Monday, June 19, 2023

மாவிரதம் எனும் காளாமுகம்

சைவ சித்தாந்த வாதிகளால் அகப்புறச் சமயம் என்று வகுக்கப்படும் சமயங்களில் மாவிரதமும் ஒன்று.

சைவத்தின் இருபெரும் பிரிவுகளில் ஒன்றான ஆதி மார்க்கத்தைச் சேர்ந்த ஒரு சமய பிரிவாகும். மற்றைய பெரும் பிரிவு மந்திரமார்க்கம் எனப்படும்.

இவர்கள் மாவிரதம் எனும் வாழ்வையே விரதமாக மேற்கொள்ளும் வழிமுறையை கொள்வதால் மாவிரதிகள் என்று அழைக்கப்பட்டார்கள் . பிறவித் தொடர்ச்சியை அறுத்து இறைவனை அடைவதற்கு வாழ்வையே கடினமான விரதமாக அனுட்டிக்கவேண்டும் என்பது மகாவிரதிகளது வாதம். உடலாலும் உள்ளத்தாலும் தூய்மையுடனும், கட்டுப்பாட்டுடனும் வாழ்வது இறைவனை அடைவதற்கு அவசியம் என்றும், அதற்கு மிகுந்த கட்டுப்பாட்டுடன் கூடிய வாழ்க்கையே தேவை என்பதும் மாவிரதிகளின் நம்பிக்கை.

தவம் போன்ற வாழ்க்கை முறையால் அறியாமை இருள் நீங்கி முகத்தில் ஞான ஒளியுடன் காணப்பட்டதால் காளாமுகர்கள் என்றும் இந்த மகாவிரதிகள் அழைக்கப்பட்டனர். 'காளா' என்றால் இருள் நீங்கிய , இருளற்ற, ஒளிபொருந்திய என்று பொருள்படும்.

காளமுகர், காளாமுகர் என்ற பெயர் குழப்பம் காரணமாக பிற்காலத்தில் மகாவிரதிகள் என்றே காளாமுகர்கள் அடையாளப்படுத்தப் படுகின்றனர். காளமுகர்கள் என்பவர்கள் முகத்தில் கருஞ்சாம்பலை, கருமையை பூசும் ஒரு குழுவினரைக் குறிப்பதாகும். 'காள' என்றால் கரிய என்றும், 'காளா' என்றால் இருளற்ற என்றும் பொருள் வேறுபாடு உடைய இரு வார்த்தைகளாகும்.

காளாமுகம் என்பது ஆதி மார்க்க சைவத்தின் முதற் பிரிவான பாசுபத சைவத்தில் இருந்து கிளைத்த ஒரு சமய பிரிவென்று கூறப்படுகிறது.

வேதாந்த வழிமுறைகளில் சிவனை முழுமுதற் கடவுளாக வழிபட்ட சமய பிரிவாக இது அறியப்படுகிறது. 

பாசுபதத்தை முறைப்படுத்திய லகுலீசரின் வழிமுறைகள் மாவிரதிகளிடம் செல்வாக்கு செலுத்தியதால் லாகுலர் என்றும், வாழ்விற்கு பிரமாணங்களை வகுத்து வாழ்ந்தவர்கள் என்பதால் பிரமாணியர் என்றும் காளாமுகர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இறைவன் அவதாரங்களை எடுப்பார், கடவுளர் பலர் உள்ளனர் போன்ற நம்பிக்கைகள் காரணமாக சைவ சித்தாந்த வாதிகள் அகப்புறச் சமயம் என்று காளாமுகத்தைக் குறிப்பிடுகின்றனர்.

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -33



No comments:

கடவுள் ஏன் பிறப்பு எடுக்க முடியாது?

பிறப்பு எடுத்தால் அது ஏன் கடவுள் இல்லை என்கிறோம்? கடவுள் என்பது உண்மை என்றால், அது ஒருபோதும் மாறாதது. அதனால்தான் கடவுளை எப்போதும் மாறாதது என...