Friday, June 23, 2023

ஆன்மாவின் அளவு

ஆன்மீகத்தின் அடிப்படையாக இருப்பது ஆன்மா. நான் என்றால் அது ஆன்மாவையே குறிக்கும் என்கிறது ஆன்மீகம். அப்படியானால் இந்த ஆன்மா எங்கே இருக்கிறது? அதன் அளவு எவ்வளவு? என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.

ஒரு ஆணும் பெண்ணும் கூடி, ஒரு கருமுட்டை ஒரு விந்தணு என்பவை சேர்த்து ஒரு சிறு துணிக்கையாக கரு உருவாகும் போது அங்கு ஆன்மாவும் இருக்கிறது. அப்படியானால் ஒரு சிறுகலமாக உருவான கருவின் உள்ளேயே அது தோன்றிநிற்பதால் அது ஒரு அணுவைப் போன்று சிறிதாக தோற்றமளிக்கிறது.

இவ்வாறு அணுவிலும் சிறிதாக ஆன்மாவை கருதவைப்பது ஆணவம் என்பது ஆன்மீகத்தில் தேர்ந்தோர்களது வாதம். அப்படியானால் ஆன்மாவின் அளவு எவ்வளவு?

அதற்கு முதலில் உயிர்கமைப் பற்றி இருக்கும் ஐந்து விதமான உறைகளைப்பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு உயிர்களைச் சுற்றியும் இந்த உறைகள் தோன்றும். அவை ஒவ்வொன்றாக மறைந்து இல்லாமல் போவதே முக்திநிலை என்று கூறப்படுகிறது.

அன்னமயகோசம்
பிராணமயகோசம்
மனோமயகோசம்
விஞ்ஞானமயகோசம்
ஆனந்தமயகோசம்
என்பவையே உயிர்களைச் சூழ்ந்து நிற்கும் அந்த ஐந்து வகையான உறைகள்.

அன்னமயகோசம் என்பது உணவால் உண்டான எமது உடம்பாகும்- ஜட உடல்.

பிராணமயகோசம் என்பது தசவாயுக்கள் என்று சொல்லப்படும் பத்துவிதமான வாயுக்களால் உண்டான தேகம்- ஆவி உடல்.

மோனோமய கோசம் என்றால் எமது எண்ணங்கள் சந்தேகங்கள் என்னும் மனத்தால் உருவான தேகம்-மனவுடல்.

விஞ்ஞானமயகோசம் என்பது எமது அறிவால் உருவான தேகம்- அறிவுடல்.

ஆனந்தமயகோசம் என்பது முக்தி நிலையில் ஆன்மா பேரின்பத்தை அனுபவிக்கும் வரையறை அற்ற உடல்.

இப்போது ஆன்மாவின் அளவை ஒவ்வொரு உடலில் நின்றும் காண்போம்.

இந்த உணவால் உண்டான ஜடஉடல் முழுவதும் ஆன்மாவை சார்ந்த அதன் கட்டுப்பாட்டில் தானே இருக்கிறது. அதன் அத்தனை செயல்களும் உடல் முழுமைக்கும் தானே செயற்படுகிறது. அப்படியானால் இந்த ஆன்மா இந்த ஜட உடல் முழுவதும் வியாபித்து நிற்கிறது என்பது தானே பொருள். அப்படியானால் இந்த ஆன்மாவின் அளவு இந்த உடலில் அளவிற்கு இருக்கிறது என்று கொள்ளலாம்.

சரி அடுத்து பிராணமயகோசம். இது பத்து வாயுக்களால் உண்டான தேகம் என்று பார்த்தோம். எமது புலனுணர்வுகள் அனைத்தும் கடத்தப்படுவது இந்த தசவாயுக்களால்தான். உடலுக்குள் இந்த பிராணன் இருக்கும் வரையிலேயே நாம் பார்த்து கேட்டு நுகர்ந்து என்று புலன்களால் அனுபவிக்கும் அத்தனையையும் அனுபவிக்கின்றோம். இங்கே புலன்களால் அனுபவிக்கப்படும் அத்தனையும் பிராணமய உடலாலேயே நிகழ்கின்றன. எனவே புலன்களால் அனுபவிக்கப்படும் அத்தனை பரப்பிற்கும் இந்த ஆன்மாவின் வியாபகம் இருக்கிறது என்று கொள்ளலாம்.

அடுத்து மனோமயகோசம். மனம் என்பது எண்ணங்கள் மற்றும் சந்தேகங்கள் என்பவற்றால் உருவான ஒன்று. எமது எண்ணங்களின் தூரம் எவ்வளவு? அதன் எல்லைகள் எவ்வளவு? நாம் கண்டு கேட்டு உய்த்துணர்ந்த அத்தனை தூரங்களுக்கு மனம் பயணிக்கிறது அல்லவா. அப்படியானால், இந்த மனம் பயணிக்கும் அத்தனை பரப்பும் மனவுடல் மூலம் ஆன்மா வியாபித்து நிற்கிறது என்று கொள்ளலாம்.

 மனத்தில் எல்லைகளே மிகமிகக் பெரியது. அப்படியானால் அறிவின் எல்லையை சிந்தித்து பாருங்கள். அறிவு என்பது எல்லாவற்றையும் பற்றிய உறுதியான முடிவு. இந்த பிரபஞ்சம் அதனைக் கடந்த பகுதி என்று அறிவு மனதைவிட மிகவும் விசாலமானது. இங்கே அறிவு என்பது புலன் அறிதலல்ல, புலன்களை கடந்த அறிவு. அப்படியானால் இந்த ஆன்மாவின் வியாபகம் இந்த அறிவின் எல்லையைகளை தனதாகக் கொண்டது எனலாம்.

மற்றையது ஆனந்தமயகோசம். இது உடல் சார்ந்த, புலன் சார்ந்த இன்பமல்ல. இறைவனின் பதத்தை அடைந்து அனுபவிக்கும் பேரின்பம். உடலற்ற புலன்களற்ற இன்பத்துக்கு எல்லைகள் ஏது? இறைபதத்தில் கலந்து நின்று இன்பத்தை அனுபவிப்பதால் இறைவனின் எல்லையற்ற வியாபகத்தை இந்த ஆன்மாவின் வியாபகமாக கொள்ளலாம்.

எனவே இறைவனின் எல்லையற்ற பரப்பின் அளவில் இந்த ஆன்மாவின் அளவும் இருக்கிறது என்று கொள்ளலாம். அதனால்தான் ஆன்மாக்களை அணுவிலும் சிறிதாக நினைக்க வைப்பது ஆணவம் என்று ஆன்மீக ஞானம் பெற்றவர்கள் கூறுவர்.

இப்போது சிந்தித்து பாருங்கள். நீங்கள் என்பது எல்லையற்ற ஆன்மா. இந்த உலகம், அதிலுள்ள உயிர்கள், இந்த பிரபஞ்சம் என்று அனைத்தும் உங்களுக்குள் அடங்குகிறது அல்லவா? இந்த நிலையில் நீங்கள் ஒரு விஸ்வரூபியாக தோன்றுகிறீர்கள். 

நானே உலகமாகவும், உயிர்களாகவும், இந்த பிரபஞ்சமாகவும் இருக்கிறேன் என்பது இந்த ஆன்மா பற்றிய புரிதலில் கூறப்படும் வார்த்தைகள். அவ்வாறு நான் என்பது ஆன்மா என்பதையும், அந்த ஆன்மாவின் வியாபகத்தையும் ஒருவன் தன்னுணர்வு நிலையில் கூறினால், அவனையே கடவுளாக கருதி வழிபட ஆரம்பிப்பது அறியாமை.

ஆணவத்தின் பிடியில் ஆறடி உருவுக்குள் அடங்கிக் கிடக்கும் மனிதர்களை, அகிலமே அவனுக்குள் அடக்கம் என்று உணர வைப்பதே ஆன்மீக ஞானம்.

அப்படி உணர்ந்தவன் வெளிப்படுத்தியதை உணர்ந்து தானும் அந்த நிலையை அனுபவிக்காமல், வெளிப்படுத்தியவனை வணங்குவது என்பதே அஞ்ஞானம்.

இறைவனின் வியாபகமும், ஆன்மாவின் வியாபகமும் ஒன்றாக இருப்பதாலோ, இறைவனின் பேரின்ப நிலையை ஆன்மாவும் அனுபவிப்பபதாலோ இறைவனும் ஆன்மாவும் ஒன்றாக முடியாது. எல்லையற்ற அளவில் பேரின்பத்தை வழங்கும் நிலை இறைநிலை. அதைப் பெற்று அனுபவிக்கும் நிலையே ஆன்மாவின் நிலை என்று தெளிவுபடுத்தி நிற்பது சித்தாந்தம்.

இறைவன் பேரின்பமாக இருக்கின்றார். ஆன்மா முக்தி நிலையில் பேரின்பத்தை அனுபவிக்கிறது.

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -35



No comments:

கடவுள் ஏன் பிறப்பு எடுக்க முடியாது?

பிறப்பு எடுத்தால் அது ஏன் கடவுள் இல்லை என்கிறோம்? கடவுள் என்பது உண்மை என்றால், அது ஒருபோதும் மாறாதது. அதனால்தான் கடவுளை எப்போதும் மாறாதது என...