Friday, June 23, 2023

பாசுபதம்

சைவ சித்தாந்த வாதிகளின் பகுப்பில் அகப்புறச் சமயம் என்று வகைப்படுத்தப்படும் ஒரு சமய பிரிவாகும்.

ஆதி மார்க்க சைவத்தின் மூத்த தத்துவ பிரிவாக கருதப்படுகிறது. ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட முதலாவது சைவ சமய பிரிவு என்றும் சொல்லலாம். 

இறைவன் உயிர்களின் தலைவனாக இருக்கிறான் என்று கூறி இறைவனைப் பசுபதி என்று இவர்கள் வழங்குகின்றனர்.

பதி பசு பாசம் என்னும் முப்பொருள் தத்துவத்தை, சைவ தத்துவ அடிப்படையை உருவாக்கியது பாசுபதம் என்று கொள்ளலாம். பாசத்தின் நிலைகள் பற்றி பேசுவதால் பாசுபதம் என்று அழைக்கப்படுகிறது என்றும் கொள்ளலாம்.

பதி என்றால் கடவுள், 
பசு என்றால் ஆன்மா, 
பாசம் என்பது ஆணவம் கன்மம் மாயை என்னும் மூன்றையும் சேர்த்து குறிக்கப்படுவது.

இவர்கள் பசுபதி எனப்படும் இறைவன் செயற்காரணன் என்று கொள்கிறார்கள். 

ஒருவர் பேரின்ப நிலையை அடைய சமயம் சார்ந்த ஒழுக்க நடைமுறைகளை பேணப்படவேண்டும் என்றும், யோக வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கட்டுப்பாடுகளை வைத்திருந்தார்கள். அதனால் பாசுபதம் என்பது சாதாரண மக்களால் பின்பற்றப்படும் ஒன்றாக இருக்கவில்லை.

பசு எனப்படும் உயிர் பாசங்களால் கட்டுண்டு கிடக்கிறது என்றும் அந்த பாசக் கட்டுக்களில் இருந்து விடுபடுவதால் மட்டுமே பேரின்ப நிலையை அடைய முடியும் என்பதும் இவர்களது வாதம். ஆனால் அவ்வாறு பாசக் கட்டுக்களில் இருந்து விடுபட வேண்டும் என்றால் அந்த பசுபதியால் மட்டுமே விடுவிக்க முடியும் என்பது இவர்களது நம்பிக்கை. 

எல்லோராலும் பாசுபதத்தை பின்பற்ற முடியாது. குரு சிஷ்யர்கள் என்னும் முறையில் மட்டுமே பாசுபதம் பின்பற்றப்படுகிறது. குரு தகுதியான சிஷ்யர்களை மட்டுமே தெரிவு செய்து சேர்த்துக் கொள்கிறார். சிவனை வணங்குவதற்கும் அவனுடைய அருள் வேண்டும் என்பது பாசுபத நம்பிக்கையை சார்ந்தது. அவ்வாறு பசுபதியின் அருளினால் மட்டுமே பசுக்கள் கட்டுக்களில் இருந்து விடுபட்டு துக்கநிவாரணம் பெறும் என்றும் அதுதான் முத்திநிலை என்பதும் பாசுபதர்களது நம்பிக்கை.

பாசுபதம் பதி பசு பாசம் என்று முப்பொருள் பற்றிப் பேசினாலும், அதன் பதியைப்பற்றிய புரிதல் என்பது சித்தாந்தம் கூறும் சிவ தத்துவங்களுடன் பொருந்தாது நிற்கிறது.

வேண்டினால் அருளுவார், தெரிவுசெய்து அருளுவார் என்பவை எல்லாம் சித்தாந்தம் கூறும் கடவுள் பற்றிய கோட்பாடுகளுக்கு மாறானது. 

கடவுள் அவதாரங்களாக தோன்றுவார், கர்மங்களை ஆற்றுவார் போன்ற தத்துவார்த்த வேறுபாடுகளால் பாசுபதம் அகப்புறச் சமயம் என்று வகைப்படுத்தப்படுகிறது.

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -36



No comments:

கடவுள் ஏன் பிறப்பு எடுக்க முடியாது?

பிறப்பு எடுத்தால் அது ஏன் கடவுள் இல்லை என்கிறோம்? கடவுள் என்பது உண்மை என்றால், அது ஒருபோதும் மாறாதது. அதனால்தான் கடவுளை எப்போதும் மாறாதது என...