Friday, June 23, 2023

வாமம் எனப்படும் வாமாச்சாரம்

//பலியிட்டு நிலத்தில் இரத்தம் சிந்துவது நிறுத்தப்பட்டால்; கொலைகள்- தற்கொலைகளும், வன்புணர்வும் தலைவிரித்து ஆடும் என்றும், 

மடையும், படையலும் நிறுத்தப்பட்டால் பாலியல் ஒழுக்க கேடுகள், போதைப்பாவனை என்பவற்றுடன் வெறிப்பிடித்த அறிவற்ற சமூகம் ஒன்று உருவாகும் என்றும் வாமாச்சாரம் கூறுகிறது.//

சைவ சித்தாந்த வாதிகளின் பகுப்பில் அகப்புறச் சமயம் என்று வகைப்படுத்தப்படும் ஒரு சமய பிரிவாகும்.

சைவத்தின் ஆதிமார்க்க பிரிவுகளில் ஒன்றான இது பின்னாளில் சாக்தம் என்னும் சக்தி வழிபாட்டு பிரிவின் உருவாக்கத்திற்கும் காரணமாக இருந்துள்ளது. எல்லாவற்றையும் ஒவ்வொரு விதமான ஆற்றல்களாக கருதியதால் வாம சமயத்தில் சக்திவழிபாடு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

வாம என்றால் குள்ளமான, குறுகிய என்று பொருள். இந்த சமயம் வாழ்க்கைக்கு தேவையானதை பெறுவதற்கும், முக்தி அடைவதற்குமான குள்ளத்தனமான வழிகளை காட்டுவதால் வாம வழிமுறை என்று அதாவது வாமாச்சாரம் என்று அழைக்கப்படுகிறது.

ஆச்சாரம் என்றால் ஒழுங்கு அல்லது வழிமுறை என்று பொருள். வாமாச்சாரம் என்றால் குள்ளத்தனமான வழிமுறை என்று பொருள். நாம் குறுக்குவழி, தந்திரமான வழிமுறை என்று கூறுவது போன்ற பொருளில் வரும். அதனால்தான் வாமாசாசர ஆகமங்களை; ஆகமங்கள் என்று கூறாமல், தந்திரங்கள் என்று கூறுவர்.

எமது வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் சக்திகளை அழிப்பதன் மூலமும் அவற்றின் தேவைகளை திருப்திப் படுத்துவதன் மூலமும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம் என்று வாமாச்சாரம் கூறுகிறது.

எமது ஆன்மாவை சூழ எமது உடல் உட்பட ஐந்து வகையான உடல்கள் உள்ளன என்று இந்து தத்துவங்கள் விளக்குகிறன. அதனை பஞ்ச கோசங்கள் என்று கூறுவர். வாழ்வை இடை நடுவில் முடித்துக் கொண்டவர்களது ஆன்மாக்கள் மரணத்தின் பின்னர் ஏனைய நான்கு வகையான உடல்களுடனும் அலையும் என்றும், அவை தாம் அனுபவிக்க விரும்பியவற்றை வேறுநபர்கள் மூலம் அனுபவிக்க முனையும் என்றும் கூறுகின்றனர்.

நல்லவர்கள் இறந்தால் மற்றவர்கள் மூலம் நல்லவற்றை செய்ய முயற்சிப்பார்கள். தீயவர்கள் இறந்தால் மற்றவர்கள் மூலம் தீயவற்றை செய்யவே முயற்சிப்பார்கள்.

நல்லவர்களுடைய ஆன்மாக்கள் தெய்வங்களாக காத்துநின்று தீயவர்களுடைய சக்திகளை கட்டுப்படுத்தி வைத்திருக்கும் என்பதும், அந்த தீய சக்திகள் கட்டுப்பாட்டை மீறி செல்லாத வகையில் அவற்றுக்கு தேவையானவற்றை ஒரு கால இடைவெளியில் கொடுப்பது என்பதும் வாமாச்சார வழிமுறையாகும்.

வேள்வி செய்து மடைவைத்தல், கள்ளு- சாராயம் என்பவற்றை படைத்தல் எல்லாம் தீய சக்திகளை திருப்திப் படுத்துவதற்கான வழிமுறையாக வாமாச்சாரம் பின்பற்றுகிறது. அவ்வாறு செய்யாவிட்டால் தெய்வங்களாக நின்று காவல் செய்யும் நல்ல ஆத்மாக்களின் கட்டுப்பாட்டை மீறி அந்த தீய சக்திகள் மற்றவர்கள் மூலம் தமது விருப்பங்களை நிறைவேற்ற முனையும் என்பது வாமாச்சாரிகளது வாதம்.

இவ்வாறு பலியிடுதல், கள்ளு, சாராயம் படைத்தல் முதலியவற்றை நிறுத்தினால் தீய சக்திகள் கொலை, கொள்ளை, குடிவெறி எண்ணங்களை மக்களிடையே உண்டாக்கி சமூகத்தில் அமைதியின்மையை உண்டாக்கும் என்றும், தீய செயல்கள் சமூகத்தில் தலைவிரித்து ஆடும் என்றும் வாமாச்சாரிகள் கூறுகின்றனர்.

பலியிட்டு நிலத்தில் இரத்தம் சிந்துவது நிறுத்தப்பட்டால்; கொலைகள்- தற்கொலைகளும், வன்புணர்வும் தலைவிரித்து ஆடும் என்றும், 

மடையும், படையலும் நிறுத்தப்பட்டால் பாலியல் ஒழுக்க கேடுகள், போதைப்பாவனை என்பவற்றுடன் வெறிப்பிடித்த அறிவற்ற சமூகம் ஒன்று உருவாகும் என்றும் வாமாச்சாரம் கூறுகிறது.

காத்தல் என்பதையே வாமாச்சாரம் முதன்மையான வழிமுறையாக கொள்கிறது. அதனால் சிவனை வாமதேவன் என்னும் வடிவில் காக்கும் கடவுளாகவே வணங்குகிறார்கள். காவல் தெய்வங்கள் என்பவை எல்லாம் சக்திகளை காப்பதற்காக சிவனிடம் இருந்து தோன்றியவை என்பதும் இந்த வாமாச்சாரத்தின் நம்பிக்கையாகும்.

கபாலிகம், பைரவம் போன்ற சைவ பிரிவுகள் இதேபோன்று பலியிடுதல் படையல் வைத்தல் போன்ற வழிமுறைகளை பின்பற்றினாலும், அவையும் வாமாச்சார வழிமுறை என்று குறிப்பிடும் வகையில் வாமாச்சார வழிமுறைகள் மிகவும் பிரசித்தமானவை.

தீய சக்திகளை கட்டுப்படுத்தி, அவற்றின் பாதிப்பு இல்லாமல் நல்வாழ்வை வாழ்ந்தால் அனைவரும் முக்தியை அடையலாம் என்பது வாம சமயத்தினரின் நம்பிக்கையாகும்.

பின்னாளில் உருவான சைவத்தின் மந்திர மார்க்க பிரிவுகள் சைவ ஆச்சாரம் என்று புதிய ஆச்சாரம் ஒன்றை உருவாக்கியிருந்தாலும், தேவையின் பொருட்டு வாமாச்சார வழிமுறைகளையும் பின்பற்றியே வந்துள்ளது.

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -34



No comments:

கடவுள் ஏன் பிறப்பு எடுக்க முடியாது?

பிறப்பு எடுத்தால் அது ஏன் கடவுள் இல்லை என்கிறோம்? கடவுள் என்பது உண்மை என்றால், அது ஒருபோதும் மாறாதது. அதனால்தான் கடவுளை எப்போதும் மாறாதது என...