Thursday, July 20, 2023

முப்பொருள் என்றால் மூன்று பொருளல்ல

சைவ சித்தாந்தம் முப்பொருள் உண்மை என்பதை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆன்மீக கோட்பாடாகும்.

இறை, உயிர்கள், மலங்கள் என்பவையே அவையாவும். 

இந்த பிரபஞ்சம் முழுவதும் எத்தனையோ பொருட்கள் இருக்கையில் எப்படி மூன்று பொருட்கள் மட்டும் உண்மை என்று கூறலாம்? இப்படி ஒரு கேள்வி எழுகிறது அல்லவா?

முப்பொருள் உண்மை என்றால் மூன்று பொருட்கள் உண்மை என்பது கிடையாது. மூன்று வகையான பொருட்கள் என்பதுவே முப்பொருள் எனப்படும்.

ஒரு பொருளில் இருந்து இன்னொரு பொருளை வேறுபடுத்தி காட்டுவது அவற்றின் குண இயல்புகளே ஆகும். குண வேறுபாடு இருந்தால் உருவ ஒற்றுமை இருந்தாலும் அது ஒரே பொருளல்ல, வேறு என்று அறிக.


இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்பும் தோன்றியிருக்கும் போதும், ஒடுங்கிய பின்னரும் எந்தெந்த வகையில் பொருட்கள் இருக்கும் என்ற அடிப்படையில் கண்டறியப்பட்டதே இந்த முப்பொருள் என்பதாகும். அனாதி முதல் முடிவிலி வரையில் அழியா நிலையில் எக்காலத்திலும் இருக்கும் பொருட்களே முப்பொருள் எனப்படும்.

மலங்கள் எனப்படுபவை ஒன்றல்ல. அது மூன்று ஐந்து என்று பலவாறு வகைப்படுத்தப்படும். உயிர்கள் என்பவை ஒன்றல்ல. எண்ணற்ற உயிர்கள் அனாதி முதல் முடிவிலி வரை இருக்கிறது. அதன்படி பார்த்தால் முடிவிலியான பொருட்கள் எக்காலத்திலும் இருக்கிறது என்பதே உண்மையாகும்.

அப்படியானால் இறைவன் என்பது? 

அது ஒன்றுதானே என்று சிலர் கேட்கலாம். 

அதற்குமுன் முப்பொருள் என்பதில் உள்ள குண வேறுபாட்டை அறிந்து கொள்தல் வேண்டும்.

•தன்வசத்தில் வைத்திருப்பவை

•அவற்றில் இருந்து பெற்றுக் கொள்பவை

•அவ்வாறு பெற்றுக் கொள்வதை தடுப்பவை

இந்த மூன்று குணவேறுபாடுகளை உடைய பொருட்களே முப்பொருள் எனப்படுகிறது.

இறைவன் அல்லது இறை என்பது தன்வசத்தில் வைத்திருக்கும் பொருளாகும். எதை தன்வசம் வைத்திருக்கிறது? என்று ஒரு கேள்வி எழும்..

இந்த பிரபஞ்சம் முழுவதும் இருக்கும் அனைத்தும், பெற்றுக்கொள்ளும் அனைத்தையும் வைத்திருப்பது என்பது அதற்கான பதிலாகும்.

இந்த பிரபஞ்சம் முழுவதும் உள்ளவை எவற்றை எல்லாம் பெறுகிறது? 

ஆற்றல், அறிவு, இன்பம், அமைதி, இடம்... 

இங்கே அறிவு என்பது ஒருவகை ஆற்றல் என்போர் உள்ளனர், அறிவால் இன்பம் கிடைக்கும் என்பர், அறிவால் அமைதி கிட்டும் என்பர்.. எது எப்படி இருந்தாலும் ஆற்றல் என்ற ஒன்று இருந்தால் அதன் மூலம் இருப்பதற்கு ஒரு இடம் வேண்டும். ஆற்றலால் அல்லது அதன் மூலத்தால் அந்த இடம் நிரம்பி இருந்தாலும் இடம் என்பது ஆற்றலை விடுத்து தனியான ஒன்றே.. ஆற்றல் என்பதும் ஒன்றல்ல..

ஆக இறை என்பதும் ஒன்றல்ல என்று துணியலாம்.

அதனால்தான் "இறைவன் என்பது ஒன்றல்ல ஓர்" என்று குறிப்பிடுகிறார்கள். 

சித்தாந்த கோட்பாட்டில் சிவம்- சக்தி என்று இரண்டாக இணையாக குறிப்பிடப்படுவது இடம்-ஆற்றல் என்பவையே ஆகும். 

சிவம் என்பது ஆற்றல் மூலத்தை கொண்ட இடம் என்பதும் அதிலிருந்து வெளிப்படும் ஆற்றல் சக்தி என்றும் கொள்க. சிவத்துள் சக்தி அடக்கம் என்பதன் விளக்கமும் அதுவேயாம்.

இங்கே எது ஒன்று தன்வசத்தில் வைத்திருப்பதை இன்னொன்றுக்கு கொடுக்கிறதோ அது இறைபொருள் என்று கொள்க. 

இன்னொன்றில் இருந்து ஒற்றைப் பெற்றால், பெற்றதை இன்னொன்றிற்கு கொடுத்தால் அதை உயிர் என்று கொள்க.

இறைபொருளில் இருந்து உயிர்ப்பொருள் பெறுவதை எது தடுக்கிறதோ அவற்றை மலங்கள் என்று கொள்க.

சைவ சித்தாந்தம் கூறும் முப்பொருள் உண்மை என்பது இவைதான். முப்பொருள் என்றால் மூன்று பொருளல்ல மூன்று வகையான பொருட்கள் என்று தெளிந்து கொள்வோம்.

இறைவனின் வசத்தில் இருக்கும் ஆற்றல்களை பெற்று அல்லது பிரதிபலித்து ஏனைய உயிர்களுக்கு வழங்கும் உயிர்கள் தெய்வங்கள் தேவர்கள் என்று குறிப்பிடப்படும். 

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -44



No comments:

கடவுள் ஏன் பிறப்பு எடுக்க முடியாது?

பிறப்பு எடுத்தால் அது ஏன் கடவுள் இல்லை என்கிறோம்? கடவுள் என்பது உண்மை என்றால், அது ஒருபோதும் மாறாதது. அதனால்தான் கடவுளை எப்போதும் மாறாதது என...