மனிதர்களுக்கு ஐந்து புலன் உறுப்புக்கள் உள்ளது. ஆனால் ஆறு அறிவு உள்ளது என்கிறோம். கண்ணால் பார்த்து காதால் கேட்டு மூக்கால் முகர்ந்து நாக்கால் சுவைத்து தோலால் தொடுதல் உணர்ந்து என்று ஐந்து வகையான செயல் அறிவுதானே மனிதர்களுக்கு உள்ளது. அப்படியானால் எப்படி ஆறு அறிவு என்று கூறலாம்.
ஐந்து புலன் உறுப்புக்களும் தம்புலன்களால் உணரப்பட்டவற்றை பகுத்துத் தானே அறிகிறது. அப்படியானால் பகுத்தறிவு என்று தனியாக இல்லை அல்லவா.
பகுத்தறிவு என்று ஒரு புலன் இருந்தால் அதற்கு என்று ஒரு புலனுறுப்பு வேண்டும் அல்லவா?
கண் என்ற புலனுறுப்பு இருந்தால் தான் பார்க்க முடியும் காது என்று ஒரு புலனுறுப்பு இருந்தால்தான் கேட்க முடியும், அப்படியானால் பகுத்தறிதலுக்கு என்று ஒரு புலனுறுப்பு இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் பகுத்தறிவு என்று ஒரு அறிவு தனியாக இல்லை எனலாம்.
அதனால்தான் பௌத்த மதத்தின் பல பிரிவுகள் மனிதர்களும் ஐந்தறிவு உயிர்களே என்று வாதித்ததன. நிற்க,
சித்தாந்தம் அதனால்தான் அந்த கரணம் என்ற ஒன்றைப் பற்றி பேசுகிறது. கண் காது மூக்கு நாக்கு தோல் என்னும் ஐந்து புலன் உறுப்புக்களும் வெறும் கருவிகள் என்றும் அவற்றால் எதையும் அறியவோ உணரவோ முடியாது முடியாது என்பதையும் விளக்கும். கண் ஒருபோதும் பார்ப்பதில்லை, கண் என்பது பார்ப்பதற்கு உதவும் ஒரு கருவி. காது கேட்பதில்லை அது கேட்பதற்கு உதவும் கருவி.
இங்கே ஐந்து கருவிகளாலும் உள்வாங்கப்படும் விடயங்களை ஏதோ ஒன்று அறிகிறது. ஏதோ ஒன்று உணர்கிறது. ஆனால் அந்த அறிதலும் உணர்தலும் எல்லோருக்கும் ஒன்றாக இருப்பதில்லை. அல்லது ஒருவருக்கே எல்லா நேரங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை.
சில வேளைகளில் நாயும் நரியும் ஒன்றாக தோன்றுகிறது, பாம்பும் கயிறும் கூட ஒன்றாக தோன்றுகிறது, அது பார்வை கருவியான கண்ணின் குறைபாடு என்று சொல்ல முடியாது. ஏனென்றால் சரியான வெளிச்சமும், சரியான பார்வைத் தூரமும் உண்டாகுகையில் அவை எதுவென்று சரியாக அறிய முடிகிறது.
ஐந்து கருவிகளும் உள்வாங்கும் அனைத்தையும் ஆன்மாவே அனுபவிக்கிறது. ஆனால் நேரடியாக ஆன்மாதான் அவற்றை அறிந்து உணர்ந்து அனுபவிக்கிறதா என்று ஒரு கேள்வி எழுகிறது. ஏனென்றால் ஒரே பொருளைப் பற்றிய ஒவ்வொருவருக்கான அறிதலும் உணர்தலும் வேறுபடுகிறது. ஒரே நபருக்கே வேறு வேறு புரிதல் உண்டாகின்றன. எனவே ஒவ்வொருவரும் நேரடியாக புலன் கருவிகளால் அல்லாமல் வேறு ஏதோ ஒன்றின் மூலமாகவே அவற்றை அறிந்து கொள்கிறார்கள் என்று துணியலாம். அதுதான் அந்த கரணம் எனப்படுகிறது..
அந்த கரணம் என்றால் புலன்களால் உள்வாங்கப்படுபவற்றை தொகுத்து முடிவுசெய்து ஆன்மாவிற்கு அறிவிப்பது என்று கொள்க, அனைத்தையும் ஆன்மா தான் இறுதியில் அறிந்து கொள்கிறது என்றாலும் இந்த அந்த கரணங்கள் மூலமாகவே அவற்றை அறிந்து கொள்கிறது.
உங்கள் கண்ணின் முன்னால் இரண்டு பாத்திரங்களில் கள், பால் என்பவை உள்ளது. பார்வை அளவில் இரண்டும் ஒன்று போலவே தோன்றலாம். ஆனால் கண்ணால் அதன் மணத்தை நுகர்ந்து அறிய முடியாது அல்லவா?
சரி மூக்கினால் மண வேறுபாட்டை அறிந்து கொள்ள முடிகிறது. அதற்கு கள்ளின் மணத்தையும் பாலின் மணத்தையும் வேறுபடுத்தி அறிய முடிகிறது. பாலின் மணத்தில் அதன் தோற்றத்தில் இருப்பதால் இது பாலாக இருக்க முடியும் என்று ஆன்மாவிற்கு ஒன்று அறிவிக்கிறது. அந்த நிலையைத் தான் அந்த கரணம் என்பார்கள்.
அந்த கரணம் என்றால் இறுதி செயல்முறை, இறுதியான செயல் என்று பொருள். நாம் புலன் உறுப்புக்களால் கண்டு கேட்டு நுகர்ந்து தொட்டுணர்ந்து சுவைத்து என்று எல்லாவற்றையும் தொகுத்து அதன் முடிவையே ஆன்மாவுக்கு அனுப்புகிறது. ஆன்மா எதனையும் முடிவு செய்வதில்லை.
ஆன்மாவுக்கு முடிவு செய்து அனுப்பும் செயன்முறையே, அந்த செயன்முறை நடக்கும் தளமே அந்த கரணங்கள் எனப்படுகிறது.
மனம்
புத்தி
சித்தம்
அகங்காரம் என்று சொல்வர்.
மனம் என்பது சந்தேகித்து அதில் இருந்து முடிவுகளை எடுக்கும் நிலையாகும். அதனால் மனம் என்பதை சந்தேக நிலை என்று கூட சொல்லலாம். இதன் முடிவுகள் அனைத்தும் இது இவ்வாறு இருக்கலாம் என்பதாகவே இருக்கும்.
புத்தி என்பது ஒரு பொருளைப் பற்றிய உறுதியான முடிவாகும். இங்கே ஐயத்துக்கு இடமில்லை. இதுதான் முடிவு என்று காரண காரியங்களை வைத்து விளக்க கூடிய நிலையாகும்.
சித்தம் என்பது உணர்ந்து கொள்ளும் நிலையாகும். இது அறிய முடியாதவற்றை பற்றி உணர்ந்து கொள்ள உதவும் நிலையாகும். அறிவு அன்பு காதல் மகிழ்ச்சி இவற்றை எல்லாம் அறிந்து கொள்ள முடியாது. ஆனால் அவற்றை எல்லாம் உணர்ந்து கொள்ளவே முடியும். இது மனத்தால் உண்டாகும் நிலையற்ற உணர்வு கிடையாது. நிலையான ஒன்றை உணர்ந்து கொள்ளும் நிலையே சித்தம் எனப்படும். இது உறுதியான அறிவின் முடிவில் தோன்றும் உணர்வு.
அகங்காரம்
இது மனத்தால் உண்டாகும் உடமை எண்ணமாகும். நான் எனது என்று மனம் உண்டாக்கும் உடமை மனோபாவம் அகங்காரம் எனப்படும். இது உறுதியான உண்மையான உடமை நிலை கிடையாது. இது நிலையற்ற சந்தேகத்திற்குரிய உடமை நிலையாகும்.
அதனால்தான் அகங்காரம் என்பது மனத்திலும், சித்தம் என்பது புத்தியிலும் தோன்றும் என்பார்கள்.
இந்த மனம் புத்தி இரண்டும் முடிவு செய்யும் முறைமையின் இரண்டு நிலைகளே.. சந்தேக நிலை மனம். உறுதியான முடிவு நிலை புத்தி.
மனம் சித்தம் புத்தி அகங்காரம் என்னும் நான்கும் ஒன்றின் நான்கு நிலைகளேயன்றி நான்கு பொருளல்ல. புலனுறுப்புக்களால் உள்வாங்கப்படும் விடயங்களை ஆராய்ந்து ஆன்மாவிற்கு அறிவிக்கும் பொறிமுறையே அந்தகரணம் ஆகும்.
இது ஆன்மாவின் நான்கு முகங்கள் என்றும் சொல்வார்கள்.
அந்தகரணம் என்று சொல்லும் செயற்பாட்டை செய்யும் உறுப்புத்தானே மூளை என்று சிலருக்கு தோன்றலாம். ஆனால் மூளை என்பது அந்தகரணம் கிடையாது. அந்தகரணம் செயற்பட உறுதுணையாக தகவல்களை சேர்த்து வைத்து வழங்கும் ஒரு உறுப்பே மூளை. நினைவகம் செயன்முறை ஆகமுடியாது. அந்தகரணம் என்பது செயன்முறை இயங்குதளம். அது முடிவுகளை எடுத்து ஆன்மாவிற்கு அறிவிக்கிறது. ஆன்மாவே முடிவு நிலையை அனுபவித்து உணர்கிறது.
#சர்வம்_சிவமயம்
#ஆன்மீகம்_அறிவோம் -42
No comments:
Post a Comment