இறைவன், உயிர்கள், மலங்கள் என்னும் மூன்றும் நித்தியமானவை. இவை மூன்றும் யாராலும் தோற்றுவிக்கப்படவில்லை என்பது சித்தாந்த முடிவு.
இந்த இறைவன், உலகம், மலங்கள் என்னும் மூன்றும் சுதந்திரமானவை.
இறைவன் உயிர்களதோ, மலங்களதோ இருப்பை மாற்றுவதில்லை. இறைவனுக்கு அவற்றின் மீது எந்த ஈடுபாடும் கிடையாது. இறைவன் செயல்கள் எதையும் செய்ய விரும்புவதில்லை. அவனுக்கு விருப்பு, வெறுப்பு, பற்று, பாசம் என்று எதுவும் கிடையாது. ஆனால் அவன் சர்வ வல்லமை உடையவன். முற்றுணர்வும், பேரறிவும் உடையவன். அவனுக்கு எல்லா ஆற்றல்களும் முடிவிலியாக உள்ளது. அவன் எல்லையற்ற பேரானந்தத்துடன் எல்லையற்ற வியாபகத்தில் ஆற்றலையும் அருளினையும் வழங்கிக் கொண்டே இருக்கிறான்.அவன் பேரறிவு உடையவன், சிற்றறிவினால் அவனை (முழுவதுமாக) அறிய முடியாது.
இங்கே அவன் என்று சுட்டுவதால் இறைவன் ஆணல்ல, ஆணல்ல என்பதனால் பெண்ணல்ல, அதனால் இரண்டும் அல்லாத அலியும் அல்ல. ஏனென்றால் இறைவன் என்பது ஒரு நபரல்ல..
இங்கே இறைவன் ஆற்றலினையும் அருளினையும் வழங்குகிறான் என்பதால் அது செயலல்ல, இறைவனது வியாபகம் முழுவதும் அவனது ஆற்றலும் அருளும் நிறைந்துள்ளது என்பதே அதன் பொருள்.
#உயிர்கள் அனைத்தும் சிற்றறிவு உடையவை. அனாதி முதல் மலங்களைப் பற்றியே நிற்பவை. புறத்தே இருந்து அனைத்தையும் பெற்றுக் கொள்ளக்கூடியவை. அனாதி முதலாகவே மலங்களைப் பற்றி நிற்பதனால் இறைதன்மை பற்றியோ அதன் பேரின்ப நிலை பற்றியோ அறியாமல் இயக்கமின்றி சடம்போல் கிடந்து தாம் அறிவுப் பொருள் என்பதையே மறந்திருப்பவை. இவை அனாதிமுதல் இருந்தாலும் இறைவனின் வியாபகம் முழுவதும் இல்லாமல் ஒரு சிறு பகுதியில் உறைந்து கிடப்பவை.
#மலங்கள் எனப்படுபவை நிலை மாறக் கூடிய தோற்றப் பொருட்களாகும். இவை அறிவு இல்லாதவை. சிற்றறிவு பொருந்திய உயிர்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. உயிர்களுக்கு அவற்றின் உடமை என்னும் மயக்கத்தை கொடுத்து அதன் சிற்றறிவையும் மயக்கி மறைப்பவை.
ஒரு பெரும் மலைப்பாறையில் சென்று ஒரு சிறுதூசி ஒட்டுகிறது. ஒட்டிய தூசு தானே அந்த மலையை உடைமை கொண்டதாக எண்ணிக்கொள்கிறது. இந்த தூசியைச் சூழவும் தூசிக்கு மேலாகவும் பல தூசிகள் சென்று ஒட்டிக் கொள்கின்றன. அந்த தூசிகளும் அவ்வாறே நினைக்கின்றன. அந்த கற்பாறையில் ஏற்கெனவே ஒட்டிய தூசித் துகள்களும் தமது உடமையே என்று புதிதாக ஒட்டிய தூசிகள் எண்ணிக் கொள்கின்றன. முதலில் ஒட்டிய தூசித் துகள்களால் இப்போது எப்படி முயற்சித்தாலும் அதிலிருந்து விடுபட முடியாது. பெரும் மலைப்பாறையாக முதலில் நின்றதும் இவ்வாறு ஒன்றை ஒன்று பற்றி உறைந்து நின்ற உயிர்களே என்பதையும் பொதுவாக உயிர்கள் அறிவதில்லை.
இந்த நிலையில் அங்கே விடுபட முடியாமல் ஒட்டியிருக்கும் சில துணிக்கைகளுக்கு தமது நிலை புரிகிறது. ஆனால் அவற்றால் செயற்பட முடியவில்லை. அதிலிருந்து விடுபட முடியவில்லை. விடுபடுவதற்கு வழி தெரியவில்லை. எம்மை யாராவது ஒருவர் வந்து விடுவிக்க மாட்டாரா என்று ஏங்குகின்றன.
காற்றில் சுதந்திரமாக பெருமகிழ்ச்சியோடு மிதந்து திரிந்த தூசிகள் மலைப்பாறையில் பற்றியதுதான் தமது துன்பத்துக்கு காரணம் என்பதை அறியவில்லை. தாமே மலைப் பாறையை பற்றிக்கொண்டு தம்மை விடுவிக்க யாரேனும் வரவேண்டும் என்று எதிர்பார்த்தன. தம் பற்றுதலை கைவிட்டால் மீண்டும் காற்றில் மிதந்து செல்லலாம் என்று அவற்றால் அறிய முடியவில்லை.
எத்தனை வேகமாக காற்று வீசினாலும் தூசிப்படலம் வளருமே அன்றி முழுவதும் குறைவதில்லை. எத்தனை வேகமாக ஓடும் ஆற்றிலும் பாசிகள் கரைந்து இல்லாமல் போவதில்லை. குறைந்த பற்றுதல் உடைய தூசிகள் சிறிய காற்றிலேயே விடுபட்டு பறந்துவிடும். கொஞ்சம் அதிகமான பற்றுதல் கொண்ட தூசிகள் பலமான காற்றில் விடுபட்டு பறந்துவிடும். ஆனால் பாறையோடு பாறையாக ஒட்டிய தூசிகள், தாமே பாறை என்றாகி விடுபட முடியாமல் ஒட்டியிருக்கும்.
இங்கே பாறை என்பது மலங்கள் என்றும், தூசிகள் என்பவை உயிர்கள் என்றும், காற்று என்பது இறைவனின் அருள் என்றும் கொள்க, இவை உவமையே அன்றி அவை உண்மை என்று கருதலாகாது.
இவ்வாறு துன்பப்பட்டு வருந்தும் உயிர்கள் விடுபடவேண்டும் என்று பொதுவாக உணர்ந்தாலும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக விடுபட வேண்டும் என்றே விரும்பும். ஏனெனில் உயிர்கள் ஒவ்வொன்றும் சுதந்திரமானவை.
இறைவனுக்கு என்று எந்த விருப்பமும் கிடையாது. ஆனால் அவன் எந்த உயிர்களது விருப்பத்தையும் மறுதலித்ததில்லை. அதனால் அந்தந்த உயிர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அவை செயற்படுவதற்காக இந்த உலகங்களைப் படைத்தான். படைத்தான் என்பது, பாறையில் தூசியை போல் பற்றி உறைந்திருக்கும் உயிர்கள் விடுபட்டு செயற்படுவதற்கு வழிசெய்தான் என்பதாகும்.
இறைவன் அனைத்து உயிர்களதும் பாசப்பிணைப்பை நீக்கி தன் பேரின்ப நிலையில் சேர்த்துக் கொள்ளலாம் அல்லவா என்று சிலருக்கு தோன்றலாம். ஆனால் எல்லா உயிர்களதும் விருப்பம் அதுவாக இல்லை. அன்றியும் உயிர்கள் ஒவ்வொன்றும் சுதந்திரமானவை, அவ்வாறு செய்தல் அதன் இயல்பை மாற்றியதாக ஆகும். அதுதவிர இறைவன் தன் பேரின்ப நிலையில் சேர்த்து விட்டாலும் அவை மீண்டும் சென்று மலங்களைப் பற்றியே நிற்கப் போகின்றன,ஏனென்றால் உயிரின் இயல்பு அது, அங்கே மலங்களும் இருக்கிறது. அவற்றை அழிக்க முடியாது.
இறைவன் அவ்வாறு செயல்களைச் செய்ய விரும்புபவனாக இருந்தால் அவன் மலங்களில் இருந்து உயிர்களை விடுவித்து தன்னுடைய இருப்பில் சேர்த்துக் கொண்டிருப்பான். இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு தேவை இருந்திருக்காது.
அடுத்து இந்த உயிர்கள் மலங்கள் இரண்டும் எங்கே இருக்கிறது என்று ஒரு கேள்வி எழலாம். அவை இரண்டும் இறைவனின் பேரிருப்பின் உள்ளேயே இருக்கின்றன. இறைவனின் பேரிருப்பில் புறக்கணிக்க தக்க ஒரு சிறு பகுதியிலேயே உயிர்கள் மலங்கள் இரண்டினதும் இருப்பு ஒடுங்கி நிற்கிறது.
செயலற்ற நிலையில் அறிவு மயக்கி கல்போல் கிடந்த உயிர்கள் சிற்றறிவினை மீண்டும் பெற்று அதன் மூலம் உண்மையை உணர்ந்து மலங்கள் மீதான பற்றினை விடுத்து சுதந்திரமாக மாறுவதற்கான ஒரு வாய்ப்பாகவே இந்த பிரபஞ்சம் தோற்றுவிக்கப்பட்டது.
இந்த பிரபஞ்சம் எதைக் கொண்டு தோற்றுவிக்கப்பட்டது என்றால் இந்த உயிர்களையும் அவை பற்றி நிற்கும் மலங்களையும் கொண்டே தோற்றுவிக்கப்பட்டது.
இறைவனின் பேரிருப்பின் உள்ளேயே இறைவனது சக்தியின் உள்முகத் தூண்டனால் இந்த பிரபஞ்சம் தோற்றுவிக்கப்பட்டது.
சிவனை ஒரு யோகியின் வடிவில் கண்களை மூடி தியானிப்பவராக உருவகப் படுத்த இதுவே காரணம். இறைவனைக் கடந்து எதுவும் கிடையாது. அதனால் இறைவன் வெளியே பார்ப்பதற்கு எதுவும் இல்லை. அதனால் தான் சிவனது உருவம் கண்கள் மூடியவாறு உருவகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் மாற்றம் அவனது உள்முகத் தூண்டலினால் நடக்கிறது. அவனது செயல்கள் அனைத்தும் அதனாலேயே நடக்கிறது. அவன் தனது ஞானத்தாலேயே அனைத்தையும் உணர்ந்து கொள்கிறான். அதுதான் அந்த மூன்றாவது கண். அவன் கண்களால் எதையும் பார்பவனல்ல, ஞானத்தாலேயே அனைத்தையும் உணர்ந்து கொள்கிறான்.
உயிர்கள் அனைத்தும் தமது இயல்பாய் உள்ள அறிவு மயக்கத்தால் அனுபவிக்கும் துன்பத்தில் இருந்து விடுபடுவதற்காக இந்த பிரபஞ்சம் தோற்றுவிக்கப்பட்டது என்றால்,
இன்னொரு பதிவில்....
#சர்வம்_சிவமயம்
#ஆன்மீகம்_அறிவோம் -43
No comments:
Post a Comment