இறைவன், ஆன்மா, மலங்கள் என்பவை முப்பொருட்கள் என்று அறிவோம். பொருள் என்று கூறியதும் எமது மனம் ஏதோ ஒரு உருவத்தை தேடுவது என்பது இயல்பானது. ஆனால் அனைத்து பொருட்களும் எம் காட்சியளவில், தொடுதல் அளவில் உருவினைக் கொண்டதல்ல.
மெய்ஞானம் பொருட்களின் நான்கு வகையான வடிவங்கள் பற்றி பேசுகிறது.
•தூல வடிவம்
•சூக்கும வடிவம்
•சொரூப வடிவம் என்பவையே அந்த நான்கு வடிவங்களாகும்.
நாம் கண்ணால் பார்க்கக்கூடிய தொட்டு அதன் பரிமாணங்களை உணரக்கூடிய வடிவம் ஜட வடிவம் எனப்படும். இந்த உலகம், எமது உடல், கல், மண், மரம் என்று எமக்கு தோன்றுவது அனைத்தும் ஜட வடிவ பொருட்டகளாகும்.
தூல வடிவம் என்பது காட்சி இருக்கும் ஆனால் அங்கே ஒரு பரிமாணங்களை தொட்டு உணரக்கூடிய ஒன்று இருக்காது. நிழல், கனவிலும் நனவிலும் தோன்றும் காட்சிகள், திரையில் தோன்றும் காட்சிகள் இவையெல்லாம் தூல வடிவ பொருட்டகளாகும்.
சிலருக்கு காட்சி எப்படி பொருளாக முடியும் அங்குதான் அப்படி ஒன்று இல்லையே என்று தோன்றலாம். நாம் ஜட வடிவ பொருட்கள் என்பவையும் அவ்வாறான ஒரு காட்சி வடிவ பொருட்கள் தான். ஆனால் அவை தொடு உணர்வு, மனித புலன்களால் உணரத்தக்க பரிமாணம் என்பவற்றை கொண்டிருக்கும். அதனால்தான் இந்த உலகம் மாயையால் ஆனது என்று கூறப்படும். அதை இன்னொரு இடத்தில் விரிவாக பார்ப்போம். நிற்க,
சூக்கும வடிவம் என்பது புலன்களால் உணரப்பட முடியாத, அறியப்பட முடியாத பொருட்களாகும். ஆன்மா என்பது சூக்கும வடிவ பொருளாகும். உதாரணமாக அணு என்று ஒரு பொருள் இருக்கிறது, இலத்திரன் என்று ஒரு பொருள் இருக்கிறது என்று ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் அதனை மனித புலன்களால் அறிய முடியாது அல்லவா. ஆனால் எமது தர்க்க நியாயங்களின் அடிப்படையில் அவ்வாறு ஒன்று இருக்கிறது, இருக்க வேண்டும் என்று கூறுகிறோம். இதுதான் அறிவு நிலையில் ஏற்கப்படும் ஆனால் புலன்களால் அறியப்படாத சூக்கும வடிவம் என்று கூறப்படுகிறது.
அப்படியானால் இறைவனும் சூககும வடிவமா என்று ஒரு கேள்வி எழுகிறது. அதை சித்தாந்தம் மறுக்கிறது. இறைவன் புலன்களால் அறியப்படாத மனித அறிவால் உணரப்படக்கூடிய சூக்கும பொருளும் கிடையாது. இறைவன் மனித அறிவிற்கு எட்டாத, மனித அறிவால் அறியப்படமுடியாத ஒன்று என்கிறது. இதனை சொரூப நிலை என்கிறார்கள்.
இறைவன் உருவமற்ற ஒன்றல்ல, மனித புலன்களுக்கு புலப்படாத உருவினன். இறைவன் அறியப்பட முடியாத ஒன்றல்ல, மனிதனின் சிற்றறிவுக்கு எட்டாதவன் என்று கூறுகிறது சித்தாந்தம். அதனால்தான் எல்லாவற்றையும் கடந்து ஒன்று இருக்கிறது என்று வேதங்கள் கூறுகின்றன.
உருவம் இல்லை என்றால் அங்கு அவ்வாறு ஒன்று இல்லை என்பது முடிவாகும். ஆக, இறைவனுக்கு உருவமில்லை என்பது தவறு. இறைவன் மனித புலன்களுக்கு புலப்படாத உருவினன் என்பதே சரியானது.
#சர்வம்_சிவமயம்
#ஆன்மீகம்_அறிவோம் -46
No comments:
Post a Comment