Tuesday, July 4, 2023

மாயா மூலத்தின் அளவு

 #மாயை தொடர்ச்சி..

ஒன்றே பலவாக தோன்றி நிற்பது மாயை என்று கண்டோம். சரி அந்தப் பலவாக தோன்றி நிற்கும் ஒன்று எது? அதன் அளவு எவ்வளவு?

இங்கு கண்ணாலோ கருவிகளாலோ காண முடியாத ஒன்றை எப்படி விளக்க முடியும்? இருப்பதைக் கொண்டும், மற்றவர்கள் ஏற்றுக் கொண்ட முடிவின் அடிப்படையிலும் தானே இல்லாததை  விளக்க வேண்டும்.

இன்று அணுக்கள் என்பது பொதுவாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கருத்தாகும். அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு அணுவின் சராசரி விட்டம் 1×10 -10m. அதாவது 0.0000000001 m. இந்த அளவுள்ள அணுவின் திணிவின் பெரும்பகுதி அதன் கருவிலேயே உள்ளது. கருவின் திணிவுடன் ஒப்பிடுகையில் கருவிற்கு புறத்தே உள்ள இலத்திரன்களின் திணிவு என்பது புறக்கணிக்க தக்கது. அணுவின் அளவுடன் ஒப்பிடுகையில் அதன் கருவின் அளவு 1/10000 பங்காகும். 

அதாவது அணுவின் அளவில் பத்தாயிரத்தில் ஒரு பங்கிலேயே அதன் மொத்த திணிவு என்று சொல்லக் கூடிய கரு இருக்கிறது. அதன்படி பார்த்தால் அணுவின் உண்மையான அளவு என்பது அதன் அளவின் பத்தாயிரத்தில் ஒரு பங்காகும்.

இதிலிருந்து அணுவின் பெரும்பகுதி வெற்றிடமாக உள்ளது என்பதும் அதில் பொருட்பகுதி என்பது பத்தாயிரத்தில் ஒரு பங்கு என்பதும் புலனாகிறது. 

சரி அணுக்களை வெற்றிடம் இல்லாமல் நெருங்கி அதுதான் உண்மை நிலையென்று கொண்டு பார்த்தால் நாம் பார்க்கும் எல்லாப் பொருட்களையும் அதன் பத்தாயிரத்தில் ஒரு பங்கு என்று கூறலாம். 

சராசரியாக 1.7மீட்டர் உயரமுள்ள மனிதனை எடுத்துக் கொள்ளுங்கள். அவனது உண்மை அளவு பத்தாயிரத்தில் ஒரு பங்கு என்றால் மனிதனது உண்மையான உயரம் 0.00017 மீட்டராகும். அதாவது 0.017 cm. 0.17 mm. இது நாம் காணும் ஒரு எறும்பின் அளவைவிட சிறியது. எறும்பின் அளவைவிட சிறிய மனிதன் 6 அடி மனிதனாக தோன்றுவது மாயை தானே. இது ஒரு பொய்யான பூதாகரமாக தோற்றம் அல்லவா.

சரி பத்தாயிரத்தில் ஒன்று எனும்  இதுதான் உண்மையான அளவா என்றால் அதுவும் கிடையாது. அணுவின் ஆக்கக் கூறும் அதன் கருவும் பத்தாயிரத்தில் ஒரு பங்கிற்குள் அடங்கும் என்றால், அந்த ஆக்கக் கூறுகளும் அவற்றின் ஆக்கக் கூறில் அதேபோன்று அடங்கும். இவ்வாறு நாம் தொடர்ந்து ஆக்கக் கூறின் ஆக்கக் கூறுகள் என்று பகுத்துக் கொண்டே சென்றால் பத்தாயிரத்தின் மடங்குகளால் உண்மை உருவம் சிறுத்துக் கொண்டே செல்லும். இப்படி முடிவிலியை அண்மித்த தடவைகள் நாம் பகுத்துக் கொண்டே போகலாம். அவ்வாறான நிலையில் அந்த முதல் கூறும் மூலப் பொருளுமான மாயா மூலத்தின் அளவு இல்லை என்று சொல்லும் வகையில் புறக்கணிக்க தக்க ஒரு அளவில் இருக்கும். 

புறக்கணிக்க தக்க அளவில், மிக மிக நுண்மையான ஒன்றாக இருக்குமேயன்றி அது இல்லாத ஒன்று ஆகாது. அதனால்தான் தோற்ற மூலத்தை மாயா மூலம் என்கிறது சைவ சித்தாந்தம்.  இந்த புறக்கணிக்க தக்க ஒன்று என்னும் நிலையிலேயே சில மகாயான பௌத்த பிரிவுகள் அதனை சூனியம் என்றும் ஒன்றுமில்லாத என்று என்றும் கூறினார்கள். ஆனால் அது இல்லாத பொருள் இல்லை என்றும், ஆனால் கண்ணால் காண்பது எவையும் உண்மையான பொருள் இல்லை அவை அனைத்தும் மாயை என்றும் கண்டறிந்து வெளிப்படுத்தியதும் மகாயான பௌத்த பிரிவுகளில் ஒன்றான மத்யமிக பௌத்தமே. 

இந்த அடிப்படையில் பார்த்தால் மனிதனின் அளவு 0.17 மில்லிமீட்டர் என்பதே மிகமிக மிகைப்படுத்திய ஒரு பூதாகரமாக அளவாகும். உண்மையான மனிதனின் அளவு என்பது புறக்கணிக்க தக்க ஒரு மிகச் சிறிய ஒன்றாகும். இந்த அளவில் பார்த்தால் இந்த உலகம் இந்த பிரபஞ்சம் எல்லாம் இல்லாப் பொருட்களாக தோன்றும். மிகமிகச் சிறிய மூலம் ஒன்றே இந்த பேரண்டமாக தோன்றி நிற்பதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் அந்த உண்மையை மறைத்து மிகப் பெரிய ஒன்றாக மனதிற்கு தோன்றச் செய்வது உயிர்களிடம் உள்ள அறியாமை.

அறியாமை மாயையை உண்மை என்று நம்புகிறது. பொய்யான தோற்றத்தை உண்மை என்று எண்ணி மயங்குகிறது. 

அறிவு மாயையின் தன்மையை அறிந்து மெய்ப்பொருளை உணர்ந்து கொள்கிறது. 

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -38



No comments:

கடவுள் ஏன் பிறப்பு எடுக்க முடியாது?

பிறப்பு எடுத்தால் அது ஏன் கடவுள் இல்லை என்கிறோம்? கடவுள் என்பது உண்மை என்றால், அது ஒருபோதும் மாறாதது. அதனால்தான் கடவுளை எப்போதும் மாறாதது என...