாயை மட்டும் இல்லை என்றால் இந்த பிரபஞ்சம் இந்த பூமி அதிலுள்ள பொருட்கள் என்று எதுவும் கிடையாது.

இப்போது சிந்தித்து பாருங்கள் இந்த உலகத்தில் உள்ள அனைத்தும் மாயை தானே. ஒன்றே பலவாறாக தோன்றுதல் மாயையின் இயல்பு. மற்றையது அளவில் மாறுபட்டு தோன்றுதல்.

//சரி இந்த மாயா மூலத்தின் அளவு எதுவென்று தெரியுமா? நாம் பார்க்கும் பொருட்களின் அளவு உண்மையில் எவ்வளவு? //

அடுத்த பதிவில்...

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -37



No comments:

கடவுள் ஏன் பிறப்பு எடுக்க முடியாது?

பிறப்பு எடுத்தால் அது ஏன் கடவுள் இல்லை என்கிறோம்? கடவுள் என்பது உண்மை என்றால், அது ஒருபோதும் மாறாதது. அதனால்தான் கடவுளை எப்போதும் மாறாதது என...