சைவம் -ஸ்மார்த்தம் -வைணவம்
ஸ்மார்த்தம், சைவ சித்தாந்தம், வைணவம்(ராமானுஜர் பிரிவு) எனும் பிரதான மூன்று சமய தத்துவ பிரிவுகளும் அத்வைதம் பற்றியே பேசுகிறது.
அத்வைதம் என்றால் இரண்டறக் கலத்தல் என்று பொருள்.
இந்த மூன்று பிரிவுகளும் அத்வைதம் பற்றியே பேசுகிறது என்றாலும் அவை அத்வைதம் என்பதை விளக்கும் முறை வேறுபடுகிறது. அவை எப்படி வேறுபடுகிறது என்று பார்ப்போம்.
ஸ்மார்த்தம் கூறும் அத்வைதம் என்பது,
சிறு சிறு பொலித்தீன் பைகளில் கடல்நீர் விட்டு அடைக்கப்பட்டு கடலில் போடப்பட்டிருக்கிறது என்று கற்பனை செய்யுங்கள். இப்போது கடலிலும் அந்த பொலித்தீன் பைகளிலும் உள்ளது ஒரே உப்புநீர் தான். கடலில் இருக்கும் உப்புநீர் பரமாத்மா என்றும் பொலித்தீன் பைகளில் உள்ள உப்புநீர் ஆன்மா என்றும் கொள்க. அந்த பொலித்தீன் பைகள் என்பதை ஆன்மாவை சூழ்ந்து நிற்கும் உடல் எனக் கொள்க. அந்த பொலித்தீன் பைகள் போன்ற உடல் நீங்கும் போது கடவுள் ஆன்மா இரண்டும் ஒன்றே என்பது ஸ்மார்த்த அத்வைதம்.
இங்கே உடல் என்பது மாயையால் உருவானது என்கிறது ஸ்மார்த்தம். அந்த மாயை நீங்கும் போது ஆன்மா தன்னைப் பரமாத்மா என்று உணரும் என்பது ஸ்மார்த்தம்.
ராமானுஜரின் வைணவ விஷிட்டாத்வைதம். அது விஷேடமான அத்வைதம் எனப்படுகிறது. சரி, அது தனது விஷேடமான அத்வைதத்தை எப்படி விளக்குகிறது என்று பார்ப்போம்..
கடல் என்பதை பரமாத்மா எனக் கொள்க, மழையின் போது கடலில் விழும் மழைத்துளிகளை ஆத்மாக்கள் எனக் கொள்க, கடலில் கலந்தபின்னர் மழைத்துளி என்பது கிடையாது. கடலில் கலந்த மழைத்துளிகளை ஒத்ததே பரமாத்மாவுடன் ஆன்மாக்கள் சேர்வது. மழைத்துளி என்பது இருந்துள்ளது. அந்த மழைத்துளிகள் கடலில் இருந்தே உருவாகி உள்ளது. அதன்படி பார்த்தால் கடலின் ஒரு அங்கம்தான் மழைத்துளி. கடலில் கலக்கும் மழைத்துளிகள் கடலின் அங்கமாக மாறிவிடும். ஆனால் மழைத்துளி கடலல்ல. இதுதான் விஷிஷ்டாத்வைதம் கூறும் விஷேட அத்வைதம்.
இங்கே உடல் என்பது மாயை என்பதை வைணவர்கள் ஏற்பதில்லை. இந்த உடல் உலகம் பிரபஞ்சம் அனைத்தும் உண்மை என்பார்கள்.
சைவசித்தாந்தம் கூறும் அத்வைதம், அதை எப்படி விளக்குவது என்று பார்ப்போம்..
கடல் என்பதை இறைவன் எனக் கொள்க, காற்றில் பறந்து வந்து கடலில் விழும் சிறு பஞ்சுத் துகள்களை ஆன்மாக்கள் எனக் கொள்க, கடலில் விழும் பஞ்சுத் துகள்கள் கடலின் தன்மையில் இயல்பில் நனைத்து மூழ்கி நிற்கும். இதுதான் சைவம் கூறும் அத்வைதம்.
பஞ்சின் கோது என்பது ஆன்மாவைப் பற்றி நிற்கும் மலங்கள் என்று கொள்ளலாம், இங்கே சைவ சித்தாந்தமும் உடல், உலகம் என்பவை எல்லாம் மாயை என்பதை ஏற்றுக் கொள்கிறது.
பஞ்சு கடலில் சேர வேண்டும் என்றால் கோது வெடித்து நீங்க வேண்டும். கோது வெடித்து நீங்க வேண்டும் என்றால் அது முற்றி பழுத்து முதிர்தல் வேண்டும்.
இங்கே பஞ்சு உருவாக பஞ்சுமரம் வேண்டும். மரம் உருவாக வித்து வேண்டும். வித்து மரமாக நிலம் வேண்டும். அது வளர்வதற்கு மழை வேண்டும். பஞ்சு காய்த்து காய்ந்து வெடிக்க வெயில் வேண்டும். வெடிக்கும் பஞ்சு கடலை சேர காற்று வேண்டும்.
இங்கே பஞ்சு என்பது தானாக உருவாகி கடலைச் சேர முடியாது. ஆன்மாவை பஞ்சு வித்துடன் ஒப்பிட்டு கொள்ளுங்கள். ஆன்மா எனும் பஞ்சு வித்து பறந்து கடலைச் சேர வேண்டும் என்றால் அதற்கு பஞ்சும் வேண்டும். அந்த வித்து பஞ்சுடனான வித்தாக விளைவதற்கு மரமாகி பூத்து காய்த்து முற்றி முதிர்ந்து வெடிக்க வேண்டும். அதற்கு ஒரு பெரிய படிமுறையும் பலவற்றின் துணையும் வேண்டும்.
இங்கே பஞ்சு உருவாக நிலம் காற்று வெப்பம் நீர் எல்லாம் தேவை. ஆனால் இவை எல்லாம் மாயையே. ஆனால் இவை எதுவும் இல்லாமல் பஞ்சு வித்து பஞ்சுடனான வித்தாக விளைய முடியாது. இங்கே மாயையிலேயே எல்லாம் நடக்கிறது என்றாலும் அவை எல்லாவற்றையும் கடந்து எல்லாவற்றிற்கும் காரணமாக ஒன்று உள்ளது. அதை இறைத் தன்மையை விளக்குவதே சைவ சித்தாந்தம்.
இங்கே ஸ்மார்த்தம் வைணவம் இரண்டும் ஆத்மா பரமாத்மா இரண்டும் ஒரே போன்றவை என்பதில் ஒத்து நிற்கும். அதனால்தான் அவை ஆன்மா, பரத்தின் ஆன்மா பரமான்மா என்று ஒரே பொருள் பட கூறுகின்றன.
ஸ்மார்த்தம் பரமான்னா என்பது ஒன்றே என்றும் அதில் மாயையின் பிரிப்பினாலே ஆன்மாக்களாக தோன்றுகிறது என்பதும் ஒரே ஆன்மா எனும் ஏகான்மவாத கொள்கையின் வடிவமே.
அதுபோல் வைணவம் என்பது ஆன்மாக்களின் கூட்டு ஆன்மாவே பரமான்மா என்னும் கூட்டான்ம கொள்கையின் வடிவமே. நீர்த்துளிகள் சேர்ந்தது தான் கடல், எல்லா நீர்த்துளிகளும் தனித்தனியாக பிரித்து சென்றுவிட்டால் அங்கே கடல் என்ற ஒன்று கிடையாது.
ஆழமாக பார்த்தால் ஸ்மார்த்தர்கள், வைணவர்கள் இருவருமே தனித்த கடவுள் என்ற ஒன்றை ஏற்காதவர்கள் அல்லது நம்பாதவர்கள் என்று கொள்ளலாம்.
சித்தாந்தம் ஆன்மாக்களை இறைவனை ஒத்த ஒன்றாக ஏற்பதில்லை. இறைவன் வேறு ஆன்மாக்கள் வேறு, ஆன்மாக்கள் இறைவனிடமிருந்து இறைத் தன்மையை பெற்று உணர்ந்து கொள்ள கூடியவை என்றே கூறும்.
#சர்வம்_சிவமயம்
#ஆன்மீகம்_அறிவோம் -40
No comments:
Post a Comment